Published : 09 Apr 2018 07:29 PM
Last Updated : 09 Apr 2018 07:29 PM

சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பின்னடைவு?- கேதார் ஜாதவ் ஐபிஎல்-லிருந்து விலகல்

ஐபிஎல் முதல் போட்டியில் கடைசியில் முக்கியமான சிக்சரை அடித்து பிராவோவின் அதிரடியை வெற்றியாக உறுதி செய்த கேதார் ஜாதவ் இடது தொடை தசைநார் பிரச்சினை காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலும் விலகுகிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 4ம் நிலையில் இறங்கிய கேதார் ஜாதவ், ஒரு சிக்சருடன் போராடி வந்த போது 13வது ஓவரில் தசைப்பிடிப்பு காரணமாக பெவிலியன் திரும்பினார், பிறகு பின்னால் இறங்கி கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற போது கடினமாகப் போராடி ஒரு அபாரமான சிக்சர் கைகொடுக்க ஸ்கோர்கள் சமமாக, பிறகு பவுண்டரி அடித்தது சிஎஸ்கேயின் நம்பமுடியாத வெற்றியாக அமைந்தது.

இந்நிலையில் அவர் காயம் தீவிரமடைந்த நிலையில் ஐபிஎல் போட்டி முழுதும் அவர் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மைக் ஹஸ்ஸி கூறும்போது, “இன்னும் அவருக்கான மாற்று வீரரைத் தேர்ந்தெடுக்கவில்லை.இது எங்களுக்கு ஒரு பெரிய இழப்புதான், அவர் ஒரு சிறந்த வீரர், அணியில் முக்கியமான வீரர், அவரது இடத்தைப் பூர்த்தி செய்வது எங்களுக்கு ஒரு பெரிய பணிதான்:” என்றார்.

சிஎஸ்கே அணி ரூ.7.8 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது. இதனையடுத்து அம்பாட்டி ராயுடு நடுவரிசைக்கு அனுப்பப்படுவார் என்று தெரிகிறது. முரளி விஜய் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.

காயமடைந்த டுபிளெசிசும் நாளை சென்னையில் நடக்கும் போட்டிக்கு தயாராக மாட்டார் என்றே தெரிகிறது. மொஹாலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக நடைபெறும் போட்டிக்குத்தான் டுபிளெசிஸ் தயாராவார் போல் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x