Last Updated : 09 Jan, 2019 10:37 AM

 

Published : 09 Jan 2019 10:37 AM
Last Updated : 09 Jan 2019 10:37 AM

கதை: சுற்றுலா சென்ற சுண்டைக்காய்!

பாட்டி சமைப்பதற்காகச் சுண்டைக்காய் வாங்கினார். வீட்டில் சுண்டைக்காய்களை எடுக்கும்போது, அதில் ஒன்று மட்டும் உருண்டு சோற்றுப் பானைக்குப் பின்னால் போய் ஒளிந்துகொண்டது. அந்தச் சோற்றுப் பானையை அப்போதுதான் பாட்டி இறக்கி வைத்திருந்தார். பானை சூடாக இருந்தது.

ஒளிந்திருந்த சுண்டைக்காய், “ஐயோ சுடுதே… அம்மா சுடுதே... அப்பா சுடுதே.. அக்கா சுடுதே... அண்ணன் சுடுதே…“ என்று கத்தியபடி உருண்டு ஓடியது.

கண்ணைத் திறந்து பார்த்தால் அரிவாள்மனை முன்னால் இருந்தது. அரிவாள்மனை சுண்டைக்காயைப் பார்த்ததும், “வா ராஜா வா… சீக்கிரமா வா... கூராக இருக்கேன்… கூறு போட்டுத் தாரேன்... வா ராஜா வா… சீக்கிரமா வா” என்று தன்னுடைய பளபளப்பான பல்லைக் காட்டிச் சிரித்தது.

சுண்டைக்காய் உடனே அங்கிருந்து உருண்டு தண்ணீர் வைத்திருந்த செப்புப் பானைக்குக் கீழே போய் நின்றது. செப்புப் பானை, “குளிருது ஐயா குளிருது... பனிக்கட்டிபோல குளிருது… காய்ச்சல் வரும் ஐயா காய்ச்சல் வரும்… காப்பாத்துங்க ஐயா காப்பாத்துங்க” என்று நடுங்கிக்கொண்டிருந்தது.

சுண்டைக்காய்க்கும் குளிர ஆரம்பித்தது. செப்புப் பானையிலிருந்து கொஞ்சம் தூரம் நடந்து, வெண்கல உருளியின் அருகில் போய் நின்றது. உடனே வெண்கல உருளி உருண்டு தன் வாயைக் காட்டியது. ஐயோ உள்ளே ஒரே இருட்டு. ஈயம் பூசின கறுத்த வாயைப் பார்த்த சுண்டைக்காய் பயந்துவிட்டது. எதுக்கு வம்பு என்று தள்ளி இருந்த தம்ளருக்குப் பின்னால் போய் ஒளிந்தது.

தம்ளர், முகத்தைச் சுளித்து, “எங்கூடச் சேராதே பொடியா... எங்கிட்டே பேசாதே பொடியா... என் பக்கம் நிக்காதே பொடியா...” என்றது.

சுண்டைக்காய்க்குக் கோபம் வந்துவிட்டது. அங்கிருந்து உருண்டு ஒருபடி உழக்குக்குள் போய் ஒளிந்துகொண்டது. ஒருபடி உழக்கு அப்போதுதான் தூங்கி விழித்திருந்தது. அது “இடமில்லை இடமில்லை… எனக்கே இடமில்லை… என் தம்பி வீட்டுக்குப் போ” என்று விரட்டியது.

இரண்டு அடி எடுத்து வைத்தது சுண்டைக்காய். அரைப்படி உழக்கு நின்று கொண்டிருந்தது. அது சுண்டைக்காயைப் பார்க்காமலேயே, “இடமில்லை இடமில்லை… எனக்கே இடமில்லை… என் தம்பி வீட்டுக்குப் போ” என்று சொன்னது.

”அட நிமிர்ந்துகூடப் பார்க்கல” என்று நினைத்துக்கொண்டே சுண்டைக்காய் கொஞ்சம் நடந்தது. கால்படி உழக்கு நிறைய கம்பு தானியம் இருந்தது. அது சுண்டைக்காயைப் பார்த்து, “இடமிருக்கு இடமிருக்கு மனசில… ஆனால், இடமில்லை இடமில்லை வீட்டிலே” என்று வருத்தத்துடன் சொன்னது.

அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் அரைக்கால்படி உழக்கு, “ஐயா, நீங்க யாரோ எவரோ தெரியாது. தெரியாத ஆளுக்கு இடம் தரக் கூடாதுன்னு எங்க பெரியப்பா சொல்லியிருக்காரு” என்று சொன்னவுடன் சுண்டைக்காய்க்கு அலுத்துவிட்டது.

முணுமுணுத்தபடி தரையைப் பார்த்துக்கொண்டே நடந்து, கால் அரைக்கால்படி உழக்குக்குள் போய்விட்டது. “ஐயா, உங்கள் வரவு நல்வரவாகுக! நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்கியிருக்கலாம்” என்று வரவேற்றது. சுண்டைக்காய்க்கு ஆச்சரியம். சிறிது நேரம் ஓய்வெடுத்தது.

பிறகு எழுந்து, “விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி” என்று சொல்லிவிட்டு, இரண்டு அடி எடுத்து வைத்தது. கண் அகப்பை அதைத் தூக்கிக்கொண்டது. சுண்டைக்காயால் நிற்க முடியவில்லை. அகப்பைக்குள் உருண்டுகொண்டே வந்தது.

“யாரப்பா நீ? கூறப்பா பேரு.. ஏது ஊரப்பா நீ?“ என்று கண் அகப்பை கேட்டது. சுண்டைக்காய்க்குச் சிரிப்பாக வந்தது. அப்போது பாட்டி கண் அகப்பையை எடுப்பதற்காகக் கையை நீட்டினார். அதைப் பார்த்ததும் சுண்டைக்காய் விருட்டென்று பாய்ந்து குத்துப்போணிக்குள் நுழைந்துவிட்டது. குகை மாதிரி இருட்டாக இருந்த குத்துப்போணிக்குள் காற்று விர்ரென்று வீசியது. சுண்டைக்காய்க்குப் பயமாக இருந்தது. அங்கே இருந்து பித்தளைக் குண்டாவுக்குள் பாய்ந்தது. பெரிய விளையாட்டு மைதானம் மாதிரி இருந்தது. அதில் மேலும் கீழும் சறுக்கி விளையாடியது சுண்டைக்காய்.

“ஓடி ஆட வாங்க… பாடி ஆட வாங்க… கூட்டாக வாங்க” என்று பாடியபடியே  விளையாடியபோது, துள்ளி இட்லி பாத்திரத்துக்குள் இருந்த இட்லித் தட்டில் விழுந்துவிட்டது. நல்லவேளை பாட்டி காலையிலேயே இட்லி அவித்து முடித்துவிட்டார். இட்லித் தட்டிலிருந்து ஏறி வெளியே வைத்திருந்த சட்டக அகப்பை வழியே சறுக்கி ஓடியது.

சுண்டைக்காய்க்கு ஜாலியாக இருந்தது. எண்ணெய்ச்சட்டியில் விழுந்து எண்ணெயில் குளித்து எழுந்தது. அப்படியே குழம்புச்சட்டிக்குள் ஏறி இறங்கியது. பாட்டி சமையலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். காய்கறிகளை நறுக்கி ஒரு தட்டில் வைத்து அடுப்பில் ஏற்றினார். விறகுகளையும் சுள்ளிகளையும் அடுப்பில் திணித்தார். அடுப்பைப் பற்றவைத்தார். எண்ணெய்ச்சட்டியை அடுப்பில் வைத்தார். கடுகு, உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதில் நறுக்கி வைத்திருந்த சுண்டைக்காய்களைப் போட்டார். அப்போதுதான் கவனித்தார். ஒரே ஒரு சுண்டைக்காயைக் காணவில்லை.

எங்கே போயிருக்கும்?

பாட்டி அங்கும் இங்கும் தேடினார். சுண்டைக்காயின் அடுக்களைச் சுற்றுலா இன்னும் முடியவில்லையே, அது இப்போதுதான் பாட்டியின் அஞ்சறைப்பெட்டியைப் பார்க்கப் போயிருக்கிறது. அதன் மகிழ்ச்சியைக் கெடுக்க வேண்டாம். பாட்டியிடம் சொல்லிவிடாதீர்கள்!கதை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x