Published : 23 Jun 2018 07:10 PM
Last Updated : 23 Jun 2018 07:10 PM
இந்திய அணியில் இடம்பெற வேண்டுமெனில் யோ-யோ டெஸ்ட்டில் பங்கேற்றேயாக வேண்டும், இதில் எந்த விதமான சலுகையும் காட்டப்பட மாட்டாது என்று இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மொகமது ஷமி, சஞ்சு சாம்சன், அம்பாத்தி ராயுடு ஆகியோர் யோ-யோ தோல்வியினால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விகளை எதிர்கொண்ட ரவிசாஸ்திரி காட்டமாகவும் கறாராகவும் பதிலளித்ததாவது:
உடற்தகுதி, ஆடும் திறன் இரண்டும் சேர்ந்திருப்பது அவசியம், உடற்தகுதி சரியாக இருந்தால் திறமையை மேலும் வளர்க்கலாம். அதனால்தான் யோ-யோ மீது அழுத்தம் கொடுக்கிறோம். யோ-யோ டெஸ்ட் என்பது நிரந்தரமானது, யாராவது அதனை ஒரேயொரு முறைதான் என்று நினைத்தால் போக வேண்டியதுதான், அப்படி நினைப்பவர் துயரகரமாக தவறாகப் புரிந்து கொள்பவராகிறார்.
அதன் கொள்கை எளிதானது: யோ-யோவில் தேறினால் விளையாடலாம் இல்லையேல், தேறவில்லை எனில் நீங்கள் தேறவில்லைதான்.. வேறு வழியில்லை. கேப்டன் முன்னணியில் இதில் வழிகாட்டியாக உள்ளார். அணித்தேர்வுக்குழுவினரும் இதே கருத்தில்தான் உள்ளனர், ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் இந்தக் கொள்கையில்தான் உள்ளது, வீரர்களும் இதற்கு நன்றாகவே வினையாற்றியுள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
இங்கிலாந்து தொடர் பற்றி ரவிசாஸ்திரி கூறும்போது, “நாங்கள் எதிரணியைப் பார்த்து ஆடுவதில்லை, பிட்ச்தான் முக்கியம் நாங்கள் பிட்சைத்தான் ஆட்கொள்ள ஆடுகிறோம். அது மும்பை, லண்டன், ஜோஹான்னஸ்பர்க் என்று எதுவாக இருந்தாலும் 22 அடி பிட்ச்தான் முக்கியம். 20 விக்கெட்டுகளை எப்படி எடுக்கப் போகிறோம், 350-400 ரன்களை எப்படி எடுக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம், அதில்தான் கவனமும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT