Last Updated : 20 Jan, 2019 10:19 AM

 

Published : 20 Jan 2019 10:19 AM
Last Updated : 20 Jan 2019 10:19 AM

வண்ணங்கள் ஏழு 38: வஞ்சிக்கப்பட்டவர்களுக்காக உயரும் கை

உலகில் இரண்டுவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். தான் அனுபவித்த சிரமங்களையும் போராட்டங்களையும் தன்னுடைய சந்ததிகள் அனுபவிக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஒரு ரகம். நான் அனுபவித்த வேதனைகளையும் சிரமங்களையும் அவமானங்களையும் நீயும் அனுபவித்து உன்னால் முடிந்தால் முன்னேறிக் காட்டு... என்று கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் இன்னொரு ரகம். திருநங்கை கிரேஸ் பானு, முதல் ரகத்தைச் சேர்ந்தவர்.

பிச்சை எடுத்தாவது படிக்கச் சொன்னார் அவ்வையார். ஆனால், சாலையில் இறங்கிப் போராடியும் சட்டத்தின் உதவியோடும் இந்தியாவின் முதல் திருநங்கை பொறியாள ரானவர் கிரேஸ் பானு. படித்தோம் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது என்று தன்னை கார்பரேட் உலகுக்கு மட்டுமே சொந்தமாக்கிக்கொள்ளவில்லை. தொடர்ந்து திருநங்கைகளின் படிப்புக்காகவும் பணியிடங் களில் அவர்களின் இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யவும் போராடிக் கொண்டிருக்கிறார்.

கை கொடுக்கும் கை

பாதிக்கப்பட்ட பல திருநங்கை களின் படிப்புக்காகவும் பணிப் பாதுகாப்புக் காகவும் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடியவர் கிரேஸ் பானு. திருநங்கைகள் பிரித்திகா யாஷினி, தாரிகா பானு, அனுஸ்ரீ,  ஆராதனா, தமிழ்செல்வி ஆகியோருக்கு அவர்கள் விரும்பிய பணியும் படிப்பும்  கிடைத் திருக்கிறது என்றால், அதற்கு கிரேஸ் பானு நடத்திய போராட்டங்களும் முக்கிய காரணம்.

தூத்துக்குடியின் புதூர்பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிரேஸ் பானு. தூத்துக்குடியிலயே தொடக்கக் கல்வியை யும் உயர்நிலைக் கல்வியையும் பயின்றிருக்கிறார்.

ஆண் உடுப்பில் படிப்பு

“உயர்கல்வி படித்தபோதுதான்  எனது பாலினத்தை முழுமையாக உணர்ந்தேன். அவ்வாறு உணர்ந்ததை மறைக் காமல் சமூகத்துக்கும் வெளிப்படுத்தி னேன். அதனால், மிகப் பெரிய விளைவைச் சந்தித்தேன்.  என் பாலினத்தைப் புரிந்து கொள்ள முடியாத பெற்றோருடனான பிரிவு நிரந்தரமானது. அதிலிருந்து சமூகத்தின் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானேன். பின் திருநங்கை யருக்குக் கல்வியின் தேவையை உணர்ந்தேன்.

அதை அரசு உணராததால் ஆண் உடுப்பி லேயே பொறியியல் பட்டயப் படிப்பை கோவில்பட்டியில் படித்தேன். கல்லூரி விடுதியில் தங்கி  நண்பர்களின் உதவியோடு முடித்தேன். 94 சதவீத மதிப்பெண்களும் பெற்றேன். பின்னர் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சில காலம் ஆண் உடுப்பிலேயே பணியாற்றினேன். அங்கே எனக்கு ஏற்பட்ட சில விரும்பத் தகாத நிகழ்வுகளால் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினேன்.

போராட்டத்தைக் கையிலெடுத்த கணம்

மீண்டும் நிச்சயமற்ற பழைய வாழ்வின் சூழல் என்னைத்  தின்றது. இப்போது நான் முழுப் பெண்ணாக மாறி னேன். எனது போலி வாழ்வைத் தூக்கியெறிந்தேன். அந்தக் கணத்தில்தான் திருநங்கை  சமூகத்துக்குக் கல்வி, வேலை வாய்ப்பின் அவசி யத்தை முழுமை யாக உணர்ந்தேன்.  இட ஒதுக்கீடுதான் இதற்குத் தீர்வு என்பதைச்  சில தலைவர்களின் வரலாற்றின் மூலமும் அறிந்தேன்.

அதற்காக என் தோழமை களோடு கூடிப் போராடத் துணிந்தேன். அவர்களோடு சேர்ந்து திருநங்கையர்-திருநம்பியர் உரிமைக் குழுவை ஏற்படுத்தி கொள்கைகளையும் போராட்ட வடிவங் களையும் வடிவமைத்து 2013 அக்டோபர் 21 அன்று சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் கண்ணகி சிலை அருகே திருநங்கையர், திருநம்பியர், தோழமைகள், மாணவர்களோடு சாலை மறியலில் ஈடுபட்டோம்.

