Published : 20 Mar 2018 09:09 AM
Last Updated : 20 Mar 2018 09:09 AM

மாநில சீனியர் பளுதூக்கும் போட்டி: திருவள்ளூர், சேலம் அணிகள் சாம்பியன்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் கடந்த 17, 18 தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் திருவள்ளூர் மற்றும் சேலம் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

திருவாரூர் மாவட்ட பளுதூக்கும் சங்கம், எம்ஆர்டி உடற்பயிற்சி நிலையம் சார்பில் நடத்தப்பட்ட இப் போட்டியில் சென்னை, மதுரை, திருவள்ளூர், சேலம், கோவை உட்பட மாநிலம் முழுவதுமிருந்து 28 மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஆண், பெண் என இருபாலருக்கும் தனித் தனியே 8 உடல் எடை பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் 75 வீராங்கனைகள் உட்பட 225 வீரர்கள் பங்கேற்றனர்.

இதில், திருவள்ளூர் மாவட்ட வீரர்கள் 198 புள்ளிகள் பெற்று ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர். 174 புள்ளிகளுடன் விருதுநகர் மாவட்டம் 2-ம் இடத்தைப் பிடித்தது. மகளிர் பிரிவில் 105 புள்ளிகளைப் பெற்று சேலம் மாவட்ட வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் வென்றனர். 192 புள்ளிகள் பெற்று நாகை மாவட்டம் 2-ம் இடத்தைப் பிடித்தது.

சிறந்த வீரருக்கான முதலிடத்தை மன்னார்குடி எம்ஆர்டி உடற்பயிற்சி நிலைய வீரர் விக்னேஷ், 2-ம் இடத்தை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கோபி ஆகியோர் பெற்றனர். பெண்கள் பிரிவில் மன்னார்குடி எம்ஆர்டி உடற்பயிற்சி நிலைய வீராங்கனை நித்யா முதலிடத்தையும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் வரும் ஜூன் மாதம் பஞ்சாபில் நடைபெறவுள்ள தேசிய பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x