Published : 23 Jun 2016 12:14 PM
Last Updated : 23 Jun 2016 12:14 PM

திருத்தலம் அறிமுகம்: தென்திசை நோக்கும் ஆடவல்லீஸ்வரர்

நவக்கிரகங்களில் சுபகிரகமாகத் திகழ்பவர் ‘பிருகஸ்பதி’ என்று வணங்கப்படும் குரு பகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆச்சார்யனாக விளங்கும் குருபகவான் நான்கு வேதங்களிலும் கரை கண்டவர். சீலத்தினாலும் கடும் தவ வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியைக் கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தவரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர். முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம் குருபகவானுக்கு சில விநாடிகள் ஏற்பட்டது.

தேவர்களேயானாலும் கர்வம் கூடாது என்பது தர்மத்தின் நியதி. இதற்கு மாறாக மனம் மாசுபட்டு குரு பகவான் நடந்து கொண்டதால் தன் தவ வலிமையையும் தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி மனம் வருந்திய தேவ குரு, படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வணங்கி, தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி கூறியருளுமாறு வேண்டினார்.

குரு பகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்ம தேவரும் மனமிரங்கி, “பூவுலகில் முன்னூற்று மங்கலம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்தத் திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து தவமியற்றினால் இழந்த தவ வலிமைகளை மீண்டும் பெறலாம்” என உபாயம் கூறியருளினார்.

தவபலம் மற்றும் ஆன்ம ஒளி

பிரம்மதேவனின் ஆலோசனையை ஏற்ற குருபகவான் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் தவமியற்ற, அவரது தவவலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவியுடன் தரிசனமளித்து குரு பகவானுக்குத் தவ பலத்தையும் ஆன்ம ஒளியையும் மீண்டும் வழங்கி அருள்புரிந்தார்.

நவக்கிரகங்களில் முழுமையான சுபபலம் பெற்ற குரு பகவான் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட இத்திருத்தலம் அன்றிலிருந்து “தென் திருக்கயிலாயம்” என்றும் “பூவுலகின் கயிலை” என்றும் ஈரேழு பதினான்கு உலகத்தவராலும் பக்தியோடு பூஜிக்கப்பட்டுவருவதாத் தலபுராணம் தெரிவிக்கின்றது.

வரலாற்றில் தடம்பதித்த முன்னூர்

சங்க கால இலக்கியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் பத்துப்பாட்டில் நான்காவதாகக் குறிக்கப்படுவது சிறுபாணாற்றுப் படை என்னும் இலக்கியமாகும். இது ஒய்மா நாட்டை ‘கிடங்கல்’ என்னும் கோட்டையிலிருந்து செங்கோல் தவறாமல் அரசாண்ட மன்னன் நல்லியக் கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நல்லூர் நத்தத்தனார் என்பவரால் பாடப்பட்ட இலக்கியமாகும்.

இந்நூலில் “அண்ணல் யானை அருவிதுகள் அவிப்ப நீறடங்கு தெருவின் அவன் சாறயர் மூதூர்” (சிறுபாணாற்றுப்படை பா.200-1) என்று பாடப்பெற்ற மூதூரில் (தற்போதைய முன்னூர்) உள்ள ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் தனிச்சந்நிதியாக ஆறு திருமுகங்கள் மற்றும் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசிவசுப்ரமணியராக மயில் மீது அமர்ந்த அற்புதத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றார் முருகப் பெருமான்.

நல்லியக்கோடன் மீது எதிரிகள் போர் தொடுத்தபோது இம்முருகப் பெருமானின் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த தாமரை மொட்டுக்கள் முருகனின் திருவருளால் வேலாக மாறி எதிரிகளின் சேனை வெள்ளத்தை வதைத்து மீண்டது. இதனால் மன்னன் நல்லியக்கோடன் முன்னூர் முருகப் பெருமானுக்கு தினசரி வழிபாடுகள் செய்யக் கொடைகள் அளித்து வெற்றிவேல் பரமனுக்கு நன்றி செலுத்தியுள்ளார்.

நல்லியக்கோடன் பெற்ற வெற்றியின் நினைவாக இன்றும் இத்தலத்தில் செவ்வேள்பரமனுக்கு வேல் பூஜைத் திருவிழா, சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.

சங்க காலத்துத் தொன்மையும், பல்லவர் காலத்துச் சமயச் சிறப்பும், சோழர் காலத்து கலைச் சிறப்பும், சம்புவராயர் காலத்து வரலாற்றுத் தொடர்பும், காடவராயர் காலத்து கல்வெட்டுத் தொடர்பும் கொண்ட மிகவும் புராதனமான திருத்தலம் முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருத்தலமாகும்.

சோழ மன்னன் குலோத்துங்கன் எம்பெருமானுக்கு அன்புப் பணிவிடைகள் செய்து வழிபட்டபோது ஈசன் தில்லையம்பலத்தில் ஆடிய ஆனந்த நடனத்தைக் காண வேண்டும் என்று பக்தியோடு வேள்வி செய்ததினால் அரசனை மகிழ்விக்க எம்பெருமானே அற்புதக் காட்சி தந்து தன் தேவியுடன் ஆனந்த நடனமாடியதால் இத்தலத்தின் ஈசனுக்கு ‘ஆடவல்லீஸ்வரர்’ எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளதாகத் தல வரலாறு தெரிவிக்கின்றது.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னை பிரகன்நாயகியின் அருள் ததும்பும் திருமுக தரிசனம் இங்கு வழிபடும் பக்தர்களின் விழிகளில் நீங்காமல் நிலைத்துவிடுகிறது.

புராதன புடைப்புச் சிற்பத் தொடர்கள்

புராதன காலத்தில் முன்னூற்று மங்கலம் எனப் புகழ்பெற்ற இத்தலம் காலப்போக்கில் மருவி தற்போது ‘முன்னூர்’ என்று பூஜிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் உள்ள மிகப் பழமையான கல்வெட்டுகளில் இத்தலத்தின் ஈசன் ஆடவல்ல நாயனார், திருமூலத்தானமுடைய மகாதேவர், விஸ்வேஸ்வரர் என்னும் திருநாமங்களுடன் மன்னர்களின் காலத்தில் வணங்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

பிறந்தால் முக்தி என்று போற்றப்படும் திருவாரூர் தியாகேசர் திருச்சன்னிதி பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இத்தலத்தின் கல்வெட்டுகளிலும் உள்ளன. இத்திருக்கோயிலில் உள்ள இரண்டு புடைப்புச் சிற்பத் தொடர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் துறையினரால் 1966-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மிகப் புராதனமான இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், தென்திசை நோக்கி எழுந்தருளியிருப்பது வேறு எங்கும் எளிதில் காண முடியாத அரிய தரிசனமாகும். ஜாதகத்தில் 8-ம் இடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் தோஷமிருப்பவர்களுக்கும் கடும் நோயினால் அவதியுறுபவர்களுக்கும் அளவற்ற இரக்கம் காட்டி அவர்களைக் காப்பாற்றவே இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது.

சனகாதி முனிவர்களுக்கு மௌன யோக நிலையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி இத்தலத்தில் காட்சி தந்து அருளியுள்ளார் என்று பிரம்மாண்ட புராணம் தெரிவிக்கின்றது. தேவ குருவான பிருகஸ்பதிக்கு இழந்த தவவலிமையை மீண்டும் அளித்து அருள்பாலித்த தலம் என்பதாலும் இறைவன் தென்புலத்தை நோக்கியிருப்பதாலும் மிகச் சிறந்த குருதோஷப் பரிகாரத் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.

இத்தலத்தில் அரிய திருக்காட்சியாக மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி யுள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.

காஞ்சி மகாபெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் திருவலம் சிவானந்த மௌனகுரு சுவாமிகளும் இத்திருத்தலத்திற்கு எழுந்தருளி ஸ்ரீஆடவல்லீஸ்வரப் பெருமானையும் அன்னை ஸ்ரீபிரகன்நாயகியையும் தரிசித்துள்ளனர்.

ஆன்மீகப் பொக்கிஷமான இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் ஈசன் ஸ்ரீஆடவல்லீஸ்வரப் பெருமானையும் அன்னை ஸ்ரீபிரகன் நாயகியையும் தரிசிக்க குருவருளோடு திருவருளும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

திருத்தலம் செல்லும் வழி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர் திருத்தலம். திண்டிவனத்திலிருந்து அரசுப் பேருந்துகள் உள்ளன. ஆலங்குப்பத்திலிருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x