Published : 06 Jul 2018 03:58 PM
Last Updated : 06 Jul 2018 03:58 PM
இங்கிலாந்துடன் ஒருநாள் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அயர்லாந்து அணியுடனான முதலாவது டி20 போட்டியில் இடதுபெருவிரலில் காயம் அடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக டி20 போட்டியில் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், லண்டன் லீட்ஸ் நகரில் பும்ராவுக்கு கையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து, இந்தியா திரும்பியுள்ளார். அடுத்து வரும் நாட்களில் அவருக்கு படிப்படியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு, டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்குவதற்கு அணிக்குள் திரும்ப பிசிசிஐ மருத்துவக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து பிசிசிஐ இடைக்கால செயலாளர் அமிதாப் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில், ‘‘கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஜஸ்பிரித் பும்ராவுக்கு லண்டனில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு நாடு திரும்பியுள்ளார். அவருக்குப் பதிலாக ஒருநாள் போட்டிக்கான அணியில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக டி20 போட்டியில் குர்னல் பாண்டியா சேர்க்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்குது.
இங்கிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டி வரும் 12-ம் தேதி நாட்டிங்காமிலும், அதைத் தொடர்ந்து 14-ம் தேதி லண்டனிலும், 17-ம் தேதி லீட்ஸ் நகரிலும் நடக்கிறது.
ஆகஸ்ட் 1-ம் தேதி பிரிம்பிங்ஹாம் நகரில் நடக்கும் முதலாவது டெஸ்ட் போட்டித் தொடருக்கு முன்பாக பும்ரா அணியில் சேர்ந்துவிடுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவண், ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி, தினேஷ் கார்த்திக், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், சர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT