Published : 06 Jun 2018 10:58 AM
Last Updated : 06 Jun 2018 10:58 AM

கதை: மழைக்கு ஒதுங்கிய ஆடு

 

கா

ட்டில் மழைக் கொட்டிக் கொண்டிருந்தது. வழி தவறிய ஆடு ஒன்று மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றது. அதிக நேரம் மழையில் நனைந்ததால் குளிரில் நடுங்கியது.

அடிக்கடித் தன்னையும் மீறி 'மே… மே...' என்று கத்தியது. ஆடு கத்தும் சத்தம் கேட்டுப் பக்கத்து குகையில் இருந்த நரி எட்டிப் பார்த்தது. கொட்டும் மழையில் உற்றுப் பார்த்தது. சற்றுத் தூரத்தில் ஆடு இருப்பதைக் கண்டது.

’நல்ல பசி. ஆடு தனியாக இருக்கிறது. பிடித்தால் ஒரு வாரம்வரை உட்கார்ந்து சாப்பிடலாம்’ என்று நினைக்கும் போதே நரிக்கு நாவில் நீர் ஊறியது. ’ஆட்டை எப்படிப் பிடிப்பது? உடல் நலமில்லை என்பதால் மழையில் வெளியே போகவும் முடியாது. அதற்காக ஆட்டை விடவும் மனமில்லை. ஆட்டின் மீது இரக்கம் காட்டுவதுபோல நடிக்கலாம். என் பேச்சில் மயங்கிக் குகைக்குள் வரும்போது பிடித்துவிடலாம்’ என்று திட்டம் தீட்டி, ஆட்டை அழைத்தது.

"நண்பா, இப்படிக் கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தால் உடல் என்னாவது? உன்னை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. என் குகைக்கு வா. சற்றுக் கதகதப்பாக இருக்கும். மழை குறைந்த பிறகு நீ கிளம்பிவிடலாம்" என்றது நரி.

நரியைப் பார்த்த உடன் ஆட்டுக்குப் பயம் வந்துவிட்டது. ’ஐயோ... இன்றோடு நான் காலியா?’ என்று நினைத்தது ஆடு.

"நண்பா, நீ என்ன யோசிக்கிறாய் என்று எனக்குத் தெரியும். என் குகைகக்குள் வந்தால் உன்னைச் சாப்பிட்டு விடுவேன் என்று பயம். ஆனால் இப்போது உனக்கு உதவி செய்யவே எண்ணுகிறேன். சற்று முன்புதான் ஒரு மானைச் சாப்பிட்டேன். பசி வேறு இல்லை. என்னை நம்பு" என்றது நரி.

மழை விடும் என்ற நம்பிக்கை இல்லை. இடி, மின்னல் அதிகமாக இருக்கிறது. நரியின் குகைக்குச் சென்று சிறிது நேரம் நனையாமல் இருக்கலாம். அதற்கு முன் நரியிடமிருந்து தப்பிக்கும் வழியை யோசிக்க வேண்டும்.

"இடி, மின்னல்… சீக்கிரம் ஓடிவா."

ஆடு குகைக்குள் நுழைந்தது.

"நரியே, உமது பிறவிக் குணம் அறிந்தும் வந்திருக்கிறேன் என்றால் அது என் மீது உள்ள பயத்தினால்தான்!"

"என்னது... உன் மீது பயமா? என் மீது அல்லவா பயம் வந்திருக்க வேண்டும்!"

”நீ சொல்வது சரிதான். ஆனால் உன்னை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்."

"என்ன உளறுகிறாய்? என்னைப் பார்த்துப் பரிதாபப்படுகிறாயா? சற்று நேரத்தில் உனது கதையை முடிக்கப் போகிறேன். அதுவரை என்னை நீ கிண்டலடித்துக்கொள்” என்றது நரி.

”என் கதையைக் கேட்டுவிட்டு, என்னைச் சாப்பிடு.”

”சரி, எனக்கும் பொழுது போகவில்லை. சொல் " என்று அலுத்துக்கொண்டது நரி.

"போன வாரம் காட்டில் மேய்ந்துகொண்டிருந்தபோது அறியாமல் விஷச் செடியைத் தின்றுவிட்டேன். நான் விரைவில் இறந்து விடுவேன் என்று மருத்துவர் கூறிவிட்டார். இன்றே என்னைச் சாப்பிட்டு, என் துன்பத்திலிருந்து விடுவிக்கும் உன்னிடம் இதைச் சொல்லாமல் இருக்க மனம் இல்லை. என் மூலம் உனக்கும் இந்த நோய்ப் பரவிவிடும் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் எங்கள் இருப்பிடத்தில் இருக்காமல், காட்டுக்குள் அலைந்து திரிகிறேன்" என்று வருத்தத்தோடு சொன்னது ஆடு.

நரிக்குப் பயம் வந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தது.

“உன்னைச் செல்லமாக மிரட்டவே உண்ணப் போவதாகச் சொன்னேன். அதிக நேரம் நீ இங்கிருந்தால் நோய் என்னையும் தாக்கிவிடலாம். மழை நின்றுவிட்டது. உடனே இங்கிருந்து கிளம்பு. உடல் நிலையைக் கவனித்துக்கொள்” என்று அக்கறையோடு சொன்னது நரி.

உயிர் தப்பி வந்த ஆடு, ஏமாந்த நரியை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x