Last Updated : 25 Jun, 2018 01:57 PM

 

Published : 25 Jun 2018 01:57 PM
Last Updated : 25 Jun 2018 01:57 PM

இங்கிலாந்து ‘த்ரில்’ வெற்றி: ஜோஸ் பட்லரின் அற்புத சதத்தால் ‘வொயிட்வாஷ்’ ஆனது ஆஸி

ஜோஸ் பட்லரின் பொறுப்பான சதத்தால் மான்செஸ்டரில் நேற்று நடந்த 5-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 5-0 என்று ‘வொயிட்வாஷ்’ செய்தது இங்கிலாந்து அணி.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் 140 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணியிடம் முதல்முறையாக ஒருநாள் போட்டித் தொடரில் அனைத்துப் போட்டியில் தோல்வி அடைந்து (க்ளீன்ஸ்வீப்) தொடரை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் இந்தத் தோல்வி மிகப்பெரிய கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.

சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற ஜோஸ்பட்லருக்கு, இந்தத் தொடரின் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்று வென்றுவிட்டதால் என்னவோ தொடக்க வீரர்கள் முதல் நடுவரிசை வீரர்கள் வரை மிகவும் சொதப்பலாக, அக்கறையின்றி பேட்டிங் செய்தனர். கடந்த போட்டிகளில் சதம் அடித்த ஜேஸன் ராய், ஹேல்ஸ், பேர்ஸ்டோ ஆகியோர் இந்தப் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ஏன் என்று தெரியவில்லை.

இங்கிலாந்து அணியில் ஜோஸ்பட்லரின் 110 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராகும். அடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்பது ரஷித்,ஹேல்ஸ் சேர்த்த 20 ரன்கள் என்றால் மற்ற வீரர்களின் பேட்டிங் திறமையின் மோசமானநிலையை அறியலாம்.

ஜேஸன் ராய், ஹேல்ஸ், பேர்ஸ்டோ, ரூட், மோர்கன், மொயின் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடரை கைப்பற்றிவிட்டோமே இந்த ஆட்டம் தேவையா என்ற நினைப்பில் மேம்போக்காக விளையாடி ஆட்டமிழந்தார்களா அல்லது வெற்றியின் மமதையால் வீழ்ந்தார்களா எனத் தெரியவில்லை.

இதனால், 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், 114 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இங்கிலாந்து இருந்தது. வெற்றியுடன் நாடு திரும்ப வேண்டும் என்று தீரா அவாவுடன் ஆஸ்திரேலிய வீரர்களும் மல்லுக்கட்டினார்கள். ஒருவேளை பட்லர் விரைவாக ஆட்டமிழந்திருந்தால், 150 ரன்களுக்குள் இங்கிலாந்தின் ஆட்டம் முடிந்திருக்கும்.

ஆனால், ஜோஸ்பட்லரின் அர்ப்பணிப்பான பேட்டிங், அவருக்கு ஈடுகொடுத்து விளையாடிய ரஷித் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

டி20 போட்டியிலும், ஒருநாள் போட்டியிலும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய ஜோஸ் பட்லர், சதம், அரை சதத்தைக் குறைந்த பந்துகளில் எட்டக்கூடியவர். ஆனால், நேற்று அணியின் வெற்றிக்காக மிகுந்த பொறுமையுடன், நிதானமாக பேட் செய்து சதம் அடிக்க 100 பந்துகளுக்குமேல் எடுத்துக்கொண்டது அவரின் பொறுப்புணர்ச்சியைக் காட்டியது. ஆஸ்திரேலிய அணியின் ஒட்டுமொத்த கனவை பட்லரின் பேட்டிங் தகர்த்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணிக்கு ஜோஸ் பட்லர், ஹேல்ஸ், பேர்ஸ்டோ, ரூட், ஜேஸன் ராய் ஆகியோரின் பேட்டிங் நிச்சயம் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இருக்கும் என்பது இந்தத் தொடரின் முடிவில் அறிய முடிகிறது.

ஆஸ்திரேலிய அணியா இப்படி விளையாடியது என்று கேட்கும் அளவுக்கு இந்தத் தொடர் அந்த அணியினருக்கு மறக்க முடியாத தொடராக அமைந்திருக்கும். முக்கிய பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாததன் அருமையை ஆஸ்திரேலிய அணி மெல்ல உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் தோல்வியின் அனுபவத்தால், வார்னருக்கும், ஸ்மித்துக்கும் விரைவில் தடைகள் தளர்த்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும், மிட்ஷெல் ஜான்ஸன், ஸ்டார்க், ஹேசல்வுட் உள்ளிட்ட முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாததும், குறிப்பாக அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சாளர்களும் இல்லாததும் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

திறமையான, அனுபவமான வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றத்துடன் இருப்பது தெளிவாகிறது, இன்னும் உலகக்கோப்பைப் போட்டிக்கு 11 மாதங்களே இருக்கும் நிலையில், தன்னைத் தயார்படுத்திக்கொள்வது அவசியமாகும். இல்லாவிடில், சாம்பியன்ஸ் கோப்பை அனுபவம்தான் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு நேரும்.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஏற்கெனவே 4 போட்டிகளிலும் வென்று இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியதால், 5-வது போட்டி ஒருமுறைக்காகவே இருந்தது.

இதில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி மான்செஸ்டர் நகரில் நேற்று நடந்தது. டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. 34.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் இலக்கை அடைந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிஎம் ஹெட்(56) மட்டுமே அரைசதமும், கேரி(44), ஷார் (44) ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்களான ஆரோன் பிஞ்ச்(22), ஸ்டோய்னிஸ்(0), மார்ஷ்(8), பைனி(1), அகர்(0), ரிச்சர்ட்ஸன்(14), லியான்(1) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கடந்த இரு போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய மார்ஷ் இந்த போட்டியில் மோசமாக பேட் செய்து 8 ரன்களில் வெளியேறினார். 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 105 ரன்களுக்கு மீதமிருந்த விக்கெகட்டுகளையும் இழந்தது. 34.4 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்டுகளையும், குரன் 2 விகக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் ரிச்சார்ட்ஸன், ஸ்டான்லேக் ஆகியோரின் வேகத்தில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தனர். 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், 114 ரனக்ளுக்கு 8 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

9-வது விக்கெட்டுக்கு, ஜோஸ்பட்லருடன், ரஷித் சேர்ந்தார். இருவரின் பேட்டிங் அணியை வெற்றி அருகே அழைத்துச் சென்றது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை மிகவும் அனாசயமாக சமாளித்த பட்லர் மிகவும் நிதானமான ஆட்டத்தைக் கையாண்டார். இவரின் விக்கெட்டை கழற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் முயன்றும் முடியவில்லை. அனுபவ பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லாத குறை, நன்கு வெளிப்பட்டது.

74 பந்துகளில் அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர், சதம் அடிக்க 114 ரன்கள் எடுத்துக்கொண்டார். வழக்கமாகக் குறைந்த பந்துகளில் சதம், அரை சதம் அடித்த பழக்கப்பட்ட பட்லர் அணியின் நலன் கருதி நிதானமாக விளையாடினார். பட்லர், ரஷித் கூட்டணி 9-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ரஷித் 20 ரன்களில் வெளியேறினார். ஆனால், பட்லர் 110 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். ஜே பால் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் ரிச்சார்ட்ஸன், ஸ்டான்லேக் தலா 3 விக்கெட்டுகளையும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x