Last Updated : 23 Jan, 2019 12:08 PM

 

Published : 23 Jan 2019 12:08 PM
Last Updated : 23 Jan 2019 12:08 PM

கதை: பயமா, அன்பா?

அடர்ந்த சமோன் காட்டில் ஒரு சிங்கராஜா வாழ்ந்துவந்தது. அதுக்குத் தன்னைப் பற்றிய பெருமை அதிகம். தான் வலிமையானவன் மட்டுமில்லை, மிகவும் நல்லவன், அதனால்தான் தன்னைக் காட்டு விலங்குகள் மதிக்கின்றன என்ற எண்ணமும் அதுக்கு இருந்தது.

இப்படித் தன்னை நினைத்து சிங்கராஜா பெருமிதம் அடைந்துகொண்டிருந்தபோது, நரி வந்தது.

“என்ன ராஜா, ஒரே சிந்தனை?”

“நான் எவ்வளவு நல்லவன் என்று யோசித்துப் பார்த்தேன். என்னாலேயே அதைத் தாங்கிக்க முடியலை.”

என்னாலும் தாங்கிக்க முடியவில்லை என்று நினைத்த நரி, ”எதை வைத்து அப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டது.

“நான் செல்லும் இடங்களில் எல்லாம் எல்லோரும் எவ்வளவு மரியாதை தருகிறார்கள் என்பது உனக்கே தெரியுமே! இதுக்கு மேல் வேறு என்ன வேண்டும்?’’

“ராஜா, உங்கள் மேல் உள்ள பயத்த்தினால்தான் மரியாதையே தவிர, அன்பால் யாரும் மரியாதை கொடுக்கவில்லை.”

நரி சொன்ன உடன் சிங்கராஜாவின் முகமே மாறிவிட்டது. கோபத்தில் கர்ஜித்தது. பயத்தில் தலைதெறிக்க ஓடிவிட்டது நரி.

kadhai-2jpg

மகிழ்ச்சியாக இருந்த சிங்கராஜாவின் மனம், கல் எறிந்த குளம்போல் கலங்கிவிட்டது. ’உண்மையிலேயே இந்தக் காட்டில் வசிக்கும் விலங்குகள் எல்லாம் என் மீது அன்பால் மரியாதை செலுத்தவில்லையா?’

நரி சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம். தானே இதை நேரில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தது சிங்கராஜா.

அடுத்த நாளே, தான் வசித்த குகையை விட்டு வெளியேறி,  தலைமறைவாக வாழ ஆரம்பித்தது. ஒரு வாரத்துக்குப் பிறகு, ஒளிந்திருந்து விலங்குகளைக் கண்காணிக்கத் தொடங்கியது.

சிங்கராஜா இல்லை என்ற செய்தி காடு முழுவதும் பரவிவிட்டதால், விலங்குகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தன. இதைக் கண்டதும் சிங்கத்தின் மனம் வருந்தியது.

“நான் இல்லை என்ற வருத்தம் ஒருவருக்கும் இருப்பதுபோல் தெரியவில்லையே… நான் மீண்டும் வந்துவிடுவேனோ என்ற பயம் மட்டும் சிலரிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது” என்று தனக்குள் நினைத்துக்கொண்ட சிங்கராஜா, மேலும் நடந்தது.

அப்போது ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த இரண்டு மான்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டது.

“எதுக்கு சோகமா இருக்கே?”

“நம்ம சிங்கராஜா காணாமல் போய் ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு. எங்க போனார், என்ன ஆனார் என்று தெரியலை” என்றது ஆண் மான்.

அடடா! நம் மீது அன்பு செலுத்த ஒரு ஜீவன் இருக்கிறதே என்று மகிழ்ந்தது சிங்கராஜா.

”அட, இதுக்கா இவ்வளவு சோகம்? நல்ல விஷயம் தானே?”

“என்ன சொல்ற?”

“சிங்கராஜா நமக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? நம்ம இனம் என்றால் அவருக்குக் கொண்டாட்டம். மான்களைத்தான் அதிகமா வேட்டையாடினார். நீயும் நானும் அவரைப் பார்க்கப் போனால் விருந்தா வைப்பார்? நம்மை விருந்தாக்கிக்கொள்வார். இனியாவது நிம்மதியா இருப்போம்” என்றது பெண் மான்.

இதுக்கு மேல் எதுவும் கேட்கும் மனநிலையில் சிங்கராஜா இல்லை. வருத்தத்துடன் நடக்க ஆரம்பித்தது. திடீரென்று  நரியின் அழுகை கேட்டது. சட்டென்று சிங்கம் மரத்துக்குப் பின்னால் ஒளிந்து, கவனிக்க ஆரம்பித்தது.

அங்கு வந்த இன்னொரு நரி காரணம் கேட்டது.

“நம் சிங்கராஜா காணாமல் போயிட்டாரே” என்று தேம்பி அழுதது அந்த நரி.

”ஆஹா! இறுதியில் என் மீது அன்பு வைத்திருக்கும் ஒரு நரியையாவது கண்டுகொண்டேன்” என்று மகிழ்ந்தது சிங்கராஜா.

“அவர் இல்லை என்றால் உனக்கு என்ன நஷ்டம்?”

“என்ன இப்படிச் சொல்லிட்ட? அவரிடம் எனக்கு நெருக்கம் அதிகம் என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தேன். அதனால் மற்ற விலங்குகளை மிரட்டி, எனக்கு வேண்டிய காரியங்களை எல்லாம் செய்துகொண்டேன். ஒரு நாளும் உணவு தேடி அலைந்ததில்லை. சிங்கராஜாவுக்கு என்று சொல்லி, உணவை வாங்கிச் சாப்பிட்டேன். நானே ஒரு ராஜா மாதிரி இருந்தேன். இப்ப எல்லாமே என்னை விட்டுப் போய்விட்டதே” என்று அழுதது அந்த நரி.

இதைக் கேட்டதும் சிங்கராஜாவின் மனம் இரண்டாவது முறையாக நொறுங்கியது.

பயத்தால் கிடைக்கிற மரியாதை நீர்க்குமிழி மாதிரி. எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும். அன்பால் கிடைக்கிற மரியாதைதான் கல்வெட்டு மாதிரி காலத்துக்கும் அழியாமல்  நிற்கும் என்ற உண்மையைப் புரிந்துகொண்ட சிங்கராஜா, அன்று முதல் அன்பாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x