Published : 08 Jul 2018 10:45 AM
Last Updated : 08 Jul 2018 10:45 AM

கற்பிதமல்ல பெருமிதம் 13: ஆணென்ன? பெண்ணென்ன?

சுமதி பிரசவத்துக்கு உள்ளூரிலேயே இருந்த அம்மா வீட்டுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தாள். தாராவுக்கும் அம்மாகவுடன் போக ஆசையாக இருந்தது. ‘ஸ்கூலுக்கு மூணு மாசம் போகாம இருக்கக் கூடாது; அதனால் அப்பா கூடவே இரு’ என்று அம்மா சொல்லிவிட்டாள். தாராவுக்கு அழுகையாக வந்தது. அம்மா சனி, ஞாயிறு விடுமுறையில் வந்து பார்க்கச் சொன்னாள்.

ஆனால், புறப்பட்டபோது அம்மா ஏன் அழுதுகொண்டே போகிறாள் என்று தாராவுக்குப் புரியவில்லை.

இந்தத் தடவையாவது ஆம்புளப் புள்ளையா பெத்துக்குடுன்னு எல்லாரும் சொல்லறாங்க. பிறக்கறது பொம்பளப் புள்ளையா இருந்துவிட்டால் என்ன ஆகும்னு யோசிக்க யோசிக்க சுமதிக்குப் பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது.

குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்க சுமதி என்ன செய்ய முடியும்? இது விஞ்ஞானம் தெரியாத சுமதி மாதிரியான குடும்பங்களின் பிரச்சினை மட்டும் அல்ல. எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் சொன்னாங்க, அவங்க கூட படிச்ச டாக்டருக்கு நான்கு குழந்தைகளாம். மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு நான்காவது ஆண் குழந்தையாம். நல்லவங்களுக்குதான் ஆம்புளப் புள்ள பொறக்கும்னு அவங்க மாமியார் சொன்னாங்களாம். தான் நல்லவதான்னு நிரூபிக்க அப்படிச் செஞ்சாங்களாம்.

அறிவியல் சொல்லும் சேதி

ஏன் பெண் குழந்தையைப் பெற்றால் தாயை மட்டுமே குறைசொல்கிறோம்? ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பது எதனால்?

நம் உடம்பில் ஏராளமான செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. இதில் முதல் 22 ஜோடி குரோமோசோம்களும் ஆணின் உடம்பிலும் பெண்ணின் உடம்பிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். 23-வது ஜோடிதான் பால் குரோமேசோம்கள் (sex chromosome). இது ஆணோட செல்லிலும் பெண்ணோட செல்லிலும் ஒரே மாதிரி இருக்காது. ஆணோட உடம்புல x, y எனவும் பெண்ணோட உடம்புல x, x எனவும் இரண்டு குரோமோசோம்கள் இருக்கும். இதனால் பெண்ணோட கருமுட்டையில x, x குரோமோசோம்களும் ஆணோட விந்தணுவில் x,y குரோமோசோம்களும் இருக்கும்.

கருவுறுதல் நேரத்தில் பெண்ணோட x குரோமோசோமுடன் ஆணோட x குரோமோசோம் சேர்ந்தால் பெண் குழந்தை உருவாகும். பெண்ணோட x குரோமோசோமுடன் ஆணோட y குரோமோசோம் சேர்ந்தால் உருவாகும் குழந்தை ஆணாக இருக்கும்.

இதுதான் அறிவியல் உண்மை. பள்ளியில் படித்த அனைவருக்கும் இது தெரிந்திருக்கும். ஆனால், பெண் குழந்தை பிறந்தால் அதற்குப் பெண்களையே திட்டுகிறார்கள். ஒருவிதத்தில் பார்த்தால் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்க ஆண்கள்தாம் காரணம்.

ஆனால், எந்த ஆணும் தேர்ந்தெடுத்து x, y எனத் தருவதில்லை. இதெல்லாம் உடம்புக்குள்ள நடக்கிற விந்தைகள். இனிமே பெண் குழந்தை பிறந்தால் அம்மாவைக் குறைசொல்வதைத் தடுக்க இந்த விஞ்ஞான உண்மையை உரக்கச் சொல்லலாம்.

தாக்குப்பிடிக்கும் பெண்கள்

குழந்தை என்பது ஆண், பெண் இருவரின் கூட்டுப் பிணைப்பில் வருவது. திருமணம் செய்ய ஆணுக்குப் பெண் தேவை. ஆனால் அந்தப் பிணைப்பில் உருவாகும் குழந்தை பெண்ணாக இருக்கக் கூடாது. இது இப்படியே தொடர்ந்தால் பெண்களின் எண்ணிக்கை குறையாதா?

