Published : 04 Aug 2018 07:26 PM
Last Updated : 04 Aug 2018 07:26 PM

கீழ்வரிசை வீரர்களிடமிருந்து டாப் ஆர்டர் கற்றுக் கொள்ள வேண்டும்: விராட் கோலி

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோரது தனிச்சிறப்பான ஆட்டத்தினால் ஒரு அருமையான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

194 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிவந்த போது ஒரு கவனம் சிதறிய தருணத்தில் பென் ஸ்டோக்ஸ் இன்ஸ்விங்கரை லெக் திசையில் பிளிக் செய்யும் தவறான முயற்சியில் விராட் கோலி எல்.பி.ஆக மற்ற சம்பிரதாயங்களை இங்கிலாந்து செவ்வனே முடித்து வைத்தது.

விஜய், தவண், ராகுல், ரஹானே 2 இன்னிங்ஸ்களிலும் சொதப்ப முதல் இன்னிங்ஸில் இஷாந்த், உமேஷ் யாதவ், ஸ்டாண்ட் கொடுக்க இங்கிலாந்து ரன் எண்ணிக்கையை அச்சுறுத்தினார் விராட் கோலி. மறக்க முடியாத சதத்தில் 105 ரன்களை கடைசி 3 விக்கெட்டுகளுக்காகச் சேர்த்ததில் கோலியின் பங்களிப்பு 92 ரன்கள்! ஆகவேதான் அவர் கூறுகிறார் கீழ் வரிசை வீரர்கள் நம் கண்ணாடி என்று.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து விராட் கோலி கூறியதாவது:

முதலில் இது ஒரு அபாரமான டெஸ்ட் போட்டி என்பதைக் கூறி விடுகிறேன். உற்சாகமான இந்த டெஸ்ட் போட்டியில் ஆடியதில் மகிழ்ச்சி.

நிறைய தருணங்களில் மீண்டெழுந்தோம், நல்ல கேரக்டர் காட்டினோம். ஆனால் இங்கிலாந்து ஓய்வு ஒழிச்சலில்லாமல் படுத்தி எடுத்தனர். எங்களை ரன்களுக்காக கடினமாக உழைக்குமாறு செய்துவிட்டனர்.

நிச்சயமாக இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி ஆடியிருக்க வேண்டும். ஆனால் போராட்டக்குணம் பெருமையளிக்கிறது. அணியினரிடம் பேச நேரம் போதவில்லை. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து சாதக அம்சங்களை எடுத்துக் கொள்வோம்.

பெரிய தொடரில் இந்தமாதிரியான ஒரு தொடக்கம் பெருமையளிக்கிறது.

கீழ் வரிசை வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. உமேஷ், இஷாந்த் களத்தில் அங்கு நின்றனர். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மெனாக இப்படிப்பட்ட விஷயங்கள் நம் முன் கண்ணாடியைக் காட்டுகிறது.

நாம் பாசிட்டிவாக, அச்சமின்றி ஆடி எதிர்மறைச் சிந்தனைகளைக் களைய வேண்டும்.

அணியின் பார்வையில் சதம் எடுத்தேன், அடிலெய்ட் சதத்துக்கு அடுத்த என்னுடைய சிறந்த சதம். இதனை நான் நினைவில் வைத்திருப்பேன்.

அணியை வெற்றிக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும்போது நல்லுணர்வு தோன்றுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் அபாரமானது, எனக்குப் பிடித்தமானதும் கூட.

உயர்தர வீரர்களுக்கு எதிராக நம்மை நாம் சோதனை உட்படுத்திக் கொள்வதைப் போல் வேறொன்றும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x