Last Updated : 19 Jan, 2019 11:50 AM

 

Published : 19 Jan 2019 11:50 AM
Last Updated : 19 Jan 2019 11:50 AM

வளர்ச்சிப் பாதையில் தென் சென்னை

2012-ம் ஆண்டுக்குப் பிறகு, சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீதம் வளர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது ‘நைட் ஃபிராங்க்’ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை. 2018-ம் ஆண்டில் மட்டும் சென்னையில் 2000 புதிய வீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 20 சதவீதம் அதிகம்.

‘தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாட்டு ஒழுங்குமுறை (TNCDR), மற்றும் கட்டிட விதிகள் 2018’ தொடர்பான முழுமையான தெளிவு கிடைப்பதற்காகவும் கட்டுநர்கள் மேலும் புதிய திட்ட அறிவிப்புகளைத் தற்போது வெளியிடாமல் இருக்கிறார்கள். இந்த விதிகள் தொடர்பான தெளிவான அறிவுறுத்தல்களை அரசு வரையறுத்த பிறகு, இந்த ஆண்டு கூடுதல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018-ம் ஆண்டில், தென் சென்னைப் பகுதிகளில்தான் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில், தென் சென்னைப் பகுதிகள் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கின்றன.

சென்ற ஆண்டின் புதிய திட்டங்களில், 45 சதவீதம் குறைந்த விலை குடியிருப்புகளும் (ரூ. 40 லட்சத்துக்குக் குறைவு), 41 சதவீதம் நடுத்தர குடியிருப்புகளும் (ரூ. 40 லட்சம் - ரூ. 70 லட்சம் வரை), 14 சதவீதம் சொகுசு குடியிருப்புகளும் (ரூ. 70 லட்சத்துக்கும் அதிகம்) அறிமுகப்படுத்தப் பட்டிருந்தன. தென் சென்னையில் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் நான்கு இடங்கள் இவை.

மேடவாக்கம்

பழைய மகாபலிபுரம் சாலையின் (ஒஎம்ஆர்) மதிப்பு அதிகரித்துவிட்ட நிலையில், தங்கள் பணியிடங்களுக்கு அருகில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மேடவாக்கத்தைச் சிறந்த தேர்வாக நினைக்கிறார்கள். தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மேடவாக்கம் உள்ளது. இது தாம்பரம் – வேளச்சேரி சாலை, ஈசிஆர் இணைப்புச் சாலைக்கும் அருகில் உள்ளது.

பெரும்பாக்கம்

கடந்த நான்கு ஆண்டுகளில், பெரும்பாக்கம் பெரிய அளவிலான மாற்றத்தைச் சந்தித்திருக்கிறது. அத்துடன், இந்தப் பகுதியில் குறைந்த விலைக் குடியிருப்புத் திட்டங்கள் அதிகமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தப் பகுதி, சோழிங்கநல்லூர்,  செம்மஞ்சேரி, மேடவாக்கம், சிட்லப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், பெரும்பாக்கம் பகுதியின் விலை 11 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

வானகரம்

என்.எச்-32, என்.எச் -48, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் இடத்தில் இந்தப் பகுதி அமைந்திருக்கிறது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் இந்தப் பகுதிக்கும் 4 கிலோமீட்டர் தூரம்தான் என்பதாலும் தற்போது இந்தப் பகுதி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அண்ணா நகருக்கு அருகில் இருப்பதாலும் தற்போது பெரும்பாலானவர்கள் இந்தப் பகுதியைத் தேர்வுசெய்ய விரும்புகிறார்கள்.

கூடுவாஞ்சேரி

தாம்பரம், ஜிஎஸ்டி சாலை, செங்கல்பட்டுக்கு அருகில் இருப்பதால், இந்தப் பகுதி முதலீடு செய்வதற்கான சிறந்த பகுதியாக மாறிவருகிறது. புறநகர் ரயில் நிலைய வசதி, தொழில் உள்கட்டமைப்பு வசதிகள், குறைவான குடியிருப்பு விலைகள் போன்ற காரணங்களால், இளைஞர்கள் பலரும் வீடு வாங்குவதற்கு இந்தப் பகுதியைத் தேர்வு செய்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x