Published : 11 Feb 2018 05:19 PM
Last Updated : 11 Feb 2018 05:19 PM
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்கிராமுக்கு போட்டி ஊதியத் தொகையில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி போட்டி நடுவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவருக்கும் ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாகச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜோகன்ஸ்பர்க் நகரில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்குஇடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்துக்கும் அதிகமாக பந்துவீச தென் ஆப்பிரிக்க வீரர்கள் எடுத்துக் கொண்டனர். இது ஐசிசி போட்டி விதிமுறைகளையும் வீரர்களின் மற்றும் ஆதரவு ஊழியர்களின் நடத்தை விதிமுறைகளையும் மீறியதாகும்.
இதையடுத்து போட்டிக்கு பின் ஆய்வு செய்த ஐசிசி மேட்ச் ரெப்ரி ஆன்டி பைகிராப்ட் கேப்டன் மார்கிராமுக்கு 20 சதவீதமும், வீரர்களுக்கு 10 சதவீதமும் போட்டி ஊதியத்தில் இருந்த அபராதமாக செலுத்த உத்தரவிட்டார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் பொறுப்பு ஏற்ற மார்கிராமுக்கு 2-வது போட்டியிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இதேபோன்று பந்துவீச அதிகமான நேரத்தை வீரர்கள் எடுத்துக்கொண்டால், மார்கிராம் போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்.
இந்தியாவுடனான போட்டி முடிந்தபின், பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக நடுவரிடம் சென்று தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்கிராம் தனது தவறை ஒப்புக்கொண்டார். இதனால், விசாரணை ஏதுமின்றி, அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT