Published : 01 Feb 2018 04:17 PM
Last Updated : 01 Feb 2018 04:17 PM
ரஹானே பற்றி தோனி முன்பொருமுறை கூறும்போது ரஹானேயை தொடக்கத்தில் களமிறக்கலாம், ஆனால் பந்து தேய்ந்து விட்டால் அவரால் விரைவில் ரன்கள் எடுக்க முடிவதில்லை என்றார், ஆனால் விராட் கோலி தற்போது ரஹானே 4-ம் நிலைக்கு உகந்த வீரர், வலுவான வீரர் என்று மாற்று அடையாளம் கண்டுள்ளார்.
“நான் முன்னர் கூறியபோது அஜிங்கிய ரஹானே 3-வது தொடக்க வீரர் என்றேன், ஆனால் அது இப்போது மாற்றப்படக்கூடியதே. உலகக்கோப்பையில் அவர் 4-ம் நிலையில் களமிறங்கியுள்ளார். வேகப்பந்துக்கு சாதகமான சூழ்நிலையில் முழுதும் வேகப்பந்தையே எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில் 4-ம் நிலையில் இறங்க ரஹானே வலுவான வீரர் என்று கருதுகிறேன்.
இவரைத் தவிர ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே உள்ளனர், கேதார் ஜாதவ் 5 அல்லது 6-ல் களமிறங்கலாம். பாண்டியா உள்ளார், தோனி இருக்கிறார். எனவே அனைத்து சாத்தியங்களையும் திறந்தே வைத்துள்ளோம். ஒற்றைப் பரிமாணம் உள்ள அணியாக விரும்பவில்லை. எந்த நிலையில் களமிறங்க எந்த வீரரின் உத்தி சரியாக இருக்கும் என்பதைப் பொறுத்து டவுன் ஆர்டர் தீர்மானிக்கப் படுகிறது.
யாருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்கள் அந்த வாய்ப்பை பற்றிக் கொள்ள வேண்டும். முக்கிய வீரர்கள் தற்போது வலுவாகவே உள்ளனர். மாற்றங்கள் எந்த நிலையிலும் வரலாம். எது எப்படியிருந்தாலும் முக்கிய வீரர்களைக் கண்டடைந்து விட்டோம்.
பின்நடுக்கள வீரர்கள் வரிசை ஏறக்குறைய செட்டில் ஆகிவிட்டது, இந்தச் சேர்க்கை நன்றாக பலனளிக்கிறது .ஹர்திக், தோனி, கேதார் ஆகியோரிடையே அது சுழற்சி முறையில் மாறுகிறது. 4-ம் நிலை கடந்த ஒரு சில தொடர்களில் பரிசோதனை முறையாக அமைந்தது. இந்த 4-ம் நிலையில்தான் ஒரு திடமான வீரர் செட்டில் ஆகிவிட்டால் அணியின் சமச்சீர் தன்மை பாதுகாக்கப்படும்.
உலகிலேயே இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இந்த மட்டத்தில் நமக்கு ஆடுவது நம் அணிக்கு கிடைத்த ஆசீர்வாதமே. கேதார் ஜாதவ் அணிக்கான மரபான பணியைச் சிறப்பாகச் செய்கிறார். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் எந்தநாட்டிலும் எந்தப் பிட்சிலும் சிறப்பாக வீசக்கூடியவர்கள். ஓவருக்கு 6 ரன்கள் கொடுப்பார்கள் ஆனால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி விடுவார்கள். அணி முன்னேறிச் செல்கையில் இந்த ரிஸ்ட் ஸ்பின் சேர்க்கை மிகப்பெரிய வலுவாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார் விராட் கோலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT