Last Updated : 18 Jan, 2017 09:56 AM

 

Published : 18 Jan 2017 09:56 AM
Last Updated : 18 Jan 2017 09:56 AM

தினுசு தினுசா விளையாட்டு: மெல்ல வந்து கிள்ளிப் போ..!

சில விளையாட்டுகளில் கூட்டத்தோடு ஒருவராக எப்படி வேண்டுமானாலும் இருந்து விளையாடலாம். சில விளையாட்டுகளில் உடன் விளையாடும் சக குழந்தைகளைக் கவனித்து விளையாட வேண்டியது அவசியம். அப்படியாக விளையாடினால் மட்டுமே அந்த விளையாட்டில் வெற்றியைப் பெற முடியும்.

இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டு, அப்படியான ஒரு விளையாட்டுதான். அந்த விளையாட்டின் பெயர், ‘மெல்ல வந்து கிள்ளிப் போ’.

இந்த விளையாட்டை அதிகபட்சம் இருபது பேர் வரை சேர்ந்து விளையாடலாம். முதலில் விளையாடுபவர்கள் சம எண்ணிக்கையிலான இரு குழுக்களாகப் பிரிந்துகொள்ள வேண்டும்.

குழுக்களைப் பிரிக்க ‘சாட் பூட் திரி’, ‘உத்தி பிரித்தல்’ அல்லது ‘பூவா தலையா’ ஆகிய முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். அவ்வாறு பிரிந்த இரு குழுக்களுக்கும் குழுத் தலைவர் ஒருவரை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இரு குழுக்களாகப் பிரிந்த பிறகு, இரு குழுக்களும் இணைகோடுகளாக நேரெதிராக உட்கார்ந்துகொள்ளுங்கள். இரு குழுக்களுக்கும் இடையே ஏழெட்டு அடிகளாவது இடைவெளி இருக்க வேண்டும்.

இரு குழுக்களின் தலைவர்களும் தங்களது குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மல்லிகை, ரோஜா, செம்பருத்தி என ஏதாவதொரு பூவின் பெயரை வைத்துவிடுங்கள். யாருக்கு எந்தப் பூவின் பெயர் என்பது அந்தந்தக் குழு உறுப்பினரைத் தவிர எதிர்க் குழுவினருக்குத் தெரியக் கூடாது.

இப்போது விளையாட்டைத் தொடங்குவோமா?

முதல் குழுத் தலைவர் இரண்டாம் குழுவின் பின்னே போய் நிற்க வேண்டும்.

இரண்டாம் குழுவில் உட்கார்ந்திருப்பவர்களில் யாராவது ஒருவரின் கண்களை, முதல் குழுத் தலைவர் மூடிக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் குழுவில் இருக்கும் மற்ற அனைவரும் கண்களை இறுக மூடியபடி, தலையைக் கீழே குனிந்துகொள்ளுங்கள்.

முதல் குழுத் தலைவர்: ரோஜாப் பூவே… ரோஜாப் பூவே… மெல்ல வந்து கிள்ளிப் போ என்று கூப்பிடுவார்.

உடனே, முதல் குழுவில் யாருக்கு ரோஜாப் பூ என்று பெயர் வைத்தாரோ, அந்தக் குழந்தை மெல்ல எழுந்து வந்து, குழுத் தலைவர் கண்களை மூடியிருக்கும் குழந்தையின் தொடையை மெல்ல (வலிக்காமல்) கிள்ளிவிட்டுப் போய் உட்கார்ந்து கொள்ளும்.

முதல் குழுத் தலைவர் கண்களை மூடியிருந்த கைகளை எடுத்துவிட்டு, ‘கையை ஆட்டு,காலை ஆட்டு’ என்று சொன்னதும், முதல் குழுவிலுள்ள எல்லாக் குழந்தைகளும் கையையும் கால்களையும் ஆட்டுவார்கள்.

இப்போது, குழுத் தலைவர் கண்களை மூடியிருந்த குழந்தை, எதிர்க் குழுவிலிருந்து எந்தக் குழந்தை வந்து தன்னைக் கிள்ளி விட்டுப்போனது என்பதைச் சரியாக அடையாளம் காட்ட வேண்டும்.

எதிர் வரிசையில் இருக்கும் குழந்தைகள் உட்கார்ந்திருக்கும் விதம், அதன் முகத்தில் தெரியும் மெலிதான தயக்கம் போன்றவற்றை கூர்ந்து கவனித்து, கிள்ளி விட்டுப்போன குழந்தையை அடையாளம் காட்ட வேண்டும்.

தன்னைக் கிள்ளிய குழந்தையைச் சரியாகக் காட்டிவிட்டால், இப்போது இரண்டாம் குழு விளையாடலாம். தவறாகக் காட்டினால், மீண்டும் முதல் குழுவே விளையாட்டைத் தொடரும்.

மீண்டும் மீண்டும் விளையாடும் ஆவலைத் தூண்டும் இந்த விளையாட்டை நாமும் ஒருமுறை விளையாடித்தான் பார்ப்போமே!

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x