Published : 18 Jan 2017 10:03 AM
Last Updated : 18 Jan 2017 10:03 AM

காரணம் ஆயிரம்: எப்படி இருந்த கண்டம் இப்படி மாறிடுச்சு...

இயற்கைக் காரணிகளால் மலை சிதையலாம். அது சமவெளியாகிப் போகலாம். ஆனால், நீர் ததும்பி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி மலையாக முடியுமா? அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதானே யோசிக்கிறீர்கள். ஒரு நதி மலையாகியிருக்கிறது. அதிலும் நமக்குத் தெரிந்த மலை. நமது தேசத்தின் மலைதான். அது இமயமலை!

உலகத்தின் மிக உயர்ந்த சிகரமான ‘எவரெஸ்ட்’ சிகரத்தைத் தாங்கி நிற்கிற இமயமலைதான் பெரும் நதியாய் ஒரு காலத்தில் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. உண்மையிலேயே பெரு நதி அது.

ஆதி பூமி

தொடக்கத்தில் இந்த உலகம் ஒரே கண்டமாகத்தான் இருந்தது. இடைவெளி இல்லாத ஒரே நிலப்பரப்பு. இந்தப் பெரிய நிலப்பரப்புக்கு ‘பான்ஜியா’ (Pangea) என்று பெயர். இந்த நிலப்பரப்பைச் சுற்றிலும் ஒரே நீர்ப்பரப்பு. அதற்கு ‘பாந்தலாசா’ என்று பெயர். பான்ஜியா என்றால் ‘எல்லா நிலமும்’என்று அர்த்தம். ‘பாந்தலாசா’என்றால் ‘எல்லா நீரும்’ என்று அர்த்தம்.

பான்ஜியா, பாந்தலாசா மீது மிதந்துகொண்டிருந்தது. காலப்போக்கில் பான்ஜியாவுக்கு நடுவே ‘டெத்திஸ்’ என்று ஒரு நதி தோன்றி பான்ஜியாவை இரண்டாகப் பிரித்தது (சிலர் டெத்தீஸ் நதியை, டெத்தீஸ் கடல் என்றும் அழைக்கிறார்கள்). ‘பான்ஜியா’ இரண்டு பெரும் துண்டுகளாக (இரண்டு பெரிய கண்டங்களாக) உடைந்தது.

பூமியின் உள் அமைப்பைப் பற்றியும், பூமியின் உள்ளே நடக்கும் இயக்கங்கள் பற்றியும் ஒரு டீஸ்பூன் அளவுக்குத் தெரிந்துகொண்டால் போதும். நதி எப்படி மலையானது என்ற கேள்விக்கான காரணம் தெரிந்துவிடும்.

பூமிக்கு மேல் எப்போதாவது போர் நடக்கும். பூமிக்கு உள்ளே எப்போதுமே போர்க்களம்தான். பூமி அதன் உட்புறத்தில் மூன்று அடுக்குகளாகக் காணப்படுகிறது. நாம் வாழும் வெளிப்புற அடுக்கு ‘பூமி மேல் ஓடு’. இங்கு பெரும்பாலும் பிரச்சினைகள் எதுவும் (புவியியல் ரீதியாக) ஏற்படுவதில்லை.

எமன் மண்டலம்

இரண்டாவது அடுக்கு ‘எமன் இடை மண்டலம்’. வெள்ளி, அலுமினியம், ஈயம், தங்கம் என்று 85 சதவீத கனிமப் பொருட்கள் இந்த இரண்டாவது அடுக்கில்தான் காணப்படுகின்றன. எனவே, இந்த இரண்டாவது அடுக்கு ரொம்பவே எடை.

மூன்றாவது அடுக்கு கருவம் (Cove) என்றுதான் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இது ரொம்பவே ஆபத்தானது. நிக்கல், இரும்பு ஆகிய இரண்டு உலோகங்கள்தான் கருவத்தில் அதிகம் காணப்படுகின்றன. கருவத்தின் வெப்பநிலையை நம்மால் கற்பனைகூட பண்ணி பார்க்க முடியாது. 5,000 டிகிரி செல்சியஸ். இந்த வெப்பநிலைதான் பிரச்சினை. இந்த அடுக்கை நோக்கி எந்தப் பொருளுமே நெருங்க முடியாது. நெருங்கிய எந்தப் பொருளும் முழுமையாக இருக்க முடியாது.

உருகிய குழம்பு நிலையில் காணப்படும் இந்தக் கருவத்தின் அதிக வெப்பநிலை காரணமாக, கருவத்துக்குள் இருக்கும் பெரும் பாறைகள் பிளவுபடுகின்றன. அப்போது அந்தப் பகுதி முழுவதும் அமிழ்ந்துபோகிறது அல்லது உயர்ந்துவிடுகிறது அல்லது இடம் மாறிவிடுகிறது.

அப்போது நிலம் அசைவுக்கு உள்ளாகிறது. இந்நிகழ்ச்சியின் விளைவாக ஆற்றல் வெளிப்படுகிறது. இது அலைகளாகப் பூமியில் பரவுகிறது. இந்த அலைகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிலநடுக்கத்தின்போது பூமியில் பெரும் பிளவுகள் உண்டாகின்றன. நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.

இது போன்ற அதிர்வுகளும், இயக்கங்களும் பூமிக்குள் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், பூமியில் கண்டத்திட்டுகள் ஒரு திசை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இன்றைக்கும் இந்த நகர்வுகள் தொடர்கின்றன. எஸ்கிலேட்டர் (மின் ஏணி) மாதிரி இந்தப் பூமியின் தட்டுகள் நகர்கின்றன. எஸ்கிலேட்டர் படியில் நின்று பயணம் செய்கிற பயணிகள் மாதிரி நாம் மேலே மேலே சென்றுகொண்டிருக்கிறோம்.

எஸ்கிலேட்டர் விரைவாக நகர்வதால் அதன் இயக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது. பூமியின் இயக்கமும், நகர்வும் மெதுவாக இருப்பதால் நாம் அதனை உணர முடிவதில்லை. இந்திய தட்டு இன்றும் வடக்கு நோக்கி வருடத்துக்கு 15 செ.மீ. தூரம் நகர்கிறது. 15 செ.மீ. தூரம் என்பது குறைவான தூரம் என்பதால் அதை நாம் கண்டு கொள்வதில்லை. (இந்த நகர்வால்தான் இமயமலை பகுதியிலும், வட இந்தியப்பகுதியிலும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது).

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பான்ஜிலா உடைந்து அங்காரா, கோண்ட்வானா என்று மிதந்துகொண்டிருந்த இரண்டு தட்டுகளும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் அவை இரண்டும் ஒன்றோடொன்று வேகமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் (மோதிக்கொண்ட பகுதிகள்) வேகமாக உயர்ந்துவிட்டன. இது மாதிரியான விபத்துகளை ‘Collision’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் போது, நேரடியாக மோதிக்கொண்ட ரயில்களின் பெட்டிகள் அந்தரத்தில் உயர்ந்து (தொங்கிகொண்டு) நிற்கும் இல்லையா? அப்படித்தான் அங்காரா, கோண்ட்வானா என்ற இரண்டு திட்டுகளும் மோதிக்கொண்ட பகுதி உயர்ந்து இமயமலை உருவாகிவிட்டது. டெத்திஸ் நதி காணாமல் போய்விட்டது.

இப்படித்தான் வந்தது இயமலை.

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x