Last Updated : 05 Feb, 2018 02:49 PM

 

Published : 05 Feb 2018 02:49 PM
Last Updated : 05 Feb 2018 02:49 PM

சேப்பலின் செயலால் நான் கிரிக்கெட்டை விட்டு விலகுவதை என் தந்தை விரும்பினார்: கங்குலி உருக்கம்

 

பயிற்சியாளர் கிரேக் சேப்பல் என்னை இந்திய அணிக்கு தேர்வு செய்யவில்லை என்று தெரிந்தவுடன் என்னை கிரிக்கெட்டைவிட்டு விலகிவிட வேண்டும் என்று  என் தந்தை விரும்பினார், என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி “ எ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்” எனும் பெயரில் தன்னுடைய கிரிக்கெட் அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார். விரைவில் அந்த புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

அந்த புத்தகத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரேக் சேப்பல் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, தான் சந்தித்த பிரச்சினைகள், அதை கடந்து தான் வந்தவிதம் ஆகியவை குறித்து கங்குலி தெரிவித்துள்ளார்.

கிரேக் சேப்பல் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தபின், கங்குலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, அணியில் இருந்து மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டார். இதனால், இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

இது குறித்து கங்குலி தனது புத்தகத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2008ம் ஆண்டு இரானி கோப்பைப் போட்டியின்போது, என்னை ரெஸ்ட் ஆப்இந்தியா அணியில் இருந்து சேப்பல் நீக்கியவுடன் நான் மிகுந்த கோபமும், வேதனையும் அடைந்தேன். ஆனால், நான் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தேர்வாளர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது.

நான் 11 பேர் கொண்ட இந்திய அணியில் முக்கிய வீரராக நீண்டநாட்களுக்கு இருக்கமாட்டேனா என்று ஒருநாள் கும்ப்ளேயிடம் கேட்டேன். அதற்கு அவர் எப்போதும் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால், இதை நான் முடிவு செய்யமுடியாது, தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார்தான் அந்த முடிவை எடுப்பார் என்றார்.

மற்றொரு சந்தர்பத்தில் கும்ப்ளேயிடம் பேசும்போது, என் சேவை இன்னும் அணிக்கு அவசியம் என நம்புகிறீர்களா? எனக் கேட்டேன். அப்போது அவர் என்னை ஆறுதல்படுத்தி என்னிடம் இந்த விஷயம் வரும் போது, நான் முடிவு எடுப்பேன் என்று தெரிவித்தார். அடுத்த டெஸ்ட் போட்டியில் என்னைத் தேர்வு செய்தபோது, எனக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்தது.

சண்டிகரில் நடந்த அத்ரியா நினைவு கோப்பையில் விளையாடிய போதுதான் நான் தேர்வாளர்களுக்கு என்னை தேர்வு செய்தது சரி என்பதை நிரூபித்தேன். அதற்கு ஏற்றார்போல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது. அதற்கு முன், போர்டுலெவன் அணியும் அறிவிக்கப்பட்டது. இரு அணிகளிலும் எனது பெயர் இடம் பெற்றது. இந்த இரு அணிகளையும் கிருண்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வு செய்தார்.

இதற்குமுன் இருந்த தேர்வுக்குழுவின் மனநிலைக்கும் , இப்போது இருக்கும் தேர்வுக்குழுவின் மனநிலைக்கும் எந்த வித்தியாசம் இல்லை என்கிற போதிலும், அனுபவ வீரர் கங்குலி அணிக்கு தேவை என்பதை மட்டும் மீண்டும் உணர்த்தினார்கள்.

சேப்பல் என்னை அணியில் இருந்து நீக்கியபோது, மீண்டும் அணிக்குள் வர போராடினேன். அப்போது எனது போராட்டத்தை பார்க்க முடியாத எனது தந்தை, கிரிக்கெட்டில் இருந்துவிலகிவிடு என்றார்.

அப்போது நான் அவரிடம் அப்பா பொறுமையாக இருங்கள், நான் மீண்டும் அணியில் இடம்பெறுவேன். இப்போது திரும்பிவந்துவிட்டேன். என்னைவிட்டு கிரிக்கெட் இன்னும் போகவில்லை. நான் வயதாகும்போது, எந்த கஷ்டம் வந்தாலும், சோபாவில் உட்கார்ந்து கொண்டு அதை விட்டுவிடு எனக் கூற நான் விரும்பவில்லை. கடினமாக முயற்சி செய்யவேண்டும். காளையின் கொம்புகளைப் பிடித்துஅடக்கி வெற்ற பெற வேண்டும். அதுதான் எனது விருப்பம்

உடனே எனது தந்தையைச் சந்தித்து நான் கிரிக்கெட் விளையாடியது போதும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகிறேன் என்று கூறியபோது, அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கும்ப்ளேயிடம் கூறும்போது, அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள் என்றார்.

எனக்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், கிரிக்கெட் விளையாடுவதில் எனக்குரிய நேரம் முடிந்துவிட்டதாகவே நான் நினைத்தேன். என் கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றிகரமாகவே முடித்தேன் என மனதிருப்தி கிடைத்தது. எனது ஓய்வு முடிவை அறிவித்தேன்.

இவ்வாறு அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x