Published : 14 Aug 2015 02:30 PM
Last Updated : 14 Aug 2015 02:30 PM

நடுவரின் மோசமான தவறுகளினால் சந்திமால், திரிமானே பிழைக்க, இலங்கை முன்னிலை

கால்லே டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை எதிர்கொண்ட இலங்கை அணி தற்போது தினேஷ் சந்திமால், திரிமானே ஆட்டத்தினால் முன்னிலை பெற்றுள்ளது.

சற்று முன்வரை இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. சந்திமால் 77பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 78 ரன்களுடனும், திரிமானே 44 ரன்கள் எடுத்து சற்று முன் அஸ்வின் பந்தில் ரஹானேயின் அருமையான கேட்சுக்கு அவுட் ஆனார்.

இவர்கள் இருவரும் இணைந்து 125 ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து அணியை மீட்டனர். சில நெருக்கமான முறையீடுகள் இவர்களுக்கு எதிராக எழுப்பப் பட்டது, ஆனால் அது அவுட் இல்லை என்ற தீர்ப்பையே பெற்றுத் தந்தது.

இன்று காலை 5/2 என்று தொடங்கிய இலங்கை அணி வந்தவுடனேயே தம்மிக பிரசாத் விக்கெட்டை வருண் ஆரோனின் அதிவேக துல்லிய பவுன்சருக்கு இழந்தது. அவர் ஆஃப் திசையில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு சங்கக்காரா, அஞ்சேலோ மேத்யூஸ் இணைந்து ஸ்கோரை 92 ரன்களூக்குக் கொண்டு சென்றனர். மேத்யூஸ் அஸ்வினையும் கூட அடித்து ஆடினார்.

சங்கக்காரா அருமையான ஒரு இன்னிங்ஸிற்கு அடித்தளமாக சில அற்புதமான ஷாட்களை ஆடினார், ஆனால் அஸ்வினின் பந்து ஒன்று ஸ்பின் ஆகி எழும்ப சங்கக்காரா தடுத்தாடினார் பந்து விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் ரஹானேவுக்கு இடது புறம் சென்றது அவர் அபாரமாக டைவ் அடித்து ஒரு கையில் கேட்ச் எடுத்தார்.

இவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திற்கெல்லாம் 39 ரன்கள் எடுத்து ஆடிவந்த அபாய மேத்யூஸ், அமித் மிஸ்ராவின் எழும்பிய லெக் ஸ்பின் பந்தை முன்னால் வந்து தடுத்தாட ராகுலிடம் கேட்ச் ஆனது.

உணவு இடைவேளையின் போது 108/5 என்று இருந்தது இலங்கை.

நடுவரின் மிகப்பெரிய பிழைகள்:

தினேஷ் சந்திமால் அஸ்வினை தொடர்ந்து ஸ்வீப் ஆடிவந்தார். இந்நிலையில் ஒரு பந்தை அவர் ஸ்வீப் செய்ய அது மட்டையில் பட்டு ஹெல்மெட்டில் பட்டு கேட்ச் ஆனது, நடுவர் ஆக்சன்போர்ட் நாட் அவுட் என்றார். ஆனால் ரீப்ளேயில் மட்டையின் பங்கு இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

இதற்கு அடுத்த ஓவரிலேயே திரிமானே உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அவுட் ஆகியிருக்க வேண்டும்,. மிஸ்ரா பந்தில் மட்டை உள் விளிம்பில் பட்டு சில்லி பாயிண்டில் கேட்ச் ஆனது. ஆனால் அவுட் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. டிஆர்எஸ். இருந்திருந்தால் இந்த இருவரும் அவுட்.

3-வது முறை, சந்திமாலுக்கு மிஸ்ரா வீச, சந்திமால் ஆடிய பந்து சிலி மிட் ஆஃப் பீல்டர் பூட்ஸில் பட்டு எழும்பியது மிஸ்ராவே கேட்ச் பிடித்தார் மீண்டும் பெரிய அப்பீல், பிறகு ரிவியூ. மிக நீண்ட ரிவியூவுக்குப் பிறகு நாட் அவுட் என்று தீர்ப்பானது.

பந்து தரையில் பட்டு ஷூவில் பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது, ஆனால் தரையில் பட்டிருந்தால் நெருக்கமான் ரீப்ளேயில் மண் கொஞ்சமாவது பெயர்ந்தது தெரிந்திருக்கும், ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை. எனவே இதுவும் அவுட்.

இதனால் இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 125 ரன்களைச் சேர்த்தனர்.

அஸ்வின் அளவுக்கு ஹர்பஜன் பந்துகளில் தாக்கம் இல்லை. பந்துகள் திரும்பும் இந்தப் பிட்சில் கூட அவர் விக்கெட்டுகளைக் கைப்பற்ற திணறி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x