Last Updated : 06 Oct, 2016 03:11 PM

 

Published : 06 Oct 2016 03:11 PM
Last Updated : 06 Oct 2016 03:11 PM

கடினமான முடிவுகளை தைரியமாக எடுப்பது பற்றி தோனியிடம் கற்றேன்: விராட் கோலி

கடினமான முடிவுகளை தைரியமாக எடுத்து அதன் விளைவுகளைப் பற்றி கலக்கமடையாமல் இருப்பதுதான் கேப்டன்சியின் சாராம்சம் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கோலியின் கேப்டன்சியில் 16 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 9-ல் வென்றுள்ளது. 2-ல் தோற்று, 5 போட்டிகளில் டிரா செய்துள்ளது.

பிசிசிஐ.டிவி-க்கு கேப்டன் அளித்த பேட்டியிலிருந்து..

“முடிவுகளை எடுப்பது சில வேளைகளில் கடினமானது. அத்தகைய முடிவுகளை எடுக்க நிறைய தைரியம் வேண்டும். நான் தோனியிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அதாவது தைரியமான முடிவுகளை எடுப்பது மற்றும் அதில் உறுதியாக நிற்பது போன்றவற்றை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டேன். முடிவுகள் சரியாக இருக்கலாம் தவறாக இருக்கலாம், ஆனால் எடுத்த முடிவில் கவலைப்படாமல் உறுதியாக இருப்பதுதான் கேப்டன்சியின் சாராம்சம்.

நாட்டின் டெஸ்ட் அணிக்கு தலைவராக இருப்பது என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். டெஸ்ட் கிரிக்கெட் அணியை வழிநடத்துவது என்ற கூடுதல் பொறுப்பு என்னை ஒரு வீர்ராகவும் நன்றாக வடிவமைத்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் நமக்கு அளிக்கும் சோதனைகளை வேறு எதுவும் அளிக்க முடியாது.

நாங்கள் உலகின் தலைசிறந்த அணியாகத் திகழ விரும்புகிறோம் இதில் எங்களில் ஒருவருக்குக் கூட சந்தேகம் எதுவும் இல்லை. எந்த ஒருவடிவத்திலும் முன்னிலை பெற வேண்டும், இதை நோக்கித்தான் பயின்று வருகிறோம்.

பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு அணியாக திரண்டு நன்றாக ஆடுகிறோம் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. மற்றவீரர்களுடன் இணைந்து லட்சியத்தை நிறைவேற்றுவதை அழுத்தமாக, சுமையாகப் பார்க்கக் கூடாது, இது ஒருசவால் என்று பார்க்க வேண்டும்.

பெரிய வீரராகத் திகழ வேண்டுமெனில் ஒரு அணியாக பெரிய அளவில் ஆட வேண்டும். அப்போதுதான் நமது தனிப்பட்ட ஆட்டத்திறன் செல்லுபடியாகும். இதுதான் எங்கள் நோக்கம்.

நிச்சயம் இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் ஏகப்பட்ட விமர்சனங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால் இதுதான் விஷயமே, இதுதான் ஒரு நல்ல பண்பை நம்மிடையே கட்டமைக்கிறது” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x