Last Updated : 18 Mar, 2018 10:51 AM

 

Published : 18 Mar 2018 10:51 AM
Last Updated : 18 Mar 2018 10:51 AM

வானவில் பெண்கள்: கண்களில் விரியும் கவிதைகள்

மதங்களின் பெயரால்

பெண்களை அடிமைகொள்ளும்

மனம்இருண்ட கலாச்சாரக் காவலர்களின்

மடமை ஒழிக ஒழிக ஒழிகவென்று

ஓங்கி ஓங்கித் தட்டு

உன் கைகளை

- என்னும் வரிகளைப் பாடியபடி நான்கு திருநங்கைகள் கைகளைத் தட்டியபடி சமூகத்திடம் கேள்வி எழுப்புகின்றனர். திருநங்கை கல்கி உருவாக்கியிருக்கும் ‘வடு’ வீடியோவின் ஒவ்வொரு பகுதியும் நிதர்சனத்தை உணர்த்துகிறது.

சமூகச் செயல்பாட்டாளர், ஓவியர், கவிஞர், நடிகை எனப் பன்முக ஆளுமைகொண்டவர் திருநங்கை கல்கி. தான் எழுதிய ‘குறி அறுத்தேன்’ கவிதைத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளைக் காட்சிபூர்வமாகச் சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

ஏற்கெனவே இதிலிருந்து சில கவிதைகளை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் தங்களது பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்திருக்கின்றன. இந்நிலையில் இந்தக் கவிதைகள் வீடியோ வடிவிலும் வரவிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இந்தக் கவிதைத் தொகுப்பிலிருந்து ஏழு கவிதைகளை மட்டும் காட்சி வடிவமாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். பாலின அடையாளங்களுக்கு அப்பாற்பட்டுப் பலரது ஆரோக்கியமான கூட்டுமுயற்சியில் இந்த வீடியோ உருவாகியுள்ளது” என்கிறார் கல்கி.

ஆலிஸ் என்னும் பெண் கலைஞர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எடிட்டிங்கை பரத் விக்ரமும் ஆடை வடிவமைப்பை செந்தில்குமாரும் அருண் பாலகிருஷ்ணாவும் ஒப்பனையை ராஜ்கபூரும் மஹாலட்சுமியும் செய்துள்ளனர். மேலும், திருநங்கைகள் சந்தியா, ரீமா, பிரபா ஆகியோர் கல்கியுடன் இணைந்து நடித்துள்ளனர்.

“நான் ஓவியராக இருப்பதால் கவிதைக்குத் தேவையான காட்சிகளை நானே வரைந்து வைத்திருந்தேன். ஓவியங்களோடு காட்சியை எப்படிச் சிறப்பாகக் கொண்டுவருவதெனக் குழுவினரோடு தினமும் விவாதிப்போம். இத்தகைய முன்முயற்சிகளால் இரண்டே நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்” என்கிறார் கல்கி.

இந்தத் தலைமுறை காட்சி ஊடகத்துக்கே அதிக முக்கியத்துவம் தருவதால் அவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கவிதைகளுடன் இசையையும் காட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்திருப்பதாக அவர் சொல்கிறார்.

மொபைல் போனில் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் வீடியோவை மார்ச் 23-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதோடு ஒவ்வொரு கவிதையாக ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், கூகுள் பிளஸ் வழியாக வெளியிடும் முயற்சியில் இருக்கிறார் கல்கி. “இப்போதே பல கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் திரையிட அழைப்பு வந்துள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த வீடியோவை ஒளிபரப்பலாம்” என்கிறார் கல்கி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x