Published : 02 Jun 2018 02:09 PM
Last Updated : 02 Jun 2018 02:09 PM

நெகிழச் செய்த தோனி: சச்சின் ரசிகருக்கு பண்ணை வீட்டில் ‘சூப்பர் விருந்து’

 இந்திய அணியின் அதிதீவிரமான ரசிகரும், சச்சினின் தீவிர பக்தர், எனச் சொல்லப்படும் ரசிகர் ஒருவரைத் தனது பண்ணை வீட்டுக்கு வரவழைத்து, விருந்தளித்து, புகைப்படங்கள் எடுத்து தோனி நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், தோனி, விராட் கோலி, ரெய்னா உள்ளிட்ட புகழ் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் நேரடியாகப் பார்ப்பது என்பது கடினமான செயல். ஆனால், நட்சத்திர கிரிக்கெட் வீரர்களே ஒரு ரசிகரை வரவழைத்து விருந்து அளிப்பதும், அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொள்வதும் என்றால், அது சுதிர் கவுதமாக மட்டுமே இருக்க முடியும்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிதீவிர ரசிகரும், சச்சின் மீது தீராத பைத்தியமாக இருக்கும் சுதிர் கவுதமை தெரியாத இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருந்தால் வியப்புதான். இந்திய அணி பங்கேற்கும்  கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் அங்கு தேசியக் கொடியுடன் சென்று, உடலில் மூவர்ணத்தைப் பூசி ஆதரவு தெரிவிப்பார்.

இப்போதும் கூட சுதிர் கவுதம் தனது தலையில் இந்தியாவின் வரைப்படத்துக்கு ஏற்ப தலைமுடியை அமைத்துக்கொண்டு அதில் மூவர்ணத்தைத் தீட்டியுள்ளார்.

இந்திய அணி வெளிநாடுகளில் பங்கேற்கும் போட்டிகளில் கூட சுதிர் கவுதம் தனது சொந்த செலவில் சென்று ஆதரவு அளித்து வருகிறார். இவரின் தீவிரத்தைப் பார்த்த கிரிக்கெட் வீரர்கள் பலர், சச்சின், சேவாக், கங்குலி, தோனி ஆகியோர் சுதிர் கவுதமும் சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து அழைத்துச் செல்வதும் உண்டு.

இந்திய அணி மீதும், குறிப்பாக சச்சின் மீதும் சுதிர் கவுதமுக்கு அளவுகடந்த அன்பு உண்டு. 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின், அதைத் தொட்டுப்பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். மேலும், வீரர்களின் ஓய்வுஅறைக்கு செல்வதும் ரசிகர்களால் முடியாது.

ஆனால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஓய்வு அறைக்குள் அனுமதிக்கும் ஒரே ரசிகர் சுதிர் கவுதம் மட்டுமே. 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின், சுதிர் கவுதமை அழைத்துச் சென்ற சச்சின் டெண்டுல்கர் அவருடன் கோப்பையை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சூதாட்டச் சர்ச்சை காரணமாக 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டு மீண்டும் திரும்பி வந்த சிஎஸ்கே அணி அபாரமாக கோப்பையை வென்றது. இந்த மகிழ்ச்சியில் தோனியும், சிஎஸ்கே அணி வீரர்களும் உற்சாகமாக தங்கள் குடும்பத்தினருடன் நாட்களைக் கழித்து வருகின்றனர்.

ஆனால், இந்த நேரத்தில் ரசிகரை மகிழ்ச்சிப்படுத்த எண்ணிய தோனி, சுதிர் கவுதமை ராஞ்சி நகரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு வெள்ளிக்கிழமை விருந்தினராக அழைத்தார். அங்கு சென்ற சுதிர் கவுதமுக்கு தனது வீட்டில் தோனி சூப்பர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். தோனியுடனும், அவர்களின் குடும்பத்தினருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்ட சுதிர் கவுதம் தனது மகிழ்ச்சியையும், புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சுதிர் கவுதம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘‘எதிர்பாராதவிதமாக தோனியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ராஞ்சியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் எனக்கு தோனியும், அவரின் குடும்பத்தினரும் மிகசிறப்பான விருந்து அளித்துக் கவுரவித்தனர். இந்த நிகழ்வை வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாது. எனக்கு விருந்து வைத்து என்னை இன்ப அதிர்ச்சியில் திகைத்த வைத்த தோனிக்கும், அவரின் மனைவி சாக்ஷிக்கும் எனது நன்றிகள். சிஎஸ்கே சாம்பியன் ஆன மகிழ்ச்சியில் குடும்பத்துடன் நேரத்தைப் போக்கும் தோனி இந்த நேரத்தில் ரசிகரை கவுரப்படுத்தியது பெருமையாக இருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x