Published : 08 Nov 2017 10:34 AM
Last Updated : 08 Nov 2017 10:34 AM

கதை: புலி மேகமும் மான் மேகமும்

 

மா

லை நேரம். சூரியன் மேற்கை நோக்கிச் சரிந்துகொண்டிருந்தது. நீல வானில் மேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதந்துகொண்டிருந்தன. மேற்கே மிதந்து கொண்டிருந்த மேகம் ஒன்று, சூரியக்கதிர் பட்டு பொன் நிறத்தில் காட்சியளித்தது. தங்கம்போல் ஜொலிக்கும் தன் உடலைப் பார்த்து அதற்குப் பெருமை தாங்கவில்லை!

சற்றுத் தூரத்தில் காற்றில் மிதந்துகொண்டிருந்த வெண்மேகத்தைப் பார்த்து, “என்னைப் பார்த்தியா? தங்கம் மாதிரி தகதகன்னு மின்னிக்கிட்டு இருக்கேன்!” என்றது.

சற்று நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்த வெண்மேகத்துக்குப் பொறாமையாக இருந்தது. “இதெல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான். சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கும்போது உன்னோட சாயம் வெளுத்துடும்!” என்றது.

அது கூறியதுபோல் சில நிமிடங்களில் சூரியன் இன்னும் சற்றுக் கீழே இறங்கியவுடன் பொன்நிற மேகத்தின் சாயம் வெளுத்தது. தன்னுடைய இயல்பு நிறமான வெண்மைக்கு மாறியது. அதைப் பார்த்து மீண்டும் கேலியாகச் சிரித்த வெண்மேகம், “சொன்னேன்ல… இப்ப நீ எந்த உருவமுமில்லாம நெளிஞ்சு போன தகரடப்பா மாதிரி தெரியற. என்னைப் பார்த்தியா… என் உருவத்தைப் பார்த்தியா… புலி பாய்ஞ்சு ஓடுற மாதிரி இருக்கு!” என்று கூறிவிட்டு, வீரத்துடன் புலி பாய்வதுபோல் பாவனை செய்தது.

சற்றுத் தள்ளி மிதந்துகொண்டிருந்த இன்னொரு மேகம் தொண்டையைச் செருமியது. “உன்னைப் பார்த்தால் எல்லோரும் பயப்படுவாங்க. ஆனா, என்னைப் பாரு! எவ்வளவு அழகா மான்போல் இருக்கேன்!” என்று தன்னைத் தானே பெருமையுடன் ஒருமுறை பார்த்துக்கொண்டு, மான் துள்ளுவதுபோல் பாவனை செய்தது.

திரும்பிப் பார்த்த புலி மேகம், “நீ மான்போல இருக்கலாம். ஆனால் நான் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து உன்னைக் கடிச்சுத் தின்னுடுவேன்” என்றது.

“அதுக்குள்ள நான் துள்ளி ஓடிடுவேன். என்னைப் பிடிக்க முடியாதே!” என்று சிரித்தது மான் மேகம்.

“எங்கே ஓடிப் போய் ஒளிவே? எப்படியிருந்தாலும் இங்கதானே நீ சுத்தணும்?” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பெரிய கருத்த மேகங்கள் அருகில்வந்தன.

“அங்கே பாரு! கருகருன்னு மேகங்கள் வந்துகிட்டிருக்குதுங்க” என்று சிரித்தது புலி மேகம்.

“கரு மேகங்களே நில்லுங்க. எங்கே இவ்வளவு அவசரமா போறீங்க?” என்று கேட்டது மான் மேகம்.

“எங்களுக்குப் பேச நேரமில்லை. நாங்க காற்றுக்காகக் காத்திருக்கோம். அது எந்தப் பக்கம் எங்களைத் தள்ளிட்டுப் போகுதோ, அங்கே போய் எங்களோட கடமையைச் செய்யணும்” என்றன கருமேகங்கள்.

“உங்களோட கடமையா… அது என்ன?”

“பூமியில் உள்ள சகல ஜீவராசிகளும் வாழறதுக்கு மழையைக் கொடுக்கறதுதான் எங்களோட கடமை! உங்ககிட்ட வெட்டிப் பேச்சு பேச நேரமில்லை. அதோ காற்று வந்துடுச்சு… நாங்க புறப்படுறோம்” என்று கூறிவிட்டு, அந்த இடத்தை விட்டு வேகமாகச் சென்றன கருமேகங்கள்.

அதே நேரத்தில் பலமாக வீசிய காற்றால் புலி மேகமும் மான் மேகமும் தங்கள் உருவங்களைத் தொலைத்துக்கொண்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x