Last Updated : 09 Apr, 2018 12:30 PM

 

Published : 09 Apr 2018 12:30 PM
Last Updated : 09 Apr 2018 12:30 PM

‘நரேனின் அதிரடி பேட்டிங்கே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது’’ - ஆர்சிபி வீரர் மன்தீப் பேட்டி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேனின் அதிரவைக்கும் அதிரடி ஆட்டமே போட்டியின் திருப்பு முனையாக அமைந்துவிட்டது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் மன்தீப் சிங் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் நேற்றுஇரவு நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் விரட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர் சுனில் நரேனின் ஆட்டமே அற்புதமாக இருந்தது. அதிரடியான தொடக்கத்தை அளித்த நரேன், 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் ஆர்ப்பரிக்கும் 5 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் அருமையான தொடக்கமும், வலுவான அடித்தளமும் கொல்கத்தாவின் வெற்றிக்கு இட்டுச் சென்றது. நரேன் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அடுத்து வந்த வீரர்கள் ரணா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பயன்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்

பெங்களூரு அணியில் விராட் கோலி, மெக்கலம், டீவில்லியர்ஸ், பந்துவீச்சில் யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், வோக்ஸ் ஆகியோர் இருந்து நரேன் பேட்டிங்க முன் எடுபடவில்லை.

இந்த போட்டியின் தோல்விக்கு பின் பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணி வீரர் மன்தீப் சிங் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் சுனில் நரேனின் அதிரடி ஆட்டமே ஒட்டுமொத்த ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்துவிட்டது. 19 பந்துகளில் அவர் அடித்த அரைசதம், வெற்றியை எங்களின் கைகளில் இருந்து பறித்துவிட்டது.

பொதுவாக தொடக்கவீரராக களமிறங்குவர் வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும்போது, அதாவது 6 ஓவர்களில் நல்லவிதமான ஸ்கோர் செய்தால், வெற்றிக்கிணற்றின் பாதியை கடந்துவிட்டமாதிரிதான்.

அந்தவகையில் நரேன் அணியின் வெற்றிக்கு வழிகாட்டிச் சென்றுவிட்டார். மற்ற வீரர்கள் நரேன் அளவுக்கு பேட்டிங் செய்யாவிட்டாலும் கூட வெற்றியை தக்கவைக்கும் அளவுக்கு விளையாடினார்கள்.

எங்கள் அணி மெக்குலம், டீவில்லியர்ஸ் விக்கெட்டுகளை விரைவாகவேஇழந்துவிட்டது, ரன் குவிக்க முடியாமல் போனதற்கு முக்கியக்காரணமாகும். இதனால், 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக சேர்த்துவிட்டோம்.

இருந்தாலும், நாங்கள் சேர்த்த 176 ரன்கள் என்று வெற்றிக்கு சவால் விடுக்கும் இலக்குதான். ஆனால், இன்னும்20 ரன்கள் கூடுதலாக சேர்த்து இருந்தால், எதிரணிக்கு நெருக்கடி கொடுத்திருப்போம்.

எங்களிடம் 5 பந்துவீச்சாளர்கள் இருந்தபோதிலும், ஏனோ அணி நிர்வாகம் பவான் நெகிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனத் தெரியவில்லை. முன்புநான் சொன்னதைப் போல முதல் 6 ஓவர்கள்தான் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கியக்காரணியாகும்.

 இதில் பேட்டிங் சிறப்பாக அமைந்தாலும், பந்துவீச்சு சிறப்பாக அமைந்தாலும் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு வெற்றி சாதகமாகும். மற்றவகையில் எங்களின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது’’

இவ்வாறு மன்தீப் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x