Last Updated : 22 Jun, 2018 05:00 PM

 

Published : 22 Jun 2018 05:00 PM
Last Updated : 22 Jun 2018 05:00 PM

அன்றே ஐசிசி விதிமுறைகளை மறுத்து பவுலர்கள் சார்பாக வாதிட்ட ‘கேப்டன்’ தோனி: 2 புதிய பந்து விவகாரத்தில் சச்சினுக்குக் கூடும் ஆதரவு

ஒருநாள் போட்டியை பேரழிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்தான் 2 புதிய பந்துகளை பயன்படுத்துகிறார்கள் என்று கிரிக்கெட் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கர் கடுமையாகச் சாடியுள்ளதற்கு மற்ற வீரர்களிடமிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

இரு முனைகளிலும் இரு பந்துகள் வீசப்படுவதன் மூலம் ஒரு பந்துக்கு 25 ஓவர்கள்தான் ஆகிறது, இதனால் பந்தின் பளபளப்பு மாறுவதில்லை, இதனால் ஸ்பின் எடுப்பதில்லை, ரிவர்ஸ் ஸ்விங் ஆவதில்லை, இது ஒருநாள் கிரிக்கெட்டுக்குப் பேரழிவு என்று சச்சின் முன்மொழிய வக்கார் யூனிஸ் ‘மிகச்சரியாகச் சொன்னீர்கள் சச்சின்’ என்று வழிமொழிந்தார்.

பொதுவாக கேப்டன்களில் யாமறிந்ததிலே பேட், பந்து இரண்டுக்கும் சம உரிமை உள்ளதாக் எப்போதுமே தோனி கருதி வந்துள்ளார், மாற்றங்கள் தவறுகளின்றி துல்லியமான முடிவுகளை அளித்தால் மட்டுமே ஏற்க முடியும் என்று தோனி மிகச்சரியாகவே கருதி வந்துள்ளார். டி.ஆர்.எஸ். ஆகட்டும், ஐசிசி கொண்டு வந்த பவர் பிளே மாற்றங்களாகட்டும், பீல்டிங் கட்டுப்பாடுகளாகட்டும் குறைந்த ஓவர் கிரிக்கெட்டை நுட்பமாக அவதானிக்கும் தோனி எப்போதுமே சரியான கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளார்.

விராட் கோலியும் தற்போது சச்சின் கருத்துக்கு ஆதவவு தெரிவித்து, “இது பவுலர்களுக்கு இழைக்கப்படும் அராஜகமாகும். ஒரு புதிய பந்து இருக்கும் காலத்தில்தான் நான் ஒருநாள் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தேன். அப்போது ரிவர்ஸ் ஸ்விங் ஒரு பெரிய சவாலாக பேட்ஸ்மென்களுக்கு இருக்கும். அதுதான் சாலஞ்ச்” என்று பதிவிட்டுள்ளார்.

தோனி ஏற்கெனவே இப்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் போல் 2013-ல் இந்தியா ஆஸ்திரேலியா தொடர் ஒன்று இப்படியாக உயர்ந்தபட்ச ஸ்கோர்களுக்கான தொடராக இருந்தது, ரோஹித் சர்மா இரட்டைச் சதம் அடித்தது விராட் கோலி இந்திய அணியின் அதிவேக ஒருநாள் சதத்தை எடுத்தது, ஆஸ்திரேலியாவின் 360 சொச்ச ரன்களை இந்தியா 9 விக்கெடுகளில் வென்றது என்று பவுலர்களை சுத்தமாக ஓரங்கட்டிய தொடர்தான் அது. அந்தத் தொடரில் வெற்றி பெற்றாலும் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் தோனி புதிய களவியூகக் கட்டுப்பாடுகளை பெரிதும் வரவேற்கவில்லை, விமர்சனமே புரிந்தார்.

அந்தக் காலக்கட்டத்தில் பவர் ப்ளேயின் போது கூடுதல் பீல்டரை 30 யார்டு வட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும், வெளியே நிறுத்தக் கூடாது. இதுபுதிய விதி, இதனால் பவுலர்கள் மட்டுமல்ல கேப்டன்களும் களவியூகம் அமைப்பதில் திண்டாடினார்கள். டீப் ஸ்கொயர் லெக் வேண்டுமென்றால் மிட் ஆன், அல்லது மிட் ஆஃபைத் தூக்க வேண்டும், மிட் ஆன் அல்லது மிட் ஆஃப் அவசியம் தேவை என்றால் டீப் ஸ்கொயர் லெக் வைக்க முடியாது. 4 பீல்டர்களைத்தான் சர்க்கிளுக்கு வெளியே நிறுத்த முடியும்.

