Last Updated : 07 Dec, 2016 11:50 AM

 

Published : 07 Dec 2016 11:50 AM
Last Updated : 07 Dec 2016 11:50 AM

வகுப்பறைக்கு வெளியே: பூமியின் இயற்கை கோபுரங்கள்

உலக மலைகள் நாள் - டிசம்பர் 11

இந்தியாவில் எட்டு முக்கிய மலைத்தொடர்கள் உள்ளன. இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியில் பிறை வடிவில், மூன்று மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. அவை இமயமலை, ஹிந்துகுஷ், பட்காய் மலைத்தொடர்கள். வடதுருவத்திலிருந்து வீசும் குளிர்க் காற்றை நாட்டுக்குள் விடாமல் தடுக்கும் இயற்கைத் தடுப்பு அரண் இது. மற்றொருபுறம் பருவமழைக் காற்றைத் தடுத்து மழைப்பொழிவை ஏற்படுத்துவதாகவும் இந்த மலைத்தொடர்கள் திகழ்கின்றன. இதன்மூலம் நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலையில் முக்கியத் தாக்கங்களை இவை ஏற்படுத்துகின்றன.

இமய மலைத் தொடர் ஓர் இயற்கை அற்புதம். இது ஆசியாவையும் இந்தியாவையும் பிரிக்கிறது. இந்தியாவின் வடக்கிலிருந்து வடகிழக்குவரை ஓர் எல்லைபோல அமைந்திருக்கிறது. இமயமலைத் தொடரே உலகின் உயரமான மலைத்தொடர். உலகில் உள்ள உயரமான 10 மலைச்சிகரங்களில் ஒன்பது சிகரங்கள் இமயமலைத் தொடரிலும், ஒரு உயர்ந்த சிகரம் அதற்கு அருகேயுள்ள காரகோரம் மலைத்தொடரிலும் உள்ளன. இத்தனைக்கும் இமய மலைத்தொடர் உலகின் மிகவும் வயது குறைந்த மலைத்தொடர்.

இமயம் என்பதற்கு சமஸ்கிருதத்தில் ‘பனியின் இருப்பிடம்' என்று அர்த்தம். இந்த மலைத்தொடரில் உள்ள பல மலைச்சிகரங்கள் ஆண்டு முழுவதும் பனியால் போர்த்தப்பட்டிருக்கும். கங்கை, யமுனை, சட்லஜ், சீனாப், ராவி ஆகிய ஐந்து முக்கிய நதிகளும் பிரம்மாண்ட பிரம்மபுத்திரா நதியும் இமய மலைத் தொடர் பனி உருகுவதால் ஆறுகளாக உருவெடுப்பவை.

இமய மலைத் தொடர் 2,500 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. வடக்கே ஜம்மு-காஷ்மீரில் தொடங்கி கிழக்கே அருணாசலப் பிரதேசம்வரை அது நீண்டிருக்கிறது. ஐந்து இந்திய மாநிலங்களில் இமய மலைத் தொடர் விரவியிருக்கிறது. இமய மலைத் தொடரில் பெரும் இமய மலைகள் (இதில் பெரும் பகுதி நேபாளத்தில் உள்ளது), நடுத்தர இமயமலைகள், துணை இமயமலைகள் என மூன்று வரிசைகள் உள்ளன.

மேற்கு மலைத் தொடருக்கு சஹயாத்ரி மலைத்தொடர் என்றொரு பெயரும் உண்டு. இது தக்கான பீடபூமியின் மேற்கு விளிம்பில் அமைந்துள்ளது. தபதி நதிக்குத் தெற்கில் இருந்து மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழகத்தின் வழியாகத் தெற்கில், குமரி மாவட்டம்வரை இந்த மலைத்தொடர் நீண்டிருக்கிறது. இதன் நீளம் 1,600 கி.மீ. கேரளத்தில் உள்ள ஆனைமுடி இந்த மலைத்தொடரின் உயரமான சிகரம், உயரம் 8,842 அடி.

# மேற்கு மலைத்தொடரில்தான் உதகமண்டலம், கொடைக்கானல், இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான ஜோக் அருவி ஆகிய முக்கியச் சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன. தென்னிந்தியாவில் பெரும்பாலான நதிகள் மேற்கு மலைத்தொடரிலேயே உருவாகின்றன.

