Published : 30 Apr 2018 08:08 AM
Last Updated : 30 Apr 2018 08:08 AM

மும்பைக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் குறைவாக எடுத்தோம்: கேப்டன் தோனி பேட்டி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் குறைவாக எடுத்தோம். அதனால் தோல்வி கண்டோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினார்.

நேற்றுமுன்தினம் புனேவில் சென்னை, மும்பை அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 19.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்த 2-வது தோல்வியாகும் இது. இதுகுறித்து கேப்டன் தோனி கூறும்போது, “இந்த ஆட்டத்தில் என்ன தவறு நடந்தது என்பதை உணர்ந்து கொள்வது முக்கியமானதாகும். தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் நாங்கள் 25 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். மத்திய ஓவர்களில் மும்பை வீரர்களின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது” என்றார்.

வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோஹித் கூறியதாவது: இது எங்களுக்கு முக்கிய வெற்றியாகும். இந்த வெற்றி மூலம் நாங்கள் இன்னும் பிளே ஆப் வாய்ப்பில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆட்டத்தில் பொல்லார்ட் சேர்க்கப்படவில்லை. இதை அவர் ஏற்றுக் கொண்டார். அவர் இப்போதும் மேட்ச் வின்னர்தான். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x