Last Updated : 20 Mar, 2018 09:32 PM

 

Published : 20 Mar 2018 09:32 PM
Last Updated : 20 Mar 2018 09:32 PM

‘ஃபினிஷிங்’ பல்கலைக் கழகத்தில் தோனி முதலிடம் நான் இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்: தினேஷ் கார்த்திக் பேட்டி

 

முத்தரப்பு டி20 தொடரின் நாயகனாகவே ஆகிவிட்ட தினேஷ் கார்த்திக் சென்னையில் நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது தன்னையும் தோனியையும் ஒப்பிடுவது நியாயமற்றது என்று கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

தோனியைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவர் முதலிடம் வகிக்கும் (சிறந்த பினிஷிங்) பல்கலைக் கழகத்தில் நான் இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன், என்னுடன் அவரை ஒப்பிடுவது நியாயமாகாது.

தோனியின் பயணம் முற்றிலும் வித்தியாசமானது, என்னுடைய பயணம் வேறு வகைப்பட்டது. அவர் பிரமாதமான ஒரு நபர், அவர் மிகவும் அமைதியானவர், கூச்ச சுபாவம் உள்ளவர், இன்று அவர் இளைஞர்களுக்கு உதவுவதை உரக்க குரலில் பேசி வருகிறார். எனவே ஒப்பீடு என்பது என்னைப் பொறுத்தவரை நியாயமர்றது, நான் கூறியது போல் நான் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தில் தோனி முதலிடம் வகிப்பவர். நான் எந்த இடத்தில் இருக்கிறேனோ அதில் இருப்பதையே மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்.

அனைவரது கவனமும் என் மீது குவிந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, இத்தனை காலமாக நான் செய்த நல்ல கர்மா, நல்ல விஷயங்கள் என்னை அந்த சிக்ஸரை அடிக்க உதவியது. அந்த ஷாட் சிக்ஸருக்குச் சென்றது, அதாவது 2மிமீ கூடுதலாகச் சென்று 6-ஆக மாறியது.

எனக்கு வார்த்தை வரவில்லை. இந்த ஆட்டத்தில் நாம் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, உள்நாட்டு கிரிக்கெட்டில் அவ்வளவு எளிதில் கவனம் நம் மீது விழாது, திடீரென இவ்வளவு கவனம் என் மீது திரும்பியிருப்பது பற்றி நல்லதாகவே உணர்கிறேன். இது இன்னும் சிறப்பான ஒன்றுக்கான ஆரம்பமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

அபிஷேக் நாயர் முக்கியக் காரணி:

மும்பை கிரிக்கெட் வீரர் அபிஷேக் நாயர் கடந்த இரண்டரை ஆண்டுக்ள் எனக்கு முக்கியமான காரணியாகத் திகழ்கிறார். ஆட்டத்துக்குத் தயார் செய்து கொள்வதில் எனக்கு அவர் உதவினார். உத்தி, உபாய அளவில் என்னை சிந்திக்க வைத்தார். கடினமான உழைப்பதில் சரியான பாதையை அவர் தெரிந்து வைத்திருந்தார். அவர் நதி என்றால் நான் படகு.

விஜய் சங்கர் குறித்து...

விஜய் சங்கரிடம் திறமை உள்ளது, பவுலராக அவர் உள்ளபடியே நன்றாக வீசினார். பேட்டிங் ஆல்ரவுண்டரான அவர் கடும் நெருக்கடியில் நன்றாக ஆடியதாகவே கருதுகிறேன், அவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாக உணர்கிறேன். அவரிடம் நல்ல அணுகுமுறை உள்ளது, நீண்ட காலம் ஆடுவதற்கான சிறப்புத் திறமை அவரிடம் உள்ளது.

ரோஹித் சர்மா கேப்டன்சிக்குப் பாராட்டு:

ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய பலம் என்னவெனில் கேப்டனாக மூன்று ஐபிஎல் தொடர்களை வென்றுள்ளார், மேலும் அணியை வழிநடத்துவதற்கான திறமை மீது அவருக்கு ஆழமான நம்பிக்கை உள்ளது, நிறைய ஹோம்வொர்க் செய்கிறார். உத்தி ரீதியாக வலுவானவர், மிகவும் துல்லியமான கேப்டன், நிறைய திறமை உள்ளவர்.

வரும் ஐபிஎல் தொடர் (கொல்கத்தா கேப்டன்) எனக்கு மிக மிக முக்கியமானது, இந்திய கிரிக்கெட் இன்று இந்த நிலைமையில் இருக்கிறது என்றால் அதற்கு ஐபிஎல் ஒரு காரணம், சிறந்த வீரர்களுடன் மோத வேண்டும், எனக்குத் தனிப்பட்ட முறையில் இது முக்கியத் தொடர்.

கேப்டன் பொறுப்பு குறித்து எனக்கு உற்சாகமாக உள்ளது, கேப்டன்சியைத் தழுவ இது சிறந்த தருணமாகக் கருதுகிறேன், அணியில் (கொல்கத்தா) சிறந்த பந்து வீச்சு உள்ளது, பயிற்சியாளர்களுடன் அமர்ந்து நான் எந்த டவுனில் பேட் செய்ய வேண்டியிருக்கும் என்பதை விவாதிக்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்தத் தொடரில் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டு வருவார்கள், இந்த ஐபிஎல் தொடர் அருமையானதாகும்.

இவ்வாறு கூறிய தினேஷ் கார்த்திக், செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளிக்கும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆட வேண்டும் என்பது தன் நீண்ட நாளைய விருப்பம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x