Last Updated : 01 Jan, 2017 02:03 PM

 

Published : 01 Jan 2017 02:03 PM
Last Updated : 01 Jan 2017 02:03 PM

மொழியின் பெயர் பெண்: வீஸ்வாவா ஷிம்போர்ஸ்கா - வாழ்வை வெற்றிகொண்ட கவிதை!

இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறவர் போலந்து கவிஞர் வீஸ்வாவா ஷிம்போர்ஸ்கா (Wisława Szymborska). போலந்து நாட்டின் பினின் என்ற சிறு நகரத்தில் 1923-ல் பிறந்தவர் வீஸ்வாவா ஷிம்போர்ஸ்கா. இவர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் பிறந்த யாருமே உலகப் போர்களால் பாதிக்கப்படாமல் இருந்திருக்க மாட்டார்கள். அதிலும் இரண்டாம் உலகப் போரால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வர்கள் போலந் துக்காரர்கள். வரலாற்றின் கொடுமையான இன அழிப்புகள் அங்கே நாஜிக்களால் நிகழ்த்தப்பட்டன. இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது போலந்தில் ரகசியமாகத்தான் படித்தார் ஷிம்போர்ஸ்கா. பிறகு, ரயில்வே ஊழியராக வேலைபார்த்தார். நாஜிப் படையினரிடம் அகப்படாமல் எப்படியோ தப்பித்தார். அகப்பட்டிருந்தால் ஜெர்மனியின் சித்ரவதை முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பார்.

தன் கண்முன்னே நிகழ்ந்த மனிதப் பேரவலங்கள் அவரை ஒரு கவிஞராக மாற்றின. “நான் எழுதத் தொடங்கியபோது மனிதர்களை மிகவும் நேசித்தேன். மனித குலத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், மனித குலத்தைக் காப்பாற்றுவது கடினம் என்று சீக்கிரமே புரிந்துகொண்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார். வாழ்க்கை எவ்வளவு விரக்தியை அவருக்கு அளித்திருக்கிறது என்பதற்கு இந்த வார்த்தைகளே சாட்சி.

இரண்டாம் உலகப் போரிலிருந்து மீண்டாலும் அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலை அவரைப் போன்ற மனசாட்சியுள்ளவர்களை வேட்டையாடியது. 1957-ல் கம்யூனிஸத்தைத் துறந்தார். போலந்து நாட்டின் கொடுங்கோன்மை கம்யூனிஸ அரசை எதிர்த்துச் செயல்பட்ட இயக்கமொன்றில் தன்னை இணைத்துக் கொண்டார். ராணுவ ஆட்சி நிலவிய எண்பதுகளில் புனைப்பெயரில் கவிதை எழுதிவந்தார். அரசியல் காரணங்களால் அவரது வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானாலும் அவரது பெரும்பாலான கவிதைகள் தனிப்பட்ட உணர்வு ரீதியிலானவை. மரணம் அவரது கவிதையின் முக்கியமான கருப்பொருள்.

தன் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 400 கவிதைகள் எழுதியிருந்தாலும் போலந்தில் ஷிம்போர்ஸ்கா மிகவும் பிரபலம். பிரபல நாவல்களுக்கு இணையாக ஷிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்புகள் விற்பனையாயின. 1996-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியில் கிட்டத்தட்ட முடங்கியே போனார் ஷிம்போர்ஸ்கா. கவிதை எழுதுவதற்குப் பல காலம் பிடித்தது.

கவிஞர் ஆடம் வ்லோடெக்குடனான திருமண வாழ்க்கை, விவாகரத்தில் போய் முடிந்தது. பிறகு, கோர்னெல் ஃபிலிப்போவிஷ் என்ற எழுத்தாளருடன் சேர்ந்து வாழ்ந்தார். குழந்தைகள் இல்லை. நோபல் பரிசால் உலகம் முழுவதும் ஷிம்போர்ஸ்காவின் பெயர் பரவியது. நுரையீரல் புற்றுநோயால் 2012-ல் தனது 88-வது வயதில் வீஸ்வாவா ஷிம்போர்ஸ்கா மரணமடைந்தார்.

(ஆங்கிலம் வழி தமிழில்: ஆசை)

ஒரு பூனைக்கு இதை நீ செய்யக்கூடாது

மரித்தல்- ஒரு பூனைக்கு அந்தக் கொடுமையை
இழைக்கக் கூடாது நீ.

யாருமில்லா வீட்டில்
தனியே என்னதான் செய்யும் ஒரு பூனை?
சுவர்களில் ஏறுமா?
அறைக்கலன்களை உரசிக்கொண்டிருக்குமா?

எதிலும் எவ்வித மாற்றமுமில்லை,
எனினும் எதுவுமே முன்பு போலில்லை.
ஏதும் அகற்றப்படவில்லை,
எனினும் முன்னிலும் அதிக இடம்.

விளக்கேதும் ஏற்றப்படவில்லை
இரவு நேரத்தில்.
படிக்கட்டுகளில் காலடி சப்தங்கள்,
ஆனால் அவையாவும் புதியவை.

சாப்பாட்டுத் தட்டில் மீனை வைக்கும் கைகூட
மாறியிருக்கிறது.

வழக்கமான நேரத்தில்
ஏதும் நடப்பதில்லை.
எவ்விதம் நிகழ வேண்டுமோ
அவ்விதம் நிகழவில்லை சில விஷயங்கள்.

ஒருவர் இருந்தார் இங்கே, எப்போதும் எப்போதும்.
சட்டென்று இல்லாமல் போனார் அவர்,
தவிர, இல்லாமலேயே இருந்துவிட்டார்
பிடிவாதமாக.

அருங்காட்சியகம்

தட்டுகள் உண்டு, பசிகொண்டோர்
யாருமில்லை.
திருமண மோதிரங்கள் உண்டு,
திருப்பியளிப்பதற்கோ எந்தக் காதலும்
இல்லை
குறைந்தபட்சம் மூன்று நூற்றாண்டுகளாக.

விசிறியுண்டு - விசிறுபவளின் வெட்கக்
கன்னமெங்கே?
வாள்கள் உண்டு - ஆவேசம் எங்கே?
அந்திப்பொழுதில் தந்தியொலியும்
கேட்பதில்லை.

நித்தியத்துவம் கையிருப்பில்
இல்லையென்பதால்
அதற்குப் பதிலாக
பழங்காலப் பொருட்கள் பத்தாயிரம்
குவிக்கப்பட்டிருக்கின்றன இங்கே.

பாசி படர்ந்த ஒரு காவலாளி கண்ணாடிப்
பெட்டிக்குள்,
தொங்கும் மீசையுடன்
இனிய கனவுகளில் ஆழ்ந்திருக்கிறான்.

உலோகங்கள், மண்பாண்டங்கள், ஒரு
பறவையின் இறகு
காலத்தை வென்று அமைதியாக.

பண்டைய எகிப்தின் குண்டூசியொன்றின்
சிரிப்பொலி மட்டும்.

சிரசைவிட நீடித்திருக்கும் கிரீடம்.
கைகளை வெற்றிகொண்ட கையுறைகள்.

காலை வென்ற வலது பாதத்தின் காலணி.
நானோவெனில்…
நான் இன்னும் உயிரோடிருக்கிறேன்,
தயவுசெய்து என்னை நம்பு.
எனக்கும் என்னுடைய உடைக்குமான போட்டி
இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.
போராடுகிறது என் உடை,
அந்த முட்டாள் வஸ்து,
அவ்வளவு பிடிவாதமாக.
நான் போன பிறகும் என்னை உயிருடன்
வைத்திருக்க வேண்டுமென்ற
முனைப்பு அதற்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x