Last Updated : 02 Jun, 2018 10:47 AM

 

Published : 02 Jun 2018 10:47 AM
Last Updated : 02 Jun 2018 10:47 AM

வீடு கட்ட உதவும் ‘செயற்கை நுண்ணறிவு’

 

வீ

ட்டு வேலை, சர்வர் வேலை, மருத்துவர் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுவந்த ரோபோக்கள் இன்று கட்டுமானத் துறைக்கும் வந்துவிட்டன. வெளிநாடுகளில் கட்டுமானத்துறையில் ரோபோக்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது ‘ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாதனங்களும் கட்டுமானப் பணிகளில் புதிய வரவாக வரத் தொடங்கியுள்ளன.

வெளிநாடுகளைப் பொறுத்தவரை பள்ளம் தோண்டுவதற்காக முதன்முதலில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. அஸ்திவாரத்துக்கு நிலத்தைத் தோண்டுவதற்கு அதிகமான நாட்களும் மனிதவளமும் தேவைப்படும் என்பதால் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் மனித வளம் தேவை குறைந்தது; கால விரயமும் குறைந்தது. இதனைத் தொடர்ந்து பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், பிரம்மாண்டமான வணிக வளாகங்கள் போன்றவற்றைக் கட்டமைப்பதில் ரோபோக்களும் அங்கமாயின. இந்தப் பணிகள் தவிர இதர கட்டுமானப் பணிகளிலும்கூட ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றன.

தற்போது இன்னும் ஒரு படி மேலே போய் கட்டுமானப் பணிகளில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்திவருகின்றனர். அந்த வகையில் ‘ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கட்டுப்பாட்டு சாதனங்களும் கட்டுமானப் பணிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் கட்டுமானப் பணியிடங்களிலிருந்து வரும் கட்டளைகளை உள்வாங்கி கண்ட்ரோல் ரூமுக்கு அனுப்பி, அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கிய புதுமையான செயற்கை நுண்ணறிவு அறிமுகமாகி இருக்கிறது. இந்தக் கருவியுடன் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா, கட்டுமானப் பணிகளின்போது நடைபெறும் விதிமீறல்களைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து தானியங்கி அமைப்பு மூலம் தக்க உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

விதிமீறல்களைக் கண்டுபிடிக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு சாதனம் எப்படி செயல்படும்? அதாவது, கட்டுமானப் பணியிடத்தில் குறிப்பிட்ட இடத்தில் வெல்டிங் மிஷின், வைப்ரேட்டர், எலக்ட்ரிகல் பொருட்கள் பாதுகாப்பு விதிகள்படி இருக்கக் கூடாது என முன்னதாகப் பதிவுசெய்து வைத்தால், குறிப்பிட்ட இடத்துக்கு அவற்றை எடுத்து செல்லும்போது பதிவு செய்யப்பட்ட தகவல் செயற்கை நுண்ணறிவு நினைவகத்தோடு தொடர்பு கொண்டு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடும். இதுபோல விதிமீறல்கள் எங்கெல்லாம் நடக்கும் என உத்தேசித்து, அவற்றைப் பதிவு செய்து வைத்தால், விதிமுறை மீறல் நடக்கும்போது எச்சரிக்கை செய்யும்.

கட்டுமானப் பணிகளின் அனைத்து நிலைகளையும் அவற்றின் வழிமுறைகளையும் இந்தச் செயற்கை நுண்ணறிவு கண்காணிக்கும். ‘கியூரிங்’ பணிகள் முறையாக நடந்துள்ளதா இல்லையா என்பதையும் புரிந்துகொண்டு இது தகவல் அனுப்பும். இதேபோல புகை வெளியேறினாலோ தீப்பிடிக்கும் ஆபத்து இருந்தாலோ அதன் வெப்பநிலையை உணர்ந்து, பணியிடத்தில் ஆபத்தான் சூழல் நிலவுவது பற்றியும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும். இதேபோல கட்டுமானப் பணியிடங்களில் வெளியாட்கள் நடமாடினாலும் சிஸ்டம் உடனுக்குடன் சுட்டிக்காட்டிவிடும். பணியிடங்களுக்கு தினசரி வருவோரின் கண் விழிகளை ஸ்கேனிங் செய்து கருவியின் நினைவகத்தில் சேமித்து வைத்தால், பிறர் வரும்போது எச்சரிக்கை செய்துவிடுகிறது.

வணிக வளாகங்கள், உயரமான அடுக்குமாடிக் கட்டுமானங்கள் ஆகியவற்றின் பணிகளைப் பாதுகாப்பாக செய்து முடிப்பதற்காக இந்தத் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளில் தற்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x