பொதுவாக உலகம் முழுவதும் பெண்களைவிட அதிக அளவில் ஆண் குழந்தைகளே கருவில் உருவாகின்றன. ஆனால், ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைவிடத் தாக்குப்பிடித்து உயிர்வாழும் சக்தியும் நோய் எதிர்ப்பு ஆற்றலும் குறைவு. இதனால் பெண் குழந்தைகளைவிட அதிக ஆண் குழந்தைகள் கருவிலேயே கலைந்துபோகின்றன.

குறையும் எண்ணிக்கை

ஐ.நா. சபையின் அறிக்கையின்படி (2015), உலகளாவிய அளவில் ஆண் - பெண் விகிதாச்சாரம் 101.70. அதாவது 100 பெண்களுக்கு ஈடாக 101.70 ஆண்கள் இருக்கிறார்கள்.

ஐ. நா. சபை கணக்கீடு செய்த 201 நாடுகளில் 124 நாடுகளில் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் பெண்கள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். இந்த விகிதாச்சார கணக்கில் இந்தியா 192-வது இடத்தில் உள்ளது. அதாவது இந்தியாவில் ஆண் -பெண் விகிதாச்சாரத்தில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவைவிட 9 நாடுகளில் மட்டுமே குறைவு.

1901-ல் இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் இருந்தார்கள். இந்த விகிதாச்சாரம் குறைந்துகொண்டே வந்து 1991 மக்கள்தொகை கணக்குப்படி 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் எனக் குறைந்துவிட்டது. 2001 கணக்கெடுப்பில் இந்த விகிதாச்சாரம் கொஞ்சம் கூடி 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்றானது. 2011 கணக்குப்படி இன்னமும் கொஞ்சம் கூடி 1000-க்கு 940 என்றாகி உள்ளது. பெண்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் வந்துவிட்டது என்று நினைத்து சந்தோஷப்படலாம் என்றால், 0-6 வயது வரையுள்ள ஆண் - பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் 1991-ல் 1000-க்கு 945 ஆக இருந்தது. 2001-ல் 1000க்கு 927 ஆகக் குறைந்தது. 2011-ல் 1000க்கு 914 ஆகக் குறைந்து விட்டது.

காரணம் என்ன?

பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுகிறார்கள். பிறந்த பிறகு கள்ளிப்பால் கொடுத்துச் சாகடிக்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் தப்பிப் பிழைக்கும் பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பங்கீட்டிலும் மருத்துவப் பராமரிப்பிலும் இரண்டாம்தர அந்தஸ்து தரப்படுகிறது. கருவில் இருந்து தொடங்கும் இந்தப் பாகுபாடு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.

ஒரு நாட்டின் மேம்பாடு, அதன் மனித வளம் சார்ந்தது. பெண் இனத்தை மட்டப்படுத்தி வாழவிடாமல் செய்யும் எந்தச் சமூகமும் முன்னேறவே முடியாது.

ஆணும் பெண்ணும் சமம் என்ற முழக்கம் மட்டுமல்ல; இத்தகைய வன்முறைகளைத் தெரிந்துகொண்டு எதிர்ப்பதே தன்மானத்தின் ஆரம்பம்.

1. குழந்தை ஆணா பெண்ணா என்பதைத் தீர்மானிப்பவர் தாய் அல்ல.

2. குழந்தை ஆணா பெண்ணா என்று கருவிலேயே பரிசோதனை செய்வது சட்டப்படி குற்றம். இதைச் செய்துவரும் மருத்துவமனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.

பெண் கருக்கொலை

அமினோசெண்டஸிஸ் என்ற மருத்துவப் பரிசோதனை பெண் கருவுற்ற 14-16 வாரத்தில் மரபணுக் குறைபாடுகளைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. 1980-களின் இறுதியிலும் 1990-களிலும் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மருத்துவமனைகள் வெளிப்படையாகவே இந்தப் பரிசோதனையைச் செய்தன.

இன்று 500 ரூபாய் செலவழித்தால் பின்னால் வர இருக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவைத் தடுத்துவிடலாம். பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? – கருவிலேயே தெரிந்துகொள்ள வாருங்கள் - இப்படி விளம்பரங்கள் வேறு. பல்வேறு மகளிர் அமைப்புகள் போராடிய பிறகு, கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறியும் முறைக்கு 1994-ல் தடை விதிக்கப்பட்டது.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x