Published : 09 Jul 2017 03:00 PM
Last Updated : 09 Jul 2017 03:00 PM
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 106 பந்துகளில் 114 ரன்கள் விளாசிய பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமான், தன்னை விராட் கோலியும், ஜஸ்ப்ரித் பும்ராவும் ஸ்லெட்ஜ் செய்ததாகக் கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “நானும் அசார் அலியும் பேட் செய்த போது எங்களைச் சுற்றி இந்திய வீரர்கள் பேசிக்கொண்டேயிருந்தனர்.
குறிப்பாக விராட் கோலி தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார், குறிப்பாக நான் பேட் செய்யும் போது ‘சீக்கிரம் ஒரு விக்கெட்டை எடுங்கள், அதன் பிறகு அனைவரும் சரிவடைவர்’ என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார்.
பும்ரா பந்தில் நான் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தேன், ஆனால் அது நோ-பால் ஆனது.
இதனையடுத்து அவரும் சில வார்த்தைகளைக் கூறிக்கொண்டேயிருந்தார். களத்தில் முன்பக்கமாகவும் நீ ரன்கள் எடுக்க வேண்டும், எவ்வளவு நேரம் பின்னால் ஆடிக்கொண்டிருக்கப் போகிறாய்? என்றார் பும்ரா.
ஆனால் உள்ளதைச் சொல்ல வேண்டுமெனில் இந்திய வீரர்கள் வரம்பு மீறவில்லை. இந்த ஸ்லெட்ஜிங் முழுதும் கிரிக்கெட் தொடர்பானது, உடன்பாடானது.
ஒவ்வொருவரும் தங்கள் அணி வெற்றி பெறவே விரும்புவர், அதனால் அதற்காக என்ன செய்ய வேண்டுமோ செய்வர், அதனால் இது பிரச்சினையல்ல” என்றார் ஃபகார் ஜமான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT