Last Updated : 13 Jan, 2018 09:30 AM

 

Published : 13 Jan 2018 09:30 AM
Last Updated : 13 Jan 2018 09:30 AM

உறையவைக்கும் பனிச்சிற்பங்கள்

ம்முடைய ஊரில் கடற்கரை மணலில் ஏராளமான சிற்பங்கள் வடிப்பது போல் சீன மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பனிக்காலத்தின்போது, பனிக்கட்டிகளால் பிரம்மாண்டச் சிற்பங்களை வடித்து உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு சீனாவில் வடகிழக்குப் பகுதியான செங்குவா நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான நகரமான ஹெயிலோஜியாங் (Heilongjiang ) பகுதியில் இந்த ஆண்டுக்கான சர்வதேசப் பனிச்சிற்பக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

சீனாவில் முதன்முறையாக 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பனிச்சிற்பக் கண்காட்சி தற்போது 35-வது ஆண்டில் அடி எடுத்துவைக்கிறது. ‘பனி பூக்கும் பூங்கா’ என இந்த ஆண்டின் பனிச்சிற்பக் கண்காட்சிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

நதியே ஆதாரம்

பனிக்காலம் தொடங்கியவுடனே செங்குவா நதி முழுவதும் பனியால் உறைந்துவிடுகிறது. டிசம்பர் மாதத்தில் முழுவதுமாக உறைந்துள்ள இந்த நதியின் பனிக்கட்டிகளை வெட்டி எடுத்துப் பனிச்சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு வெட்டி எடுக்கப்பட்ட 1,80,000 கன மீட்டர் பனிப்பாறைகளில் இருந்து இந்தக் கண்காட்சியில் உள்ள இரண்டாயிரம் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக இந்தப் பனிச்சிற்பங்களை வடிவமைக்கும் பணியில் பெரும்பாலும் ஹெயிலோஜியாங் பகுதி மக்களே ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “இந்தப் பனிச்சிற்பங்கள் இவ்வாறு தெளிவாக இருப்பதற்கு முக்கியக் காரணம் செங்குவா நதிதான். அந்த நதியில் இயற்கையாக உள்ள தெளிவான தோற்றம் பனிச்சிற்பங்களிலும் பிரதிபலிக்கிறது” என்கிறார் பல ஆண்டுகளாகப் பனிச்சிற்பங்களை வடிவமைத்துவரும் சிற்பக்கலைஞர் கா கைலீனு (Gao Kailin).

ஆறு லட்சம் ஏக்கர்!

சுமார் ஆறு லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்தப் பனிச்சிற்பக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. சுமார் பத்தாயிரம் வடிவமைப்பாளர்களைக் கொண்டு இங்குள்ள சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெப்பநிலை மைனஸ் 35 டிகிரிக்கும் கீழ் உள்ளது. இந்தக் கண்காட்சியில் பனிச்சறுக்கு விளையாட்டுகள், மாஸ்கோ செஞ்சதுக்கம், பெங்ஜிங்யின் டெம்பிள் ஆப் ஹெவன் கோவில், மரகதப் புத்தகக் கோயில், மாஸ்கோவின் செயிண்ட் பசில் கதீட்ரல் சர்ச் ஆகியவற்றின் முக்கியமான கட்டிடங்களின் மாதிரி வடிவங்கள் இந்தப் பனிச்சிற்பக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் எல்.இ.டி விளக்குகளால் ஒளிபெற்று இரவு நேரத்தில் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.

ஒருகோடி சுற்றுலாப் பயணிகள்

கடந்த ஆண்டு நடைபெற்ற பனிச்சிற்பக் கண்காட்சியில் சுமார் 1 கோடியே 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கண்காட்சிக்கு வந்துள்ளனர். அதேபோல் சுமார் நாற்பது கோடி டாலர் வருமானம் இந்தக் கண்காட்சி மூலமாகக் கிடைத்துள்ளது என சீனா சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் நடைபெறும் மற்ற பனிச்சிற்பக் கண்காட்சிகளைவிட சீனாவின் ஹெயிலோஜியாங் பகுதியில் நடைபெறும் கண்காட்சி மிகப் பெரியதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. இந்தக் கண்காட்சி அடுத்த மாதம் 28-ம் தேதிவரை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x