Published : 29 Jun 2018 08:47 AM
Last Updated : 29 Jun 2018 08:47 AM

அயர்லாந்துடன் இன்று மீண்டும் மோதல்: டி 20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் டப்ளின் நகரில் இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு எதிராக இரு டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டப்ளின் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியஅணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 61 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 97 ரன்களும், ஷிகர் தவண் 65 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16 ஓவர்களில் 160 ரன்கள் சேர்த்தது. சுரேஷ் ரெய்னா 10, தோனி 11, விராட் கோலி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 6 ரன்கள் சேர்த்தார். அயர்லாந்து தரப்பில் பீட்டர் சேஸ் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.

209 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அயர்லாந்து அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஷனோனன் 60, தாம்சன் 12 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, யுவேந்திரா சாஹல் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று 2-வது ஆட்டத்தில் மீண்டும் அயர்லாந்து அணியை சந்திக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை சோனி சிக்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், சித்தார்த் கவுல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. இவர்கள் களமிறங்கும் பட்சத்தில் ரெய்னா, மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா ஆகியோர் வெளியே அமரவைக்கப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x