அவர் அப்போது கூறியது, “இப்போதைய இன்னிங்ஸ் 350 ரன்கள் இலக்கு என்பது முந்தைய 280,290 அல்லது 300 என்பது போன்றதா என்பதை நாம் ஆர அமர்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. பவுலர்களில் சிலர் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்கள் உண்மையில் என்ன கருதுகிறார்கள் என்றால், எதற்குப் பவுலர்கள், பவுலிங் எந்திரத்தைக் கொண்டு வந்து வையுங்கள் என்று கடுமையாக ஏமாற்றமடைந்துள்ளனர்” என்று சாடினார் தோனி.

2015-லும் தோனி தன் விமர்சன நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை, “இது என் தனிப்பட்ட கருத்து, களவியூகக் கட்டுப்பாட்டு விதிமுறையை அவர்கள் அகற்ற வேண்டுமென்று விரும்புகிறேன். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டைச் சதம் எடுக்க முடியுமா என்பது சாத்தியமற்றதாக இருந்தது, ஆனால் இப்பொது இரட்டைச் சதங்கள் வரத்தொடங்கியுள்ளன. ஒரு பீல்டரை கூடுதலாக உள்ளே கொண்டு வருவதால் நிறைய டாட் பால்கள், ரன் இல்லாத பந்துகள் வருகின்றன என்று கூறுகின்றனர், அதுதான் தர்க்கம் என்றால் 11 பீல்டர்களையும் சர்க்கிளுக்குள் கொண்டு வந்து இன்னும் டாட்பால்களை அதிகரிக்கலாமே” என்று நக்கலடித்தார்.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக தோனி கூறியது பொன்னெழுத்துக்களில் இன்று பொறிக்கப்படக்கூடியது என்னவெனில்:

50 ஓவர் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போல் மாற்றிவிட வேண்டாம். ஏனெனில் ஏகப்பட்ட சிக்சர்கள், பவுண்டரிகளும் ஆட்டத்தை சோர்வடையச் செய்வதாகவே இருக்கும்.

ஒருநாள் கிரிக்கெட்டின் சாராம்சமே 15வது ஓவர் முதல் 35வது ஓவர் வரை எப்படி ஆடுகிறோம் என்ற சவால்தான். முதல் 10-ம் கடைசி 10-ம் முக்கியமல்ல. அது டி20 போன்றதுதான். மிடில் ஓவர்களில் எப்படி ரன் எடுக்கிறோம் என்பதுதான் ஒருநாள் கிரிக்கெட்டின் சாராம்சம்” என்றார்.

அன்று களவியூகக் கட்டுப்பாட்டிற்குக் கூறியது என்று 2 முனைகளிலும் இரண்டு பந்து வீசப்படுவது குறித்த விமர்சனத்துக்கும் பொருந்தும், இதோ தோனி மீண்டும் அன்றே கூறியது:

இந்த விதிமுறைகள் ஸ்பின்னர்கள் மீது கடும் சுமையை ஏற்றுகிறது. அவர்கள் பேட்ஸ்மெனை தங்கள் பிளைட், ஸ்பின் மூலம் ஏமாற்றக்கூடியவர்கள், இப்போது பேட்ஸ்மென்கள் ஸ்வீப், ஸ்லாக் ஸ்விப், ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும்போது ஸ்பின்னர்களுக்கு விக்கெட் எடுக்க வாய்ப்பு அதிகம். எனவே பீல்டரை உள்ளே கொண்டுவருவது அல்லது பவுண்டரியில் நிறுத்துவது கேப்டனின் தெரிவே தவிர இதை ஒரு விதியாகச் செய்யக் கூடாது, என்றார் தோனி. இதனை அப்படியே 2 முனைகளிலும் வேறு வேறு பந்துகளில் வீசுவதினால் அழிந்து வரும் பந்து வீச்சுக் கலைக்கு சார்பாக தோனி கூறுவதாக அப்படியே எடுத்து கொள்ள முடியும்.

இப்போது மகேலா ஜெயவர்தனேவும் இந்தக் கோரஸில் இணைந்து, ‘இரு முனைகளிலும் இரு பந்துகள் என்பது ஸ்பின்னர்களைக் காலி செய்துள்ளது நல்ல ஸ்பின்னர்களுக்கு அணியில் இடமில்லாமலே போய் விடுகிறது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x