Last Updated : 07 Mar, 2018 11:22 AM

 

Published : 07 Mar 2018 11:22 AM
Last Updated : 07 Mar 2018 11:22 AM

கதை: செயலே சிறந்தது!

 

ச்சைமலைக் காட்டில் விலங்குகளும் பறவைகளும் ஒற்றுமையாக வாழ்ந்துவந்தன. நேர்மையும் நீதியும் கொண்ட சிங்கம் ஒன்று ஆட்சி செய்துவந்தது.

அன்று முக்கியமான கூட்டம். வானிலை ஆராய்ச்சியாளரான தவளை, "நண்பர்களே! இன்னும் சில நாட்களில் நம் காட்டில் கடுமையான மழை பெய்யப் போகிறது. நான்கைந்து நாட்கள்வரை நீடிக்கலாம். காடு முழுவதும் வெள்ளம் சூழும் ஆபத்து இருக்கிறது" என்றது.

"கரடியே, வெள்ளத்திலிருந்து நம் நண்பர்களைக் காப்பாற்ற என்ன செய்யலாம்?" என்றது சிங்கம்.

"எனக்கு அவகாசம் கொடுங்கள்" என்று கரடி சொல்லும்போது, கழுகு வந்து இறங்கியது.

"நானும் எங்கள் உறவினரும் இருக்கும்போது என்ன கவலை? நாங்கள் கடுமையான மழையிலிருந்து தப்பிக்க என்ன செய்கிறோம் தெரியுமா?" என்று கேட்டது கழுகு.

"என்ன செய்கிறீர்கள்?"

"அரசே! மழை பெய்யும்போது விலங்குகளும் பறவைகளும் மழையிலிருந்து தப்பிக்க மறைவான இடத்தில் ஒளிந்துகொள்கின்றன. ஆனால் கழுகுகள், மழை மேகங்களுக்கு மேல பறந்து சென்றுவிடுகிறோம். அதனால் மழை நீர் எங்களை நனைப்பதில்லை. மழை நிற்கும்வரை நாங்கள் அங்கேயே பறந்துகொண்டிருப்போம்" என்றது கழுகு.

"ஆஹா! அற்புதம்!" என்று கழுகைப் பாராட்டியது சிங்கம்.

"நன்றி அரசே! நம் தவளையார் இன்னும் சில தினங்களில் கடுமையான மழை பெய்ய இருப்பதாகச் சொல்கிறார் அல்லவா? மழை பெய்யும் முன்னரே நாங்கள் விலங்குகளையும் பறவையைகளையும் மேகங்களுக்கும் மேலே தூக்கிச் சென்றுவிடுகிறோம்."

கழுகின் டாம்பீகப் பேச்சை சிங்கமும் நம்பிவிட்டது.

"அப்படியே செய்யலாம். காட்டிலுள்ள விலங்குகளையும் பறவைகளையும் நீங்கள் காப்பாற்றினால் நீங்கள் எதிர்பார்க்காத பெரிய பரிசு காத்திருக்கிறது" என்றது சிங்கம். அதைக் கேட்டு பறவைகளும் விலங்குகளும் கைதட்டின.

சில தினங்களில் வானில் கருமேகங்கள் திரண்டுவந்தன.

சிங்கம் கழுகையும் அதன் உறவினர்களையும் அழைத்து வரும்படி ஆணையிட்டது. சிறிது நேரத்தில் எல்லாம் வந்து சேர்ந்தன.

"கழுகே, மழை மேகங்கள் திரண்டு வருகின்றன. நீ சொன்னதுபோல காட்டிலுள்ள விலங்குகளையும் பறவைகளையும் மேகங்களுக்கு மேலே கொண்டு சென்றுவிடுங்கள்" என்றது சிங்கம்.

கழுகும் அதன் உறவினர்களும் விலங்குகளைத் தங்கள் கால் விரல்களால் பிடித்துத் தூக்க முயற்சி செய்தன. விலங்குகளைக் கழுகுகளால் தூக்கவே முடியவில்லை.

லேசான மழைத் தூறல் ஆரம்பித்தது. கழுகின் பேச்சை இப்படி நம்பிவிட்டோமே என்று சிங்கம் கலங்கியது.

அப்போது வவ்வால் வந்துசேர்ந்தது. "அரசே! இன்னும் கழுகுகளை நம்பிக்கொண்டிருந்தீர்கள் என்றால் நம் நண்பர்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக்கொள்வார்கள். நாங்கள் வசிக்கும் குகைகளைச் சுத்தம் செய்து தயாராக வைத்திருக்கிறோம். அனைவரும் அங்கே தங்கிக்கொள்ளலாம். உணவுப் பொருட்களையும் சேகரித்து வைத்திருக்கிறோம்!" என்றது வவ்வால்.

"அரசே! வவ்வால் சொல்வது சரியான வழி. இப்போது நாம் அனைவரும் குகைக்குள் சென்று தங்கலாம். உண்மையில் மேகங்களுக்கு மேலே விலங்குகளைத் தூக்கிச் செல்வதெல்லாம் கழுகால் இயலாது" என்றது கரடி.

குகைக்குச் செல்ல உத்தரவிட்டது சிங்கம்.

காட்டில் மூன்று தினங்கள் கடுமையான மழை பொழிந்தது. வெள்ளம் சூழ்ந்தது. ஆனாலும் விலங்குகளும் பறவைகளும் எந்தவிதப் பாதிப்பும் இன்றி, வவ்வாலின் குகைக்குள் தங்கியிருந்தன.

இரு தினங்களில் வெள்ளம் வடிந்தது. எல்லாம் வெளியே வந்தன. அங்கே வந்த கழுகு, “அரசே! மழைக்குப் பாதுகாப்பாக இருந்தீர்களா?" என்று கேட்டது. கழுகின் பேச்சு சிங்கத்துக்குக் கோபத்தை வரவழைத்தது.

"வவ்வாலின் குகைக்குள் நாங்கள் பாதுகாப்பாகவே இருந்தோம். வீண் பேச்சுகளைவிடச் சிறிய செயல் பெருமைக்குரியது. இனி என் கண்களில் படாதவாறு வாழுங்கள்" என்று ஆணையிட்டது சிங்கம்.

சிங்கத்தின் ஆணைக்குப் பயந்த கழுகும் அதன் உறவினர்களும் அன்றிலிருந்து காட்டிலிருந்து வெளியேறி, மலைகளில் வசிக்கத் தொடங்கின. தங்கள் டாம்பீகப் பேச்சையும் நிறுத்திக் கொண்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x