Last Updated : 21 Apr, 2019 10:06 AM

 

Published : 21 Apr 2019 10:06 AM
Last Updated : 21 Apr 2019 10:06 AM

வாழ்ந்து காட்டுவோம் 02: ஆசைக்கும் ஆஸ்திக்கும் பெண்ணே போதும்

பெரும்பாலான வீடுகளில் ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் வேண்டும் என்பதே கனவாக இருக்கிறது. ஆஸ்தியே இல்லையென்றாலும் ஆண் வாரிசு வேண்டும் என்பது இன்னும்கூடப் பல குடும்பங்களின் கனவாக இருக்கிறது. இந்தப் பிற்போக்கு எண்ணத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டதுதான், ‘தமிழக அரசின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்’.

வம்ச வாரிசுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற கருத்தை மனத்திலிருந்து அகற்றிட வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று. அதனால்தான், இந்தத் திட்டத்தில் பயனடைவதற்கு இணைக்கப்பட வேண்டிய சான்றுகளில் பயனாளியின் குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஆண் குழந்தை அந்தக் குடும்பத்தில் இல்லை என்ற சான்றும் அதை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

திட்டத்தின் பயனை அடைந்த பிறகு ஆண் குழந்தையைத் தத்தெடுக்கவும் கூடாது. அப்படி ஏதும் நிகழ்ந்துவிட்டால் பணப்பயன் முழுமையாக ரத்து செய்யப்பட்டுவிடும்.

அறியாமையால் ரத்தான தொகை

இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் விண்ணப்பித்திருந்தது.  இரண்டு பெண் குழந்தைகள் பெயரிலும் அவர்களுக்குரிய பணம் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதைப் புதுப்பிக்க மீண்டும் குடும்ப அட்டை முதல் குழந்தைகளின் கல்வி நிலை வரை அனைத்தையும் சரிபார்த்தபோது குடும்ப அட்டையில் இரண்டு பெண் குழந்தைகளின் பெயரோடு இன்னுமொரு ஆண் குழந்தையின் பெயரும் மகன் என்ற உறவு முறையில் பதிவாகி  இருந்தது.

விசாரித்தபோது தனது  சகோதரியின் ஆண் குழந்தையைத் தத்து எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்தனர். ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையால், பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட தொகை ரத்து செய்யப்பட்டது.  அரசுக் கணக்கில் அந்தத் தொகையைச் செலுத்திவிடும்படி ஆகிவிட்டது.

எந்தவொரு திட்டத்துக்கு விண்ணப்பிப்பதாக இருந்தாலும், திட்டத்தைப் பற்றிய முழு விவரங்களையும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். திட்டத்தின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திட்டத்தின் நோக்கம்

பெண் கல்வியை மேம்படுத்துதல், பெண் சிசுக்கொலையை அறவே ஒழித்தல், ஆண் குழந்தைகளையே விரும்பும் மனப்போக்கை மட்டுப்படுத்தல், சிறு குடும்பமுறையை வலியுறுத்துதல் போன்ற பெண் குழந்தைகளின் ஒட்டுமொத்த நலனுக்கான கருத்துகள் மக்களைச் சென்றடையச் செய்தலே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்

# குழந்தையின் பிறப்புச் சான்று (மாநகராட்சி / நகராட்சி அலுவலகம்)

# பெற்றோரின் வயதுச் சான்று (பிறப்புச் சான்று/ பள்ளிச் சான்று/மருத்துவரின் சான்று)

# குடும்ப நல அறுவை சிகிச் சைச் சான்று சம்பந்தப் பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை) 

# அந்தக் குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று  (அந்தந்த வட்டார விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) அல்லது ஊர்நல அலுவலர். சென்னை மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம்)

# இருப்பிடச் சான்று – வட்டாட்சியர் அலுவலகம்

திட்டம் பற்றிய விவரங்கள்

திட்டம் 1: 01.08.2011 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்து குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின் அந்தப் பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத்தொகையாக ரூ.50,000 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகையின் ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்துக்கு மாவட்டச் சமூக நல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

திட்டம் 2: 01.08.2011 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருப்பின் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் நிலையான வைப்புத்தொகையாகத் தலா ரூ. 25,000 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகையின் ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்துக்கு மாவட்டச் சமூக நல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

திட்டம் 1-ன் கீழ் பயனடைந்த பெண்குழந்தை இறந்துவிட்டால் அந்தக் குழந்தையின் தாயாருக்கு முதிர்வுத்தொகை வழங்கப்படும். தாயாரும் இறந்துவிட்டால் குழந்தையின்   தந்தைக்கு வழங்கப்படும். இருவரும் இல்லாதபட்சத்தில் அத்தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

திட்டம் 2-ன் கீழ் பயனடைந்த பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை இறந்துவிட்டால் உயிருடன் இருக்கும் மற்றொரு குழந்தைக்கு முதிர்வுத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட வைப்புத்தொகை, ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18-ம் ஆண்டு நிறைவடையும்போது வட்டி யுடன் கூடிய முதிர்வுத்தொகை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும்.

இத்திட்டம் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் குடும்பங் களுக்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ–சேவை மையம் மூலம் அனைத்துச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

 

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துச் சான்று களையும் குறிப்பிட்ட அலுவலகத்தில்தான் பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும்போது இ–சேவை மையத்தில் அசல் சான்றுகள் அளித்துத் தான் ஸ்கேன் செய்ய வேண்டும்.

ஸ்கேன் செய்து முடித்ததும் கவனமாக அசல் சான்றுகளைச் சரிபார்த்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இவை மீண்டும் மாவட்டச் சமூக நல அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்ட பின்னரே தொகை ஒப்பளிப்பு  செய்யப்படும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.

குறிப்பிட்ட கால அவகாசத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல், விண்ணப்பித்தல் போன்றவை சரியாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

# 35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

# குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.

# ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையைத் தத்து எடுக்கவும் கூடாது.

# விண்ணப்பிக்கும்போது பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவர்களாக இருக்க வேண்டும்.

# திட்டம் I–ன் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருப்பின் அந்தக் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

# திட்டம் II–ன் கீழ் இரு பெண் குழந்தைகள் மட்டும் இருப்பின்  இரண்டாவது குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

# குடும்ப ஆண்டு வருமானம் ரூ 72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x