அடுத்த நாள் தமிழ்நாடு கல்வித் தேர்வாணையத்தை முற்றுகையிட்டோம். அதற்கு மறுநாள் சட்டமன்றம் கூடும் நேரத்தில் அதன் வாயிலில் நின்று உரிமை முழக்கம் எழுப்பினோம். அதனால், காவல் துறையினால் தாக்கப்பட்டு, பலவந்தமாகக் கைதுசெய்யப்பட்டோம்.

அதன்பின், சட்ட ரீதியான தளத்தில் தோழமைகளோடு பயணித்தேன். அதன் தொடக்க முன்னேற்றமாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வை மாற்றுப் பாலினத்தோர் எழுதலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் விளைவாக மதுரையைச் சேர்ந்த எனது போராட்டக் களத்தின் தோழி சுவப்னா இந்தியா வின் முதல் திருநங்கையாகத் தேர்வெழுதினார். சாதகமான தீர்ப்பு வந்தாலும் இக்காலக்கட்டதில் சட்டத்தின் புறக்கணிப்புகளையும் அலைக் கழிப்புகளையும் உணர்ந்தேன்.

தொடரும் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்

2014 மார்ச் 23 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எங்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கிடக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியதால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டோம். இந்நிலையில் என் பட்டயப் படிப்பைத் தொடர்ந்து பொறியியல் பட்டப் படிப்பை என் சுய பாலின அடையாளத்துடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். அதன் கலந்தாய்வில் பொறியியல் படித்த இந்தியாவின்  முதல் திருநங்கையாகத் தேர்வுசெய்யப்பட்டேன். இது என் வாழ்வின் மகிழ்ச்சிக்குரிய தருணம்.

தமிழகத்தில் நடைபெறும் அரசுத் தேர்வை திருநர்கள்  எழுதுவதற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் திருநங்கையர், திருநம்பியருக்கான தனி இட ஒதுக்கீடு தொடர்பாக 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம்.  ஆறு மாதத்துக்குள் தமிழக அரசு திருநர்களின் இடஒதுக்கீடு சம்பந்தமாக முடிவெடுக்க வேண்டும் என 2016 ஜூலை மாதம் உத்தரவிடப்பட்டது.

மாற்றுப் பாலின பாதுகாப்பு மசோதா-2016-ஐ எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். நாடாளுமன்ற நிலைக் குழு அமைச்சர்களைச் சந்தித்து எங்களது கோரிக்கையைக் கூறியிருக்கிறோம். நாங்கள் அனைவரும் எதிர்த்த, எங்கள் வாழ்வை அழிக்க நினைக்கும் அந்த வெற்று மசோதாவைத்தான் மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது.

டெல்லியில் மாபெரும் போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களில் நானும் ஒருத்தி. என் சமூகத்தினர் கண்ணியமாக வாழ்வதற்கு எங்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும். அதற்காகத் தொடர்ந்து என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஜெய்பீம்!” என்று முழங்கினார் கிரேஸ் பானு.

vannam-2jpg

பெண்களைவிடவும் அதிகமாய் வஞ்சிக்கப்படுகிறோம்!

 ‘திருநங்கை கிரேஸ்  பானுவின் சிந்தனைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார் கிரேஸ். சமூகத்தில் திருநர்களுக்குத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் பின்னடைவுகள், அதற்கான போராட்டங்கள், பாதிப்புகள் என அவரின் மனதைப் பாதித்த பல சம்பவங்களை ஒட்டி புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

 ‘நவம்பர் 20 வஞ்சிக்கப்பட்டோர் தினம்’ என்னும் கட்டுரையில், “உயிர்நீத்த திருநங்கைகளை நினைவுகூரும் வகையில் அந்நாளை ‘மாற்றுப் பாலினத்தோரின்  நினைவுதினம்’ என்று என் சமூகம் கட்டமைத்து, கடைப்பிடித்துவருகிறது. நானும் அவர்களுடன் இணைந்து இந்நாளை உயர்த்திப்பிடிக்கிறேன், ‘வஞ்சிக்கப்பட்டோர் தினம்’ என்று இன்னுமொரு பெயரிட்டு. நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம்; வஞ்சிக்கப்படுகிறோம்.

இவ்வுலகில் யாவரையும்விட அதிகமாய் நாங்கள் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். அந்தக் கறுப்பு அடிமைகளைவிடவும், இந்திய தலித்துகளை விடவும், பெண்களைவிடவும் நாங்கள் அதிகமாய் வஞ்சிக்கப்படுகிறோம்” என எழுதியிருக்கிறார் கிரேஸ்.

 

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x