Published : 10 Jun 2018 09:25 AM
Last Updated : 10 Jun 2018 09:25 AM
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் லீக் சுற்றில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் ஆசியக் கோப்பை டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் வீராங்கனைகள் சானா மிர் 20, நஹிதா கான் 18 ரன்களைச் சேர்த்தனர். இந்திய வீராங்கனை ஏக்தா பிஸ்த் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய இந்தியா 16.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 49 பந்துகளில் 34 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 3-வது விக்கெட்டுக்கு மந்தனாவும், ஹர்மன்பிரீத்தும் ஜோடி யாக 65 ரன்கள் குவித்தனர்.
ஆட்டநாயகியாக ஏக்தா பிஸ்த் தேர்வு செய்யப்பட்டார். 5 லீக் ஆட்டங்களில் இந்தியா 4-ல் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. லீக் சுற்றில் வங்கதேசத்திடம் தோல்வி கண்ட இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வென்றது. இந்த நிலையில் இறுதிச் சுற்றில் வங்கதேசத்தைச் சந்திக்கிறது இந்தியா. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT