Last Updated : 06 Aug, 2018 03:50 PM

 

Published : 06 Aug 2018 03:50 PM
Last Updated : 06 Aug 2018 03:50 PM

கோலியை வீழ்த்த புதிய வியூகம்; அழுத்தம் மறைமுகமாக வரும்: கள யுத்தியை வெளிப்படையாகக் கூறிய இங்கிலாந்து பயிற்சியாளர்

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள 2-வது டெஸ்ட் போட்டியின் போது கோலிக்கு எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்கமாட்டோம், மாறாக வேறுயுத்தியில் கோலிக்கு அழுத்தம் இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரிவேர் பேலிசிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் கேப்டன் விராட் கோலியைத் தவிர அனைவரும், இரு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சுக்கு இரையானார்கள். விராட் கோலி மட்டுமே இங்கிலாந்து வீரர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

இதற்கிடையே இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலானுக்குப் பதிலாக ஆலிவர் போப், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2-வது போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் எப்படி கள யுத்தியை செயல்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டிரிவேர் பேலிசிஸ் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''உலக கிரிக்கெட்டில் விராட் கோலி மட்டும் சிறந்த பேட்ஸ்மேனாக இல்லாமல் இருந்திருந்தால், அவரை எப்போதோ எங்கள் வீரர்கள் ஆட்டமிழக்கச் செய்திருப்போம். முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் விராட் கோலியின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது. அதை வர்ணிக்க முடியாது.

ஆதலால், அடுத்துவரும் போட்டிகளில் எங்கள் யுத்தியை மாற்றிக்கொள்ள இருக்கிறோம். விராட் கோலிக்கு கொடுக்கும் நெருக்கடியை, அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நாங்கள் கொடுக்கப் போகிறோம்.

அவர்களுக்குப் பந்துவீச்சில் நாங்கள் கொடுக்கும் நெருக்கடியால், அவர்கள் விக்கெட்டை எளிதாக இழப்பார்கள். அந்த அழுத்தம் முழுவதையும் கேப்டன் கோலி மீது சுமத்துவார்கள். இதனால், கோலிக்கு அழுத்தம் அதிகரிக்கும், விக்கெட்டை இழப்பார். இதுதான் எங்கள் யுத்தியாகும்.

மற்ற வீரர்களுக்கு மட்டுமே நெருக்கடி இருக்கும். விராட் கோலிக்கு மற்ற வீரர்களால் அழுத்தம் ஏற்படும்.

முதல் டெஸ்ட்டின் இரு அணிகளின் 4 இன்னிங்ஸ்களிலும் லெக் சைட், ஆப் சைட், மிட் ஆப் என அனைத்துப் பகுதிகளிலும் விக்கெட்டுகளை வீரர்கள் இழந்தார். ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சுக்கு அசராமல் பேட் செய்தவர் கோலி. இந்தப் பந்துவீச்சில் பேட் செய்வது கடினம் எனத் தெரிந்தும் விராட் கோலி சிறப்பாக விளையாடினார்.

இந்திய அணி சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளது. ஆனால், பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டு, பந்து வருவதற்கு முன்கூட்டியே பேட்டைக் கொண்டு சென்று தேவையில்லாமல் ஆட்டமிழந்தார்கள். அதுபோன்ற தவறைத் திருத்திக்கொண்டு விளையாடுவார்கள் என நம்புகிறேன்.

எங்கள் அணியினரும் சுழற்பந்துவீச்சைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆதலால், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து தீவிரமான பயிற்சி எடுத்து வருகிறோம்.

அஸ்வினின் வலது கை சுழற்பந்துவீச்சை சமாளிக்கத் திறமையான வலதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதால்தான் டேவிட் மலானை நீக்கிவிட்டு ஆலிவர் போப்பை 2-வது டெஸ்ட் போட்டியில் சேர்த்திருக்கிறோம்.

வழக்கு தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் சென்றுள்ளார் என்பதால், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வோஸ் சிறந்த ஆல்ரவுண்டர், வேகப்பந்துவீச்சாளர். வலைப்பயிற்சியில் 14 ஓவர்கள் வரை வீசிவிட்டு, களைப்படையாமல், டி20 போட்டியிலும் விளையாடக்கூடிய திறமை படைத்தவர் வோக்ஸ்.

இங்கிலாந்து, இந்திய அணிக்கு ஒரேமாதிரியான பிரச்சினைதான் இருக்கிறது. ஸ்லிப்பில் இருக்கும் பீல்டர்கள் சரிவர கேட்ச்களைப் பிடிப்பதில்லை. இங்கிலாந்து அணியில் டேவிட் மலான், இந்திய அணியில் ஷிகர் தவண், ரஹானே ஆகியோரும் கேட்சுகளைத்  தவறவிட்டனர். இதையும் வரும் போட்டியில் திருத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய அணியை 2-வது போட்டியிலும் வீழ்த்த பல்வேறு யுத்திகளோடு களமிறங்குவோம்.''

இவ்வாறு பேலிசிஸிஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x