Published : 06 Mar 2019 10:12 AM
Last Updated : 06 Mar 2019 10:12 AM

டிங்குவிடம் கேளுங்கள்: சைவமா, அசைவமா?

எனக்கு அசைவம் பிடிக்கும். மீன், கோழி, ஆடு எல்லாம் பாவம் இல்லையா?, சைவ உணவுதான் சாப்பிட வேண்டும் என்கிறார் என் பக்கத்து வீட்டுக்காரர். எனக்கு ஏதோ குற்றம் செய்துவிட்டதுபோல் தோன்றுகிறது. அசைவத்தை விட்டுவிட வேண்டுமா, டிங்கு?

– எஸ். சூர்யா, 8-ம் வகுப்பு, சாய்ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தாம்பரம்.

சிறிதும் நாகரிகம் இல்லாமல், அடுத்தவர்களின் உணவுப் பழக்கத்தில் தலையிடும் போக்கு சமீபத்தில்தான் அதிகரித்திருக்கிறது. பூமியில் வாழும் உயிரினங்களில் தாவரங்கள் மட்டுமே தங்களுக்குத் தேவையான உணவை, சூரிய ஒளியின் உதவியால் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. மற்ற உயிரினங்கள் அனைத்தும் தாவரங்களையோ பிற உயிரினங்களையோ உணவுக்காகச் சார்ந்திருக்கின்றன.

உயிரினங்களில் ஒரு பகுதி தாவரங்களை மட்டும் சாப்பிடக் கூடியவையாக இருக்கின்றன. இன்னொரு பகுதி விலங்குகளை மட்டும் சாப்பிடக்கூடியவையாக இருக்கின்றன. மூன்றாவது பகுதி தாவரங்களையும் விலங்குகளையும் சாப்பிடக்கூடியவையாக இருக்கின்றன. இந்த மூன்று உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளும் உயிரினங்களும் தாவரங்களை நம்பியிருக்கின்றன.

பூச்சிகளைச் சிறிய பறவைகள் சாப்பிடுகின்றன. அந்தப் பறவைகளை நரி  போன்ற விலங்குகளும் மனிதர்களும் சாப்பிடுகின்றனர். தாவரங்களை முயல் சாப்பிடுகிறது. முயலைப் பாம்பு சாப்பிடுகிறது. அந்தப் பாம்பைக் கழுகு சாப்பிடுகிறது. நீரில் வளரும் பாசிகளை லார்வாக்கள் சாப்பிடுகின்றன.

அந்த லார்வாக்களை மீன்கள் சாப்பிடுகின்றன. மீன்களைப் பெரிய மீன்கள்,  பறவைகள், மனிதர்கள் சாப்பிடுகின்றனர். இப்படி ஒவ்வோர் உயிரினமும் உணவுக்காக இன்னோர் உயிரினத்தைச் சார்ந்துதான் இருக்கிறது. இயற்கையாகவே உணவுச் சங்கிலி இப்படி அமைந்திருக்கிறது.

இந்த உணவுச் சங்கிலியை உடைத்தால் என்ன ஆகும்? மீன்களை எந்த உயிரினமும் சாப்பிடவில்லை என்றால் கடலில் மீன்கள் பெருகிவிடும். காட்டில் மான்கள் நிரம்பிவிடும். மான்கள் நிரம்பினால் அவற்றுக்குத் தேவையான தாவர உணவுக்குப் பற்றாக்குறை ஏற்படும். மான்களும் மீன்களும் பிற உயிரினங்களுக்கு உணவாகும்போது, அவற்றின் எண்ணிக்கை குறைகிறது.

உணவுப் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இரையாகும் உயிரினங்கள் எண்ணிக்கையில் அதிகமாகவும் வேட்டையாடும் உயிரினங்கள் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்கின்றன. மான்களை விட சிங்கம், புலிகளின் எண்ணிக்கை குறைவு.

ஆதி காலத்தில் மனிதர்கள் அசைவம் சாப்பிடுபவர்களாகத்தான் இருந்தார்கள் என்பதையும் தாவரங்களும் உயிரினங்கள்தான் என்பதையும் மறந்துவிடக் கூடாது. நீங்கள் சைவ, அசைவ உணவுப் பழக்கத்தைத் தொடர்வது உங்கள் விருப்பம் சார்ந்தது. இதில் யாருமே தலையிட முடியாது, சூர்யா.

எந்த உணவுப் பழக்கமும் உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை. அசைவம் சாப்பிடுவதால் குற்ற உணர்வுகொள்ள வேண்டாம். உயிர் வாழ உணவு அவசியம். இன்று உணவுக்காகவே கோழி, ஆடு, மாடு போன்றவை ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

நான் கோழி சாப்பிடுகிறேன் என்பதற்காக மாடு சாப்பிடுபவர்களை மட்டமாக நினைக்க மாட்டேன். அதேபோல் சீனாவில் பாம்பும் நாயும் சாப்பிடுவதைத் தாழ்வாகக் கருத மாட்டேன். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரின் உணவுப் பழக்கத்தையும் மதிக்கிறேன்.

கணித விஞ்ஞானியான என் நண்பர், வீட்டில் சைவ உணவுதான் சாப்பிடுவார். ஆனால், அவர் வெளியே கூட்டங்களுக்குச் செல்லும்போது இலையில் அசைவ உணவு வைத்து விட்டால், தான் சைவம் என்று சொல்லவே மாட்டார். அப்படிச் சொன்னால் அசைவம் சாப்பிடுபவரை மட்டமாக நினைத்ததுபோல் ஆகிவிடும்

என்று நினைப்பார். இலையில் ஆடு, கோழி, மீன் என்று எதை வைத்தாலும் அதை கேரட் பொரியல் போல் தயக்க மின்றிச் சாப்பிட்டு எழுந்து விடுவார். அவர் சைவம்தான் சாப்பிடுவார் என்பது நெருங்கியவர்களைத் தவிர, யாருக்கும் தெரியாது. அவரைப் போல்தான் உலகின் எந்த மனிதர் சாப்பிடும் உணவையும் நாம் மதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சூரியனைச் சுற்றும் கோள்களின் சுற்றுப்பாதை நம் கண்களுக்குத் தெரியுமா, டிங்கு?

– ஏ. வளன் அரசு, 7-ம் வகுப்பு, டான் பாஸ்கோ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

நாம்  நிலத்தில்  போட்டு  வைத்திருக்கும் பாதைபோல் விண்வெளியில் ஏதும் பாதை இல்லை. கோள்கள் சூரியனை நீள்கோள வடிவில் சுற்றி வருதைத்தான் சுற்றுப்பாதை என்கிறோம். தெளிவான வானில் வெறும் கண்களால் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களை நம்மால் காண முடியும்.

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இவற்றைக் கவனித்து, தாளில் குறித்து வந்தால், அவற்றின் நகர்வை நம்மால் உணர முடியும். தொலைநோக்கி இருந்தால் கோள்களை இன்னும் தெளிவாகவும் எளிதாகவும் காண முடியும், வளன் அரசு.

கண்ணீர் எங்கே சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது, டிங்கு?         

– கே. பிரியா, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம்.

நம் ஒவ்வொரு கண்ணின் மேல் புறத்திலும் ஒரு கண்ணீர்ச் சுரப்பி இருக்கிறது. இது எப்போதும் குறைந்த அளவில் கண்ணீரைச் சுரந்துகொண்டே இருக்கும். அதனால்தான் கண்கள் வறண்டு விடாமலும் சுத்தமாகவும் இருக்கின்றன. கண்களில் உறுத்தல், உடலில் வலி, துக்க உணர்ச்சி போன்றவை ஏற்படும்போது கண்ணீர்ச் சுரப்பிகள் அதிகமான நீரைச் சுரக்கின்றன. கண்ணீர்ச் சுரப்பிகள் தவிர, இமைகளிலும் விழிவெண் படலத்திலும் துணைச் சுரப்பிகள் இருக்கின்றன. இவையும் சிறிதளவு கண்ணீரைச் சுரக்கின்றன, பிரியா.

tinku-3jpg100 

நாம் வெளியில் கிளம்பும்போது, பூனை குறுக்கே சென்றால் நல்லதில்லை என்கிறார்களே ஏன், டிங்கு?

– கு. லிபிவர்ஷ்னி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.

அந்தப் பூனைக்கு என்ன அவசரமோ! அது ஓர் எலியைப் பிடிக்கப் பாய்ந்து ஓடலாம், தன் குட்டிகளைக் காணச் செல்லலாம், சொகுசான இடம் தேடித் தூங்கப் போகலாம். பூனை என்று ஒன்று இருந்தால் அது குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டுதான் இருக்கும். பூனை குறுக்கே போவதால் தடங்கல் ஒன்றும் இல்லை. அதுக்கு நம் காரியத்தைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது, லிபிவர்ஷ்னி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x