# மேற்கு மலைத்தொடர் உலகின் மிக முக்கியமான உயிரினப் பன்மை (Bio diversity) செழித்திருக்கும் மையம் என்பதால், இதை ‘நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்' என்ற பெயரில் சர்வதேச அளவில் முக்கியப் பகுதியாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

# மேற்கு மலைத்தொடரைப் போல தக்கான பீடபூமியின் கிழக்கு விளிம்பில் உள்ளது, கிழக்கு மலைத்தொடர். இது மேற்கு மலைத்தொடரைவிடவும் பழமையானது. கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவிரி ஆகிய முக்கிய நதிகளால் துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்த மலைத்தொடர் தொடர்ச்சியாக இல்லை. வங்கத்தில் தொடங்கும் இது தமிழகம்வரை தொடர்ச்சியற்று விரவிக் கிடக்கிறது. விசாகப்பட்டினம், புவனேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இந்த மலைத்தொடரிலேயே அமைந்துள்ளன.

மத்திய இந்தியாவில் உள்ள விந்திய மலைத்தொடர், இந்தியாவை வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்கிறது. இதைப் போலவே, இந்திய வரைபடத்தில் அதற்கு மேலே உள்ள சாத்பூரா மலைத்தொடரும் தக்கான பீடபூமி, இந்தோ-கங்கை சமவெளிக்கு இடையே பெரிய தடுப்புபோல அமைந்துள்ளது.

> இந்தியாவின் கிழக்கு எல்லையில் மியான் மரை ஒட்டிய பகுதியில் உள்ளது பட்காய் மலைத்தொடர். இந்த மலைத்தொடரில் காற்றுவீசும் பகுதியில் அமைந்துள்ள சிரப்பூஞ்சி, உலகிலேயே ஒரு மாதத்தில் மிக அதிக மழை பெய்யும் பகுதியாக உள்ளது.

> காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகரம், ஆர்க்டிக் வடதுருவ பனிச்சிகரங்களுக்கு அடுத்தபடியாக மிக உயரமான பனிச்சிகரம்.

இந்தியாவின் உயரமான மலைச்சிகரம் கஞ்சன்ஜங்கா. உலகின் மூன்றாவது உயரமான மலை இது. 28,169 அடி உயரத்துடன் சிக்கிம் மாநிலத்தில் இது அமைந்துள்ளது.



எவரெஸ்ட்டே உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரம் என்றும், அது இந்தியாவில் இருக்கிறதென்றும் தவறாக நம்பிக் கொண்டிருக்கிறோம். இரண்டுமே தவறு. 'கடல் மட்டத்துக்கு மேலுள்ள உயரமான மலை' என்று கணக்கெடுத்தால் மட்டுமே, உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ட் என்று சொல்ல முடியும். அடித்தளத்தில் இருந்து கணக்கிட்டால் ஹவாயில் கடலுக்கு அடியில் உள்ள மௌனா கியா மலையே உலகில் உயரமானது. அது மட்டுமல்லாமல் எவரெஸ்ட் இந்தியாவில் இல்லை, நேபாளத்தில் சீனாவின் எல்லை அருகே இருக்கிறது. இதன் உயரம் 29,929 அடி.



உலகின் இரண்டாவது உயர்ந்த மலைச்சிகரமான கே2 (காட்வின் ஆஸ்டின்) ஜம்மு காஷ்மீரின் பிரச்சினைக்குரிய பகுதியில் காரகோரம் மலைத்தொடரில் உள்ளது. இந்த மலைத்தொடரில் 60-க்கும் மேற்பட்ட உயரமான சிகரங்கள் உள்ளபோதும், கே2 எனப்படும் சிகரம் எவரெஸ்ட்டைவிட 778 அடி குறைவாக 28,251 அடி உயரத்தைக் கொண்டிருக்கிறது.



இந்தியாவின் மிகவும் பழமையான மலைத்தொடர் ஆரவல்லி. இது ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கிலிருந்து தென்மேற்காகப் பரவியுள்ளது. இந்த மலைத்தொடரே ராஜஸ்தானின் முக்கிய நகரங்கள் பாலைவனமாகாமல் பாதுகாக்கிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x