Last Updated : 09 Sep, 2018 12:57 PM

 

Published : 09 Sep 2018 12:57 PM
Last Updated : 09 Sep 2018 12:57 PM

அகம் புறம்: இது தாயின் கடமை மட்டுமல்ல

இருபது ஆண்டு கால உலக டென்னிஸ் வரலாற்றில்  யாராலும் அசைக்க முடியாத சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார் செரினா வில்லியம்ஸ். நான்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்  போன்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரரான செரினா தற்போது பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் கனடா நாட்டில் நடைபெற்றுவரும் ரோஜர்ஸ் கோப்பைப் போட்டியில் தன்னால் கலந்துகொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளார். செரினாவின் இந்த வெளிப்படையான பேச்சு,  பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் குறித்த கவனத்தை உலக அளவில் ஏற்படுத்தியுள்ளது.

நான் நல்ல அம்மாவா?

இது குறித்துத் தன் வலைத்தளப் பக்கத்தில் செரினா பதிவிட்டுள்ளார். அதில், “நான் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்பதை நிரூபிக்க ஒவ்வொரு முறையும்  கடினமாகப் பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. இதனால் என் குழந்தையுடன் நான் எப்படியெல்லாம் இருக்க விரும்பினேனோ, அப்படியெல்லாம் இருக்க முடியவில்லை. என் குழந்தையின் முக்கியமான தருணங்களின்போது நான் அவளுடன் இருக்க விரும்புகிறேன்.

ஆனால், என்னால் அதை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. இதனால் நான் சிறந்த அம்மாவாக இல்லையோ என எனக்குத் தோன்றுகிறது. அதே நேரம் பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் மன அழுத்தம் குறித்து நான் நிறைய செய்திகளைப் படித்துவருகிறேன். இதுபற்றி என் அம்மா, அக்கா, தோழிகளிடம் நிறையவே பேசுகிறேன்.  இருந்தாலும் என் குழந்தைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் என்னால் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது.

என் மகள் முதன்முதலில் நடக்கத் தொடங்கியபோது நான் அவள் அருகில் இல்லை. டென்னிஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அவள் அருகில் நான் இல்லாமல் போனதை நினைத்து அழுகையே வந்துவிட்டது. குழந்தையைக் கவனித்துக்கொண்டு அலுவலக வேலைகளைப் பார்ப்பது சவாலானதுதான். இந்த விஷயத்தில் நானும் மற்ற பெண்களைப் போலவே இருக்கிறேன். இந்த இரண்டையும் சிறப்பாகச் செய்துவரும் பெண்களே உண்மையான ‘ஹீரோ’.

என்னைப் போன்ற தாய்மார்கள் தங்களுடைய வேலைப் பளுவால் கடுமையான நாளையோ  வாரத்தையோ சந்திக்க நேரிட்டிருக்கலாம். ஆனால், கவலை வேண்டாம். நமக்காக நாளை என்ற ஒன்று உள்ளது என நம்பிக்கையுடன் பயணிப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் தாய்தான் செய்ய வேண்டும் எனச் சமூகத்தால் நிர்பந்திக்கப்படுகிறது. குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுப்பது, குளிக்க வைப்பது, பாடங்களைப் படிக்கவைப்பது, அவர்களின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்வது போன்றவற்றில் தாய்க்கு மட்டுமல்ல;

தந்தை, மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கும் பங்கு உண்டு. ஆனால், இது போன்ற விஷயங்களை மற்றவர்கள் தட்டிக் கழிப்பதால் பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகான மனஅழுத்தம் ஏற்படுகிறது.

ஒத்துழைப்பே அவசியம்

“பொதுவாக வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் பெரியவர்கள் இல்லாமல்  குழந்தையை தனியாகக் கவனித்துக்கொள்ளும் பெண்கள் ஆகியோருக்குத்தான்  பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் அதிக அளவில் ஏற்படுகிறது.  கருவுறும்போது பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தாம் இதற்குக் காரணம். தூக்கத்தில்

கூடத் தன் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறதா என விழிப்புணர்வுடன் தாய் இருப்பதற்கும் இந்த ஹார்மோன்கள்தாம் காரணம்.  குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சியில்  பாலூட்டும் நேரம் போக மற்ற நேரங்களில் கணவரும் குடும்ப உறுப்பினர்களும் குழந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

எப்போதும் குழந்தையைத் தாய்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனச் சமூகத்தால் கொடுக்கப்படும் அழுத்தம் அவர்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதைத் தடுக்க குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே  கணவரும் குடும்ப உறுப்பினர்களும்  தாய்க்கு மன தைரியத்தை அளிக்க வேண்டும்.

‘குழந்தையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீ பயப்பட வேண்டாம்’ என்பது போன்ற ஆறுதலான வார்த்தையைச் சொல்வது அவசியம். இது போன்ற சூழ்நிலையைத் தாய்க்கு அமைத்துத் தரவில்லையென்றால் அவர்களுக்கு மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். இதைக் கவனிக்காமல்விட்டால் தாய்க்கு நீண்ட கால மனஅழுத்தம் ஏற்படக்கூடும்.

பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் மூன்று நிலைகளில் வெளிப்படும்.

முதலாவது, குழந்தையை எப்போதும் தாயே கவனித்துக்கொள்வதால்  அவர்களுக்கு ஏற்படும் பதற்றம், கோபம் அதையொட்டிய சிறு பிரச்சினைகள் போன்றவை.

இரண்டாவது, கணவரிடமோ குடும்ப உறுப்பினரிடமோ சண்டையிடுவது அல்லது முதல் குழந்தையை அடிப்பது, திட்டுவது போன்றவை.

மூன்றாவது, மன அழுத்தம் அதிகரித்து விபரீத எண்ணங்கள் தோன்றுவது. இந்த மூன்றாவது நிலைகளில் பாதிக்கப்பட்ட தாய்க்கு மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம். குறிப்பாக, இரண்டு குழந்தைகள் இருக்கும் பெண்கள் பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதை ஆரம்பத்திலேயே சரிசெய்ய சிறந்த வழி குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பே” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாந்தி.

குழந்தைக்குத் தாயின் அரவணைப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்குத் தாயின் உடல் நலத்திலும் மனநலத்திலும் குடும்ப உறுப்பினர்களின் பங்கும் அவசியம்.முன்னணியில் இந்தியா!

பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் குறித்த செரினாவின் பதிவு அமெரிக்காவில் உள்ள தாய்மார்களின் நிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுப்பு அந்நாட்டில் மறுக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து அடுத்த இரண்டு வாரங்களிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு நான்கில் ஒரு அமெரிக்கப் பெண் நிர்பந்திக்கப்படுகிறார். 

இதனால் பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தத்துக்கு அவர்கள் ஆளாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மகப்பேறு விடுப்பு முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது. ஆனால், வளரும் நாடான இந்தியாவில் சம்பளத்துடன் கூடிய 26 வார கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

வீட்டுவேலை, கட்டிடத் தொழில் போன்ற முறைசாரா பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கும் மகப்பேறு விடுப்பு முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மகளிர் இயக்கங்களின் சார்பாக முன்வைக்கப்பட்டுவருகிறது.

முன்னணியில் இந்தியா!

பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் குறித்த செரினாவின் பதிவு அமெரிக்காவில் உள்ள தாய்மார்களின் நிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுப்பு அந்நாட்டில் மறுக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து அடுத்த இரண்டு வாரங்களிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு நான்கில் ஒரு அமெரிக்கப் பெண் நிர்பந்திக்கப்படுகிறார்.  இதனால் பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தத்துக்கு அவர்கள் ஆளாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் மகப்பேறு விடுப்பு முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது. ஆனால், வளரும் நாடான இந்தியாவில் சம்பளத்துடன் கூடிய 26 வார கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

வீட்டுவேலை, கட்டிடத் தொழில் போன்ற முறைசாரா பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கும் மகப்பேறு விடுப்பு முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மகளிர் இயக்கங்களின் சார்பாக முன்வைக்கப்பட்டுவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x