Published : 26 Nov 2015 11:52 AM
Last Updated : 26 Nov 2015 11:52 AM

தெய்வத்தின் குரல்: கடிகை: ஏழாயிரம் மாணவர்கள்

ஒரு கடிகை எத்தனாம் பெரிசாக, ஒரு ஊர் மாதிரி, இருந்திருக்கிறது என்று கல்வெட்டிலிருந்து தெரிகிறது. ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. ஏழாயிரம் பேர் ஒரே கடிகையில் படித்திருக்கிறார்கள். வடார்க்காடு குடியாத்தத்துக்கு அருகில் திருவல்லம் கிராமத்தில் நீவா என்ற ஆற்றின் மத்தியிலுள்ள பாறையில் இந்தக் கல்வெட்டு இருக்கிறது.

அது எட்டாம் நூற்றாண்டின் முன்பாதியைச் சேர்ந்ததென்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஸௌத் இன்டியன் இன்ஸ்க்ரிப்ஷன்ஸ், முதல் வால்யூம், முதல் பார்ட்டில் இது பிரசுரமாகி இருக்கிறது. அநேகமாகக் கல்வெட்டுக்கள் எல்லாமே ஒருத்தன் செய்த தான தர்மத்தைத்தான் சொல்வதற்கிணங்க இதுவும் ஒரு தர்மத்தைச் சொல்லி, “இந்த தர்மத்துக்கு ஹானி உண்டாக்குபவன் கடிகையிலுள்ள ஏழாயிரம் பேரையும் கொன்ற பாபத்துக்கு ஆளாவான்” என்கிறது.

பிரசித்தி உடையவையாக நந்திவர்ம பல்லவனின் “காசாகுடிச் செப்பேடுகள்” என்று உண்டு. நான் முன்னே சொன்ன புத்தகத்தின் இரண்டாவது வால்யூம், மூன்றாம் பார்ட்டில் போட்டிருக்கிற இந்த சாசனங்களில் ஒன்றிலிருந்து ‘பூதேவர்'கள் எனப்படும் பிராம்மணர்களிடம் எத்தனை பக்தி விச்வாசத்துடன் ‘க்ஷத்ர சூடாமணி'களாயிருந்த ராஜாக்கள் கடிகைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

கடிகா ஸ்தான ஆசார்யர்கள் தனியாக குருகுலம் நடத்தாவிட்டாலும், சதுர்வேத பண்டிதர்களாகவும், தர்ம கர்மங்களில் சிறந்தவர்களாகவும், தேவ த்விஜ' என்று தெய்வத்தோடு சேர்த்துச் சொல்லி சத்காரம் செய்யத் தக்கவர்களாகவும் இருந்திருக்கிறார்களென்று இதிலிருந்து தெரிகிறது.

ஏழாயிரம் மாதிரியே, மூவாயிரம் பேர், ஓராயிரம் பேர் படித்த கடிகைகளைப் பற்றியும் தெரிய வருகிறது. வடார்க்காடு செய்யாறு தாலுகாவில் பிரம்மதேயம் என்ற கிராமம் இருக்கிறது. பிரம்மதேயம்' என்றாலே பிராம்மணனுக்கு தானம் தந்தது என்றுதான் அர்த்தம்.

அந்த கிராமத்தில் சந்திர மெளளீச்வரர் ஆலயம் இருக்கிறது. அதன் கர்ப்பக்ருஹ வடவண்டைச் சுவரில் உள்ள கல்வெட்டில் “த்ரைராஜ்ய கடிகாமத்யஸ்த மூவாயிரவர்” என்று வருகிறது. “மூவாயிரவர்” என்ற தமிழ் வார்த்தை, அந்தக் கடிகையில் தொடர்ச்சியாக மூவாயிரம் பேர் படித்து, இவ்விஷயம் சர்வஜனங்களின் கவனத்தையும் கெளரவத்தையும் காட்டுகிறது.

இதேபோல் இன்னொரு சாசனத்தில் “கடிகை ஏழாயிரவர்” என்றும் தமிழில் வருகிறது. ஆயிரம் பேர் படித்த ஒரு கடிகையை “கடிகா சகஸ்ரம்” என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

ஏழாயிரம், மூவாயிரம் என்பதெல்லாம் கொஞ்சம் மிகைபடக் கூறியது என்றும் சிலர் அபிப்ராயப்படுகிறார்கள். அப்படியே வைத்துக்கொண்டாலும் இதில் பாதியாவது இருந்திருந்தால்தானே இந்த அளவுக்கு மிகைப்படுத்தியிருக்க முடியும்? இப்படி நிச்சயமாக ஆயிரம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் சேர்ந்து முக்கியமாக வேத சாஸ்திரங்களைப் படித்தார்களென்றாலே விஷயம்தானே?

கோயிலும் கடிகையும்

வேத சாஸ்த்ர அப்யாஸத்துக்கு கடிகை, தேவதை ஆராதனத்துக்குக் கோயில் என்று இரண்டையும் நரசிம்மவர்மா நிர்மாணித்ததில் ரொம்பவும் பொருத்தமும் பொருளும் இருக்கின்றன. வேத மந்திரங்களைக் கொண்டு செய்யும் பிராண பிரதிஷ்டையும், கும்பாபிஷேகமும், பூஜைகளுந்தான் தெய்வ சாந்நித்யத்தை ஆலயங்களில் உண்டாக்குபவை.

வேதம் என்ற வேரிலே ஊன்றி நிற்கும் நம்முடைய சநாதன தர்மமென்னும் விருக்ஷத்தில் பழமாகத் தொங்குவதே ஆலயம். எல்லாரும் அநுபவிப்பதற்காக வெளியே தொங்குகிற இந்த ஆலயப் பழம் உண்டாகக் காரணமான வேர் மறைவாக, மறையாக இருப்பதே.

நரசிம்மவர்மா முதலான ராஜாக்களின் வழியிலேயேதான், ராஜாக்கள் எடுபட்டுப் போன பின் நம்முடைய மதத்துக்கு நிரம்பப் போஷணை தந்துள்ள செட்டிப் பிள்ளைகளும் (நகரத்தாரும்) ஒரு கோயிலை ஜீர்ணோத்தாரணம் பண்ணினால் ஒரு பாடசாலை ஏற்படுத்துவது என்று வைத்துக்கொண்டிருந்தார்கள்.

‘பாடசாலையில் கற்றதனால் ஆய பயன் இதுதான்' என்று வாலறிவன் நற்றாளைக் காட்டிக் கொடுக்கும்படியாக ஆலயங்களை எழுப்புவது பூர்விகர் வழக்கமாயிருந்தது.

கல்வி கற்பதைச் சொல்லும் இடத்தில் ஈச்வரனுக்கு “வாலறிவன்” என்ற பெயரைத் திருவள்ளுவர் கொடுத்திருப்பது அர்த்தபுஷ்டி வாய்ந்தது. எல்லாம் அறிந்த ஸர்வஜ்ஞனே “வாலறிவன்”. எத்தனை கற்றாலும் அதனால் அகங்கரிக்காமல் அவனுடைய ஸர்வஜ்ஞத்வத்தில் அது துளி மாத்திரமே என்ற அடக்கத்தோடு அவனுடைய நற்றாள் தொழ வேண்டுமென்றுதான் இந்த வார்த்தையைப் போட்டிருக்கிறார்.

கடிகை பெயர்க் காரணம்

இதைவிட எனக்கு ரொம்ப குதூகலம் (அதாவது curiosity) ஏற்படுத்தி ஆராய்ச்சியில் இறக்கிவிட்ட விஷயம் என்னவென்றால் “கடிகை” என்று ஏன் பேர் வந்தது என்பதுதான்.

“கடிகை” என்றால் சின்னதான பானை என்ற ஒரு அர்த்தம். கடம், பெரிய பானை. கடிகை, அதைவிடச் சின்ன பானை. கடிகை என்றால் ஒரு நாழிகைப் பொழுது என்று இன்னொரு அர்த்தம். நான் கேட்டுப் பார்த்த யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. கடைசியில் எதையோ தோண்டித் துருவியதில் என்னுடைய ரிசர்ச்சில் பாஸ் பண்ணிவிட்டேன். அந்தப் பெருமை அடித்துக்கொள்ளத்தான் இப்போது கதையளந்துகொண்டிருக்கிறேன்.

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x