Last Updated : 16 Mar, 2019 10:38 AM

 

Published : 16 Mar 2019 10:38 AM
Last Updated : 16 Mar 2019 10:38 AM

சறுக்கும் கதவுகளுக்கு மாறலாம்

நவீனக் கட்டிடக் கலையில் வெளிப்படைத்தன்மை என்பது முக்கியமான அம்சமாகச் செயல்படுகிறது. வடிவமைப்பில் வெளிப்படைத் தன்மையை விரும்புபவர்கள் வீடுகளுக்குச் சறுக்கும் கதவுகளைத் (Sling doors) தேர்ந்தெடுக்கலாம். சாதாரணக் கதவுகள் கொடுக்க முடியாத ஒரு நவீனத் தோற்றத்தைக் கொடுக்கக்கூடியவை சறுக்கும் கதவுகள். அழகு, நெகிழ்வுத்தன்மை, இடத்தைச் சேமிக்கும் தன்மை போன்ற காரணங்களால் சறுக்கும் கதவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

நெகிழ்வுத்தன்மை

வெளிப்படையான வடிவமைப்பு கொண்ட சமகால வீடுகளுக்கு இந்தக் கதவு ஏற்றது. சமையலறை, சாப்பாட்டு அறை, வரவேற்பறை, படுக்கையறை ஆகிய அறைகளுக்கு இந்தக் கதவை அறைப் பிரிப்பானாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்குத் தனி அறையை ஒதுக்க முடியாவிட்டால், உங்கள் படுக்கையறை பெரியதாக இருந்தால், இந்தக் கதவை அறைப்பிரிப்பானாகப் பயன்படுத்தி, குழந்தைகளுக்குத் தனி அறையை அமைத்துக்கொடுக்கலாம்.

இடத்தைச் சேமிக்கலாம்

இந்தச் சறுக்கும் கதவுகளை அமைப்பதற்குப் பெரிய இடம் தேவைப்படாது. இதனால், சிறிய வீடுகளுக்கு இந்தச் சறுக்கும் கதவுகள் பொருத்தமானதாக இருக்கும். அறைகளைப் பிரிப்பதற்கும் வெளிப்படையான இடத்தை உருவாக்குவதற்கும் இந்தக் கதவுகள் பயன்படும்.

இட வசதி

இந்தக் கதவுகள் ஓர் அறையை இரண்டாகப் பிரிக்க உதவினாலும், இடத்தைக் குறைக்காது. அதனால், அறைகள் பிரிக்கப்பட்டாலும் அறையின் தோற்றம் எப்போதும்போலவே இருக்கும். இந்தக் கதவுகளைத் திறந்து வைத்திருக்கும்போது, அறையின் தோற்றம் கூடுதல் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும்.

வெளிச்சம்

இந்தக் கதவுகளைப் பயன்படுத்தும்போது, அறைக்குக் கூடுதல் வெளிச்சம் கிடைக்கும். அறைப்பிரிப்பானாகப் பயன்படுத்தியிருந்தால், தனித்தனியாக விளக்குகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்காது. பெரும்பாலும் கண்ணாடிக் கதவுகளைப் பயன்படுத்துவது வெளிச்சத்தை அதிகப்படுத்தும்.

ரசனை

வித்தியாசமான வகையில், உங்கள் ரசனைக்கேற்றபடியும் இந்தச் சறுக்கும் கதவுகளை வடிவமைக்க முடியும். மறுசுழற்சி செய்யப்பட்ட மரக்கதவுகள், பாரம்பரியமான பழைய கதவுகள் போன்றவற்றையும் சறுக்கும் கதவுகளாக மாற்ற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x