Last Updated : 19 May, 2019 10:02 AM

 

Published : 19 May 2019 10:02 AM
Last Updated : 19 May 2019 10:02 AM

இனி எல்லாம் நலமே 06: திடீர் வயிற்றுவலிக்கு என்ன காரணம்?

வயிற்றுவலியால் துடித்த 15 வயதுப் பெண்ணை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துவந்தனர். இரண்டு நாட்களாக லேசான வயிற்று வலி இருந்திருக்கிறது. பிறகு திடீரென்று வலி கடுமையாகிவிட்டதென மருத்துவமனைக்கு வந்தனர். குடல்வால் வீக்கமாக இருக்கலாம் என  நினைத்தோம். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்தபோது எல்லாம் சரியாக இருந்தது. லேபரோஸ்கோபி மூலம் பரிசோதனை செய்தபோதுதான் சினை முட்டை வெளிப்பட்டதால் வந்த வலி என்று தெரிந்தது.

பொதுவாக மாதவிடாய்ச் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது என்று வைத்துக்கொண்டால் சுழற்சிக் காலத்தின் நடுப்பகுதியில் சினை முட்டை வெடிப்பு நடைபெறும். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி தொடங்கிவிட்டால், அவள் கர்ப்பம் தரிப்பதற்கான காலகட்டத்தில் இருக்கிறாள் என்று பொருள். கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பையொட்டியே மாதவிடாய்ச் சுழற்சி நிகழ்கிறது. மாதவிடாய்ச் சுழற்சி, ஹார்மோன்களால் கட்டமைக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் பிறக்கும்போதே சினைப்பையில் ஏராளமான முதிர்ச்சியடையாத சினைமுட்டைகள் இருக்கும். சினைமுட்டை வெளிப்படுதல் என்பது, சினைப்பையில் இருக்கும் சினைமுட்டைகளில் ஒன்று முதிர்ச்சியடைந்து, சினைப்பையிலிருந்து வெளிப்பட்டு, சினைக்குழலுக்குள் போகும். இப்படிச் சினைமுட்டை வெளிப்படும் நேரத்தில், சிலருக்கு வலிக்கக்கூடும். சிலருக்கு அந்த வலி சில நிமிடங்களில் மறையலாம்; சிலருக்கு இரண்டு நாட்கள்வரைகூட இருக்கலாம். மூன்று  நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

சினைமுட்டை வெளிப்படும்போது ஏற்படும் வலியின் அறிகுறிகள்:

1. அடிவயிற்றிலும் இடுப்பு எலும்பிலும் வலி

2. மாதவிடாய் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் வரும் வலி

3. எந்தப் பக்க சினைப்பையிலிருந்து

வெளிப்படுகிறதோ (இடது அல்லது வலது) அந்தப் பக்கத்தில் வலி

ஏன் வலிக்கிறது?

ஹார்மோன்கள் சினைப்பையைத் தூண்டி கிட்டத்தட்ட பல  நுண்குமிழிகளை உருவாக்கு கின்றன. ஒவ்வொரு நுண்குமிழியிலும் ஒரு முதிர்ச்சி அடையாத சினைமுட்டை இருக்கும். இந்த நுண் குமிழிகளில் ஒன்றுதான் பிழைக்கும். இந்த நுண்குமிழி விரிவடையும்போது சினைப்பையின் சவ்வுப் பகுதியை நீட்டிக்கச் செய்யும். சினைமுட்டை முதிர்ச்சியடையும்போது நுண்குமிழியில் இருந்து வெடித்து வெளிப்படும். இதனால் சிறிய உதிரப்போக்கு ஏற்படலாம். இப்படி வெடித்த நுண்குமிழியில் இருந்து வெளிப்படும் ரத்தம் அல்லது திரவம், வயிற்றின் உட்பூச்சில் எரிச்சலை உண்டுபடுத்தலாம். இது வலியைத் தூண்டலாம்.

சினைமுட்டை ஏன் முதிர்ச்சியடைய வேண்டும்?

மாதவிடாய்ச் சுழற்சியின் நடுப்பகுதியில் அதாவது உதிரப்போக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக நிகழும் இந்தச் சினைமுட்டை வெளிப்படுதல்தான் இனப்பெருக்கத்தைச் சாத்தியப்படுத்துகிறது. சினைப்பையிலிருந்து சினைக்குழல்களுக்குள் வரும் சினைமுட்டை விந்தணுவை எதிர்கொண்டால் கருவுறுதல் நிகழலாம். மாதம் முழுவதுமே ஒரு  ஆணால் விந்தணுவை வெளிப்படுத்த முடியும் என்றாலும், பெண்ணின் சினைமுட்டை முதிர்ச்சியடைந்து, சினைக்குழல்களுக்குள் செயல்பாட்டுடன் இருப்பது 48 மணி நேரம்தான்.

ஆணின் விந்தணு, பெண்ணின் இனப்பெருக்கப் பாதையில் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு உயிர்ப்புடன் இருக்கும். பெண்ணுக்கு அது சினைமுட்டை வெளிப்படும் காலமாக இருந்தால் கருவுறுதல் நடைபெறும். பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்ட 12 முதல் 24 மணி நேரத்துக்குள் கருவுறுதல் நிகழும். கருவுறுதல் நிகழ்ந்தபின், இந்தச் சினைமுட்டை கருப்பைக்குள் வரும். அங்கே உருவாகி இருக்கும் படுக்கை போன்ற படலத்தில் பொதிந்து கருவாக வளரும்.

குழந்தைப்பேறு வேண்டும் என்பவர்களும் குழந்தைப்பேறு வேண்டாம் என்று தவிர்க்க நினைப்பவர்களும் சினைமுட்டை வெளிப்படும் நாளைச் சரியாகக் கணக்கிட்டுக்கொண்டால், குழந்தை உருவாவதைத் தவிர்க்கவோ  மேம்படுத்தவோ முயலலாம்.

இனப்பெருக்க மண்டலம்

சில நேரம் கருமுட்டை வெளிப்படும்போது சிலருக்குக் குறைந்த அளவில் உதிரப்போக்கு இருக்கலாம். வயிற்று வலி நிற்கும்போது இதுவும் நின்றுவிடலாம். அப்படியில்லாமல் அதிகமான உதிரப்போக்கு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். வயிற்று வலிக்கு மருத்துவரின் அறிவுரைப்படி வலிநிவாரணி எடுக்கலாம்.

பெண்களில் பலருக்கும் இனப்பெருக்க உடற்கூறு குறித்துப் போதிய தெளிவு இல்லை. பெண்ணின் இனப்பெருக்க மண்டலம் என்பது ஒரு கருப்பை, இரண்டு சினைக்குழல்கள், இரண்டு சினைப்பைகள் ஆகியவற்றைக்கொண்டது. கருப்பையில் இருந்து ஹார்மோன் வராது. சினைப்பையில்தான் ஹார்மோன் உள்ளது. சினைமுட்டை வெளிப்படுதல் நடக்கிறது. அதேபோல் கருவுறுதலும் மாதவிடாய் உதிரப்போக்கும் கருப்பையில் நடக்கிறது.

சினைமுட்டை வெளிப்படும் நாளை எப்படிக் கணக்கிடுவது?

நம் உடலைப் பற்றி நமக்கு நல்ல புரிதல் வேண்டும். ஒவ்வொரு மாதமும் என்றைக்கு மாதவிடாய் வந்தது, என்றைக்கு உதிரப் போக்கு நின்றது. அடுத்த சுழற்சி எத்தனை நாளில் வந்தது என்பதைத் தொடர்ந்து குறித்துவர வேண்டும். இந்த மாதவிடாய்ச் சுழற்சி என்பது சாராசரியாகச் சிலருக்கு  28 நாள் கணக்காக இருக்கலாம்.

சிலருக்கு 32 நாள் கணக்காக இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு (60 சதவீதம் முதல் 80 சதவீதம்வரை ) இப்படி அமையலாம். சிலருக்குச் சிறிய சுழற்சியாக 21 நாட்களில் வரலாம் . சிலருக்கு 35 நாட்களுக்கு ஒரு முறை வரலாம். ஒவ்வொருவரும் தொடர்ந்து மாதவிடாய்ச் சுழற்சியைக் குறித்துவருவதன் மூலம் அவர்களுக்கான பாணியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனாலும், சில நேரம் மன அழுத்தம், அதிகப்படியான வேலைப்பளு, நோய்வாய்ப் பட்டிருத்தல், ஊட்டச்சத்தான உணவைச் சாப்பிடாதது போன்றவற்றால் சினைமுட்டை வெளிப்படுதல் நிகழாமல் போகலாம். எல்லா மாதங்களிலும் சினைமுட்டை வெளிப்படுதல் (Ovulation)  நடக்காது. இயற்கையாகவே சில மாதங்களில் நடக்காமல்கூடப் போகலாம். இது தவறல்ல. இதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும். சிலருக்குச் சினைப்பையில் நீர்க்கட்டிகள்  இருந்தால் அது சினைமுட்டை வெளிப்படுதலைப் பாதிக்கலாம்.

- (நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x