Published : 01 Feb 2018 09:25 AM
Last Updated : 01 Feb 2018 09:25 AM

இந்திய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து, சாய்னா நெவால்- முதல் சுற்றுடன் வெளியேறினார் பிரணாய்

இந்திய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் பிரிவில் 5-ம் நிலை வீரரான பிரணாய் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 43-ம் நிலை வீரரான ஹாங்காங்கின் லீ சவுக்குடன் மோதினார். 40 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-17, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற இந்திய வீரர்களான காஷ்யப் 21-14, 21-18 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியனையும், சாய் பிரணீத் 21-11, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ராஜீவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரணாய், சகநாட்டைச் சேர்ந்த 167-ம் நிலை வீரரான ஜெய்ஸ்வாலிடம் 21-4, 21-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் வெறும் 13 நிமிடங்களில் முடிவடைந்தது.

மற்றொரு இந்திய முன்னணி வீரரான அஜெய் ஜெயராம், இந்தோனேஷியாவின் டாமி சுகிர்தோவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் சுகிர்தோ முதல் செட்டில் 2-0 என முன்னிலை வகித்த போது காயம் காரணமாக அஜெய் ஜெயராம் வெளியேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதல் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் 21-10, 21-13 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் நடாலியை வீழ்த்தினார்.

இந்த ஆட்டம் 33 நிமிடங்கள் நடைபெற்றது. 4-ம் நிலை வீராங்கனையான சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் 21-15, 21-9 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் சோபியை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 41 நிமிடங்கள் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x