Published : 10 Aug 2018 07:06 PM
Last Updated : 10 Aug 2018 07:06 PM

மழை வருவதற்குள் அவசரம்: கிரீசில் புஜாராவின் வேதனையைத் தீர்த்து வைத்த ரன் அவுட்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் மழைக்கு இடையே சிறிது நேரம் கிடைத்து ஆட்டம் தொடங்கப்பட்ட போது புஜாரா தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டார்.

கோலிதான் அவரை இழுத்துவிட்டார். இவர் ஓடியிருக்கக் கூடாது, பந்து மட்டையில் பட்டதும் ஆர்வமிகுதியில் ஓடிவிட்டார் பாவம்.

1 ரன்னில் அவர் ரன் அவுட் ஆன உடனேயே மழை கொஞ்சம் கனமாக விழ ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள்.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இப்படியே ஆடினால் 2 முழு நாட்கள் ஆட்டமிருந்தாலே போதும் தோற்க வாய்ப்பு ஏற்படும்.

24 பந்துகளைச் சந்தித்த புஜாரா தட்டுத்தடுமாறினார், ஆண்டர்சன் இவரைப் படுத்தி எடுத்தார், அவுட் ஸ்விங்கர்கள் மட்டையைக் கடந்து செல்ல இன்ஸ்விங்கர்கள் இவர் உடலை இரண்டாக்கி பின்னால் சென்று கொண்டிருந்தன.

இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு இன்னிங்ஸின் 9வது ஓவரை ஆண்டர்சன் வீச புஜாராவுக்கு ஒரு பந்து அதிசயமாக மட்டையில் பட பந்து பாயிண்ட் திசைக்குச் சென்றது, ஆஹா புஜாரா மட்டையில் பட்டுவிட்டது, இப்போது ஓடினால்தான் உண்டு என்று கோலி ரன்னுக்கு அழைக்க, புஜாரா பாதிதூரம் கடந்து ரன்னர் முனை நோக்கி ஓடி வர அங்கிருந்து வந்த கோலி திடீரென ரன் வேண்டாம் என்று திரும்பவும் தன் முனைக்கு ஓடிவிட்டார்.

புஜாரா நடுவழியில் திக்குத் தெரியாத நபர் போல் நின்றார், ரன் அவுட் ஆனார். நிச்சயம் கோலிதான் இந்த ரன் அவுட்டுக்குக் காரணம், அழைத்து விட்டு இழுத்து விட்டார்.

ஆனால் புஜாரா ஆடியது காலம் விரைவில் பதில் சொல்லும் என்பது போல்தான் இருந்தது, எப்போது வேண்டுமானாலும் அவர் ஒன்று பவுல்டு அல்லது எல்.பி.ஆகுவது போல் கிரீசிற்குள் நின்று கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்.

இவரை ரன் அவுட் செய்தது கோலியின் கோபத்தை உருவாக்கியிருந்தால் நிச்சயம் தன் தரப்பில் ஒரு இன்னிங்ஸை ஆடி ஈடுகட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x