Published : 24 Jul 2018 08:53 AM
Last Updated : 24 Jul 2018 08:53 AM

12 வருடங்களுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி ஒயிட்வாஷ்: இலங்கை டெஸ்ட் தொடரை 0-2 என இழந்தது

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக வென்றது.

கொழும்பு நகரில் நடைபெற்று வந்த இந்த டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. தனஞ்ஜெயா டி சில்வா 60, குணதிலகா 57, கருணாரத்னே 53, அகிலா தனஞ்ஜெயா 43 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 9 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 34.5 ஓவர்களில் 124 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 48, குயிண்டன் டி காக் 32 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் அகிலா தனஞ்ஜெயா 5, பெரேரா 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

214 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்ஸை விளையாடி 81 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கருணாரத்னே 85, மேத்யூஸ் 71, குணதிலகா 61 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து 490 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தியூனிஸ் பிரைன் 45, டெம்பா பவுமா 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக டீன் எல்கர் 37, மார்க்ரம் 14, ஹசிம் ஆம்லா 6, டு பிளெஸ்ஸிஸ் 7, கேசவ் மகாராஜ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தியூனிஸ் பிரைன், டெம்பா பவுமா ஜோடி தொடர்ந்து விளையாடியது. இந்த ஜோடி சற்று நிலைத்து நின்று விளையாடி இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. 6-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை ரங்கனா ஹெராத் பிரித்தார். 98 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்த நிலையில் டெம்பா பவுமா, ஹெராத் பந்தில் திக்வெலாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் கண்டது. குயிண்டன் டி காக் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் எல்பிடள்யூ ஆனார். சிறப்பாக விளையாடி சதம் அடித்த தியூனிஸ் பிரைன் 232 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் ஸ்டெம்புகளை பறிகொடுத்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங் கிய ரபாடா 18, ஸ்டெயின் 6 ரன்களில் நடையை கட்ட தென் ஆப்பிரிக்க அணி 86.5 ஓவர்களில் 290 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணி தரப் பில் ரங்கனா ஹெராத் 6 விக்கெட் களையும் பெரேரா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக 2-0 என கைப்பற்றி கோப்பையை வென் றது. காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கருணாரத்னே தட்டிச் சென்றார்.

தென் ஆப்பிரிக்க அணி 12 வருடங்களுக்கு தற்போதுதான் டெஸ்ட்டில் ஒயிட் வாஷ் பெற்றுள்ளது. கடைசியாக அந்த அணி 2006-ம் ஆண்டு இதே இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என இழந்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x