Published : 18 Oct 2018 07:43 PM
Last Updated : 18 Oct 2018 07:43 PM

நம் கலாம்

1.   1931-ம் ஆண்டு இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள சிறிய ராமேஸ்வரம் தீவில் பிறந்தாலும், பிற்காலத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்!

கலாமின் கேள்வி கேட்கும் குணத்தால் கவரப்பட்ட அஹமது ஜலாலுதீன், செய்தித்தாளைப் படிக்கவும் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை வாசிக்கவும் ஆலோசனை தந்தார்.

சிறு வயதிலிருந்து தம் வாழ்நாள் முழுவதும் அனைத்து மதத்தினரிடமும் அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். அதனால் மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களும் இவருக்கு நண்பர்களாக இருந்தனர்.

விடுமுறை நாட்களில் வேலை செய்து, சம்பளம் பெற்று, தன் குடும்பத்தினருக்கு உதவியாக இருந்தார்.

ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் அய்யாதுரை சாலமன் அறிமுகமானார். அவரே அத்தனைக்கும் ஆசைப்படவும் அந்த ஆசையை நிறைவேற்ற நம்பிக்கையோடு உழைக்கவும் சொன்னார். உழைப்பும் நம்பிக்கையும் உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார், கலாம் .

இளங்கலையில் இயற்பியல் பாடம் படித்தார். தனக்கு யாராவது வழிகாட்டியிருந்தால் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கலாம் என்று நினைத்தார். பின்னர் சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் சேர்ந்தார்.

விமானப் பொறியியல் படிக்கும் லட்சியம் நிறைவேறியது. தாழ்வாகப் பறந்து தாக்கும் போர் விமானத்தை வடிமைக்கும்படி கலாம் குழுவினரிடம் சொல்லப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்களால் வடிவமைக்க இயலவில்லை. மூன்றே நாட்களில் திட்டத்துக்கான வரைபடம் தயாரிக்கவில்லை என்றால் உதவித்தொகை நிறுத்தப்படும். சாப்பாடு, தூக்கம் இன்றி மூன்று நாட்களும் கடுமையாக உழைத்து, அந்த வரைபடத்தைத் தயாரித்துக் கொடுத்தனர்.

இன்ஜின் இல்லாத கிளைடர் விமானத்தை, கலாமும் அவரது நண்பர்களும் வடிவமைத்தனர். விமானப் பொறியியல் பட்டதாரியானார், கலாம்.

விமானப்படைத் தேர்வில் ஒன்ப தாவது இடத்தைப் பெற்றதால், கலாமின் விமானியாகும் கனவு தகர்ந்து போனது. விரைவிலேயே மனதைத் தேற்றிக்கொண்டு, விமான ஆய்வு,
வடிவமைப்பு போன்ற பணிகளைச்
செய்தார்.

ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாபிளிஷ்மெண்ட் அமைப்பில், ஹோவர் க்ராஃப்ட் தயாரிக்கும் பணி கலாமுக்குக் கிடைத்தது. நீரிலும் நிலத்திலும் சில அடி உயரத்தில் பறக்கும் இயந்திரத்தை வெளிநாட்டு உதவியின்றி கலாம் குழுவினர்
உருவாக் கினர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் தந்தை விக்ரம் சாராபாய், முன் அனுபவம் இல்லாவிட்டாலும் கலாமால் பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும் என்று நினைத்தார். தும்பா விண்வெளி ஆய்வுக் கூடத்தில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்.

ரேடோ இயந்திரம் தயாரிக்கும் பொறுப்பை விக்ரம் சாராபாய் கலாம் குழுவினருக்கு வழங்கினார். இந்தியத் தயாரிப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தப் பணி நிறைவடைந்து, கலாம் குழுவினருக்குப் பெருமையைத் தேடித் தந்தது.

979-ம் ஆண்டு கலாம் தலைமையில் எஸ்.எல்.வி. செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது. வருத்தமடைந்தாலும் அடுத்த ஆண்டு ரோஹிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர். இதன் மூலம் அறிவியல் வளர்ச்சியில் அழுத்தமாகக் கால் பதித்தது இந்தியா. கலாமின் புகழ் எங்கும் பரவியது.

1982-ம் ஆண்டு விண்வெளிப் பணியிலிருந்து விலகி, பாதுகாப்பு ஆய்வுப் பணிக்குச் சென்றார். அவரின் வழிநடத்தலில் நாக், ப்ருத்வி, ஆகாஷ், திரிசூல், அக்னி திட்டங்கள் தீட்டப்பட்டன. பிருத்வி ஏவுகணையின் வெற்றியைக் கண்டு பக்கத்து நாடுகள் பயந்தன. பயமுறுத்துவது தன்னுடைய நோக்கமில்லை, இந்தியாவாலும் செய்து காட்ட முடியும் என்பதை நிரூபிப்பதே நோக்கம் என்றார், கலாம்.

அக்னி ஏவுகணை தோல்வியுற்றபோது, அவரது குழுவினர் மனம் உடைந்தனர். “தோல்வியைக் கண்டு துவண்டுவிடக் கூடாது. வெற்றி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்” என்று உற்சாகப்படுத்தினார். 1989-ம் ஆண்டு அக்னி வெற்றிகரமாக ஏவப்பட்டது.

மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசகராக கலாம் இருந்தபோது, பொக்ரானில் அணு குண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இந்தியா வலிமையான நாடு என்பதைப் பிற நாடுகள் புரிந்துகொள்ளும் என்றார்.

போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள்,  காலில் எடை அதிகமான காலிப்பர் கருவியை மாட்டிச் சிரமப்பட்டனர். அவர்களுக்காக எடை குறைந்த காலிப்பர் கருவியை உருவாக்கிக் கொடுத்தார்.

தன்னுடைய சுயசரிதை இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியைக் எடுத்துக் காட்டுவதாக இருந்ததால், புத்தகமாக வருவதற்குச் சம்மதித்தார். 1999-ம் ஆண்டு ‘Wings of Fire’ வெளியானது. அக்னிச் சிறகுகள் என்ற பெயரிலும் வெளிவந்து, லட்சக்கணக்கில் விற்பனையானது. இந்தியா 2020 உட்பட 8 நூல்களைத் தனியாகவும் பிறருடன் சேர்ந்தும் எழுதியிருக்கிறார் கலாம்.

மாணவர்கள், இளைஞர் களின் உதாரண நாயகனாக மாறினார் கலாம். 6 பிரதமர்களுடன் வேலை செய்த தன்னுடைய அனுபவம் நாட்டுக்குப் பயன்படும் என்பதால், குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.

“பூமி தன்னைத் தானே சுற்றும்போது 24 மணி நேரம். சூரியனைச் சுற்றும்போது 365.5 நாட்கள். இந்தச் சுழற்சி நடைபெறும்வரை எல்லா நேரமும் நல்ல நேரம்தான்” என்பார் கலாம்.

2002-ம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார். நாடு முன்னேற கிராமங்கள் முன்னேற வேண்டும் என்றார். அவரின் முயற்சியால் மத்திய, மாநில அரசுகள் கிராம முன்னேற்றத்தில் கவனம் செலுத்தின.

இதுவரை எந்தக் குடியரசுத் தலைவரும் செய்யாத பல விஷயங்களைச் செய்தார். பள்ளி, கல்லூரி மாணவர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்தார். பல்கலைக்கழங்களில் பாடம் நடத்தினார்.

இந்திய அரசின் மிக உயர்ந்த விருதுகளான பத்ம பூஷண், பத்ம விபூஷன், பாரத ரத்னா ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். உலகம் முழுவதிலுமிருந்து 40 பல்கலைக்கழங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை அளித்திருக்கின்றன. இவரது        79-வது பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபை, ‘உலக மாணவர் தினம்’ என்று அறிவித்தது.

விஞ்ஞானி, ஆசிரியர், எழுத்தாளர், குடியரசுத் தலைவர் என்று அனைத்துப் பணிகளையும் திறம்படச் செய்த அப்துல் கலாம் ‘மக்களின் குடியரசுத் தலைவர்’ என்று கொண்டாடப்பட்டார்.

2015-ம் ஆண்டு மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில், மாணவர்களிடம் உரை யாற்றிக் கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்தவர் கண் விழிக்கவே இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என்று அனைவருக்கும் பிடித்தமான தலைவரக இருந்தவர் அப்துல் கலாமே!

- தொகுப்பு: சுஜாதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x