Last Updated : 21 Feb, 2017 04:47 PM

 

Published : 21 Feb 2017 04:47 PM
Last Updated : 21 Feb 2017 04:47 PM

சித்திரக்கதை: ஆகாயத்தில் மாளிகை

அதனபுரி என்ற ஒரு ஊரு இருந்தது. அந்த ஊரில் ஒரு அடாவடி ராஜா ஆட்சி செய்தார். பெயரைப் போலவே அவர் குணமும் அப்படித்தான். ஊர் மக்களை ஏதேனும் ஒரு வகையில் கொடுமைப்படுத்திக்கொண்டே இருப்பார்.

செய்ய முடியாத விஷயங்களையெல்லாம் செய்யச் சொல்லி மக்களைத் துன்புறுத்துவார். அதுதான் அவரது பொழுதுபோக்கு.

ஒரு நாள் ஊர் மக்களை எல்லாம் அரண்மனைக்கு வரும்படி அந்த ராஜா அழைத்தார். கூடி வந்த மக்களிடம், “அன்பார்ந்த ஊர் ஜனங்களே. உங்கள் திறமையைச் சோதிக்க உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப்போகிறேன். போட்டிக்கு நீங்கள் தயாரா?’ என்று கேட்டார். போட்டி வைத்து பரிசு தரப்போகிறார் என்ற எண்ணத்தில் ஊர் மக்கள், “ராஜா வைக்கும் எந்தப் போட்டிக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம், சொல்லுங்கள்” என்று சொன்னார்கள்.

உடனே அந்த ராஜா, “எனக்கு இங்கே வாழ்ந்து போரடித்துவிட்டது. ஆகாயத்தில் வாழ ஆசையாக உள்ளது. அதனால், நீங்கள் ஆகாயத்தில் எனக்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். 15 நாட்கள் அவகாசம் தருகிறேன். நன்றாக யோசித்து 16-வது நாள் அந்த மாளிகையை அமைக்க நல்ல திட்டத்துடன் இங்கு வந்து கூட வேண்டும். அப்படி திட்டத்துடன் வந்தால்தான் நீங்கள் இந்த ஊரில் வாழ முடியும். இல்லாவிட்டால் இங்கிருந்து பக்கத்தில் உள்ள தீவுக்கு அனுப்பிவிடுவேன்” என்று பயமுறுத்தினார்.

இதைக் கேட்டதும் ஊர் மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. ‘ஆகாயத்தில் எப்படி மாளிகை கட்ட முடியும்’என்ற கேள்வியுடனும் பயத்துடனும் வீடு திரும்பினார்கள். ஒவ்வொருவரும் இப்படி ஒரு மாளிகையை எப்படிக் கட்டுவது என்று யோசனையில் ஆழ்ந்தார்கள். ஆனால், யாருக்கும் எந்த யோசனையும் வரவில்லை. அன்று முதல் அந்த ஊர் மக்களை பயம் சூழ்ந்துகொண்டது.

16-வது நாள் வந்ததும் ஊர் மக்களுக்கு நடுக்கம் கூடியது. ‘நாம் அனைவரும் இந்த ஊரை விட்டுப் போக வேண்டியதுதான்’என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். வேறு வழியில்லாமல் அழுதபடி ராஜாவின் அரண்மனை வாசலில் கூடினார்கள்.

அடாவடி ராஜா மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு அங்கு வந்தார். அவரைச் சுற்றி நீளமான வாளுடனும் அம்புடனும் படை வீரர்கள் சூழ்ந்துநின்றார்கள்.

“நான் சொன்னபடி ஆகாய மாளிகைக்குத் திட்டம் தயாரித்துவிட்டீர்களா’ என்று மக்களைப் பார்த்து ஜம்பமாகக் கேட்டார்.

மக்கள் அனைவரும் பதில் பேச முடியாமல் தலைகுனிந்து நின்றார்கள். அவர்களைப் பயமும் தொற்றிக்கொண்டது. ராஜா என்ன சொல்லப் போகிறாரோ என பதற்றத்தில் இருந்தனர்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு இளைஞன் முன்னால் வந்து நின்றான்.

“திட்டம் தயார், அரசே” என்று கணீரென்ற குரலில் சொன்னான்.

அதைக் கேட்ட மக்கள் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் தலை நிமிர்ந்தார்கள். அந்த இளைஞனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அடாவடி ராஜாவும் இதைக் கேட்டுக் கொஞ்சம் அதிர்ந்துபோனார்.

அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

“சரி, கட்டிட வேலையை எப்போது ஆரம்பிப்பாய். அதை எனக்குச் சொல்” என்று அதிகாரத் தோரணையில் கேட்டார்.

“அரசே! நீங்கள் வாழப் போகும் மாளிகை மங்களகரமாக அமைய வேண்டும். மாளிகை கட்டுவதற்கு முன் பூமி பூஜையோ அல்லது அடிக்கல் நாட்டுவதோ ரொம்ப முக்கியம். உங்களுக்காகக் கட்டப்பட உள்ள மாளிகைக்கு ராஜாவான நீங்கள்தான் அடிக்கல் எடுத்துவைக்க வேண்டும். அப்படி நீங்கள் அடிக்கல் வைத்த உடனேயே நான் மாளிகையின் கட்டிட வேலையை ஆரம்பித்து விடுவேன். ஆகாயத்தில் ராஜா எப்போது கல் வைப்பீர்கள் என்பதை தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.

இளைஞனின் இந்தப் பதிலைக் கேட்ட மக்களின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

அடாவடி ராஜா திகைப்பில் தடுமாறினார்.

“ஜாலியாக நான் போட்ட திட்டம் எனக்கே வினையாக வந்துவிட்டதே’ என்று கையைப் பிசைந்தார். வேறு வழியில்லாமல் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுத் தலைகுனிந்தார். அன்று முதல் இனி மக்களை வதைக்க மாட்டேன் என்று உறுதிப்பூண்டார்.

(ஆப்பிரிக்கா கிராமியக் கதையைத் தழுவியது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x