Published : 01 Feb 2018 11:13 AM
Last Updated : 01 Feb 2018 11:13 AM

சமணம்: பாகுபலிக்கு முடிபூசை

ர்நாடக மாநிலம் சிரவணபெளகுலாவில் விந்தயகிரி என்கிற மலை உள்ளது. அம்மலையின் உச்சியில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பகவான் பாகுபலி திருவுருவம் நின்ற நிலையில் அமைந்துள்ளது. இந்த கல் உருவம் உலகப் புகழ்பெற்றது. ஐம்பத்து ஏழு அடி உயரத்திலானது. அகிம்சையும் ஆன்மிகமும் முகத்தில் ஒளி வீசுகின்றன.கி.பி.981-ல் சாமுண்டராயர் என்பவரால் இந்த சிலை நிறுவப்பட்டது. ஆயிரமாண்டுகளைக் கடந்த இந்த அரிய சிலையை வடித்தவர் சிற்பி சாகட் என்பவர். பாகுபலி,கோமதீசுவரர் எனவும் அழைக்கப்படுகின்றார்.

பாகுபலி இவ்வுலகில் சமண நெறிகளைத் தோற்றுவித்து அகிம்சை அறத்தைப் போதித்த ஆதிபகவன் விருஷபதேவரின் இளைய குமாரர். மூத்தவர் பரதன். மாமன்னரான ஆதிபகவன் புதல்வர்களுக்கு நாடுகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டு துறவறம் ஏற்றார்.

ஒருநாள் பரதனின் ஆயுதக்கிடங்கில் சக்கராயுதம் தோன்றியது. இதைப் பெற்றவர்கள் சக்கரவர்த்தி ஆவர். எனவே பரதன் திக்விஜயம் மேற்கொண்டு ஆறு கண்டங்களையும் பல நாடுகளையும் வென்றார். ஆனால் தம்பி பாகுபலி மட்டும் பணியவில்லை. எனவே, இருவரும் போருக்குத் தயாரானார்கள்.

அப்போழுது இருவரின் அமைச்சர்களும் போர் மூண்டால் பலத்த இழப்புகள் இருக்குமாதலால் அரசர்களை நேருக்கு நேர் மோதச் சொன்னார்கள்.முதலில் ஒருவரை ஒருவர் கண் கொட்டாமல் நோக்குதல். அதன்படி கண் சிமிட்டாதவர் வென்றவர் ஆவார். பின் நீரில் இறங்கி ஒருவர் முகத்தில் ஒருவர் நீரை வாரி இறைத்தல். அதில் யார் முகத்தில் நீர் படாமல் இருக்கிறதோ அவர் வென்றவர். பின் மல்யுத்தம் செய்ய வேண்டினர். இருவரும் சம்மதித்தனர். இம்மூன்றிலும் பாகுபலியே வென்றார். பரதன் கோபம்கொண்டு சக்கராயுதத்தை பாகுபலி மீதி ஏவினார். அனைவரும் அஞ்சும்போது சக்கராயுதம் பகுபலியிடம் சென்று சுற்றி வந்து அவர் முன் நின்று விட்டது.

துறவு பூண்ட பகுபலி

பாகுபலி, அண்ணணே தன்னைத் தம்பியெனக் கருதாமல் கொல்ல முயற்சி செய்தற்காக மிகவும் மனம் வருந்தினார். நாடாளும் ஆசை, பேராசை, சுயநலம் போன்றவையே அதற்குக் காரணம். அரச சகோதரர்களே சமர் செய்தால் சாமானியர்கள் என்ன எண்ணுவார்கள்? குடும்ப கவுரவம் போகுமே எனக் கருதினார். வாழ்க்கையை வெறுத்தார். உடனே அண்ணணனிடம் தன் நாட்டை எடுத்துக்கொள்ளக் கூறினார். தந்தையைப் போலவே துறவு மேற்கொண்டார்.

அடர்ந்த காட்டில் நின்றபடியே பாகுபலி கடுந்தவம் மேற்கொண்டார். நாட்கள் நகர்ந்தன. அவரைச் சுற்றி கரையான்கள் புற்றெடுத்தன. அதில் கருநாகங்கள் குடி கொண்டன. அவர் உடலில் செடி, கொடிகள் படர்ந்தன. பாம்புகள் ஊர்ந்தன. பாகுபலியோ, “உயிர்நோய் செய்யாமை உறுநோய் மறத்தல் செயிர்நோய் பிறர்கண் செய்யாமை” என்ற சிறுபஞ்ச மூலம் கூற்றாக தவத்தில் இருந்தார். இன்னொருவர் இடத்தில் தவம் இருப்பதான எண்ணம் அவரிடம் இருந்ததால் அவர் முழுதுணர் ஞானம் பெற தாமதமாயிற்று. இதனை உணர்ந்த பரதச் சக்கரவர்த்தி பாகுபலியைச் சரணடைந்து இந்நாடே உம்முடையது என்றார்.

கோமதீசுவரரும் முற்றும் அறியும் அறிவும் முக்தியும் பெற்றார்.

இப்படிப்பட கோமதீசுவரரின் சிலைக்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடி பூசை எனும் மகாமஸ்டகாபிஷேகம் நடத்துவர். இது பிப்ரவரி 17-ல் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x