Published : 10 Dec 2017 09:29 AM
Last Updated : 10 Dec 2017 09:29 AM
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள ரோஹித் சர்மா, அந்த அணிக்காக 3 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் முதன்முறையாக இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட உள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அவர் கூறியதாவது:
ஐபிஎல் தொடரில் இருந்து சர்வதேச ஒருநாள் போட்டி முற்றிலும் மாறுபட்டது. ஆனால் கேப்டன்சியின் செயல்முறை மற்றும் அடிப்படைகள் ஒரே மாதிரியானதுதான். ஐபிஎல் அணியைவிட வேறுபட்ட வீரர்களை நாங்கள் கொண்டுள்ளோம். இவர்களுடன் இணைந்து விளையாடி உள்ளதால் அவர்களின் பலம், பலவீனங்களை நான் புரிந்து கொள்ள வேண்டும். இது திட்டத்தை செயல்படுத்த அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
எனது கேப்டன்சி பாணியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குழுவாக விட்டுச் சென்ற இடத்தில் இருந்தே மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஐபிஎல் தொடரில் இருந்து சர்வதேச கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்டதுதான். அழுத்தம் மற்றும் வீரர்களின் மனநிலையிலும் மாறுபட்டதாகவே இருக்கும். ஆனால் நான் மிகவும் மாறமாட்டேன். தற்போது இருக்கும் நிலையிலேயே தொடர முயற்சி செய்வேன்.
இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT