Published : 14 Mar 2018 11:18 AM
Last Updated : 14 Mar 2018 11:18 AM

கதை: வாக்குத் தவறாத பசு!

பூ

வலூரில் வசித்த பொன்னையனிடம் நிறைய பசுக்கள் இருந்தன. அவற்றைத் தினமும் காட்டுப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார்.

அன்று காட்டில் மாடுகள் மேய்ந்துகொண்டிருந்போது, ஒரு பசு

மட்டும் கூட்டத்தை விட்டு விலகி தனியே சென்றது. நீண்ட நேரம்

புல்லை மேய்ந்ததால் அதுக்குப் பொழுது போனதே தெரியவில்லை. இருள் கவியத் தொடங்கி இருந்தது. தான் வந்த

வழியே பார்த்தது. கூட வந்த பசுக்களைக் காணவில்லை என்றதும் தான் திசை மாறி வந்துவிட்டோமென்பது புரிந்தது.

அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் சற்றுப் பயமும்

உண்டானது.

தன் கன்று பால் அருந்தாமல் பட்டினியில் வாடும்.

வயிறார பால் கொடுக்க வேண்டும். காலையில் கிளம்பும்போதே ஏனோ அடம் பிடித்துச் சரியாகப் பால் அருந்தவில்லை. மாடுகளை மேய்ப்பவரும் அதைக் கண்டுகொள்ளாமல் மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு வந்துவிட்டார்.

சீக்கிரமாக ஊர் திரும்ப வேண்டும் என்று நினைத்தபடியே பசு வேகமாக நடக்க ஆரம்பித்தது.

அப்போது எதிரில் புலி ஒன்று வந்துநின்றது. பசு வெலவெலத்துப் போய் நின்றது.

"பசுவே, உன்னைக் கொன்று என் பசியைத் தீர்த்துக்கொள்ளப் போகிறேன்” என்று சிரித்தது புலி. பசுவுக்குப் பயமும் கன்று பசியோடு தவிக்குமே என்ற கவலையும் உண்டானது.

"புலியே, என் கடைசி ஆசையை நிறைவேற்ற கருணை

காட்டு" என்றது பசு.

"ம்… சீக்கிரம் சொல்."

"காலையில் நான் மேய்ச்சலுக்குக் கிளம்பி வரும்போது என் கன்று சரியாகப் பால் அருந்தவில்லை. இப்போது அதுவும் உன்னைப்போல பசியில் வாடிப் போயிருக்கும். இன்று ஒரு பொழுது என்னை விட்டுவிடு. நாளை காலை வருகிறேன். உன் எண்ணம்போல என்னைத் தின்னலாம்" என்று கெஞ்சிக் கேட்டது பசு.

அதைக் கேட்ட புலி சிரித்தது. "என்னை என்ன முட்டாள் என நினைத்தாயா? விட்டால் தப்பி ஓடிவிடுவாய் என்பது எனக்குத் தெரியாதா? உன் பாச்சா என்னிடம் பலிக்காது" என்றது புலி.

"புலியாரே. என்னை நம்புங்கள். நான் வாக்குத் தவறாத இனம்.

இது என் கன்றின் மீது சத்தியம்."

பசுவின் கெஞ்சலில் புலி மனம் இரங்கியது.

"கன்றின் மீது சத்தியம் செய்த உன்னை நம்பாமல் இருக்க முடியவில்லை. நாளை இதே இடத்துக்கு வந்துவிடு" என எச்சரிக்கை செய்தது.

நன்றி சொல்லி விட்டுப் பசு வேகமாக நடந்தது.

மறுநாள் பசு காட்டுக்கு வந்தது. கூடவே கன்றையும் அழைத்துவந்தது.

"புலியாரே, இதோ நானும் என் குழந்தையும் வந்துவிட்டோம்.

முதலில் என்னைக் கொன்று உன் பசியைத் தீர்த்துக்கொள்.

பிறகு என் கன்றைச் சாப்பிடு" என்று சொல்லும்போதே

பசுவின் கண்ணிலிருந்து நீர் வழிந்தது.

"இது என்ன கொடுமை? நான் உன்னைத்தான் வரச் சொன்னேன். கன்றை ஏன் அழைத்துவந்தாய்?"

"நீ என்னைக் கொன்ற பின் என் கன்றுக்கு யார் பாலூட்டுவார்கள்? அது பசியும் பட்டினி்யுமாகக் கிடந்து அவஸ்தைப்படுவதை என் மனம் தாங்குமா?”

புலி யோசிக்க ஆரம்பித்தது. பசு சொன்ன சொல்லைக் காப்பாற்றத்

தன்னையே தியாகம் செய்ய முன்வந்ததில் புலிக்குச் சங்கடமாகிவிட்டது.

"பசுவே, சொன்ன வாக்கைக் காப்பாற்ற வந்த உன் நேர்மையைப் பாராட்டுகிறேன். நீயும் கன்றும் செல்லுங்கள்" என்ற புலி பசியோடு நடக்க ஆரம்பித்தது.

”புலியே, உனக்கு ரொம்ப நன்றி. இந்த நாளை என்றும் மறக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, மகிழ்ச்சியோடு நடக்க ஆரம்பித்தது